ads

Tuesday 16 April 2013

துரியோதனனும் வேலுப்பிள்ளை பிரபாகரனும்!!




துரியோதனன்..!

கௌரவர்களில் மூத்தவன். மகுடம் தரித்த மன்னன். பங்காளி பகை  பாண்டவர்களோடு பாகப்பிரிவினையில் வருகிறது பிரச்சனை. 

அந்த நேரத்தில் அவன் சமயோசிதமாக சிந்தித்திருந்தால், தாறுமாறான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால், தன் வாழ்நாள் முழுவதும் கௌரவம் குறையாமல் உயிர் உள்ளவரை மன்னனாகவே வாழ்ந்திருக்க முடியும். 

ஆனால் அவனது அவசரப்புத்தி, ஆழ்ந்து யோசிக்காத சுயநலம், பழிவாங்கும் உணர்வுகளுக்கு ஆட்பட்டதால் சந்தித்த இழப்புகள் ஏராளம்.  

நூறு பேராய் பிறந்தும் பெயர் சொல்ல ஒருவர் கூட இல்லமால், ஒட்டு மொத்த சகோதரர்களை  இழந்தான். 

புனிதமான உறவுகளை, ஆசான்களை, அனைத்தும் தெரிந்த பெரியோர்களை இழந்தான்.     

உலகத்தையே வெல்லும் ஆற்றல் மிகுந்த போர் தளபதிகளை இழந்தான்.

தனக்காக இறுதி மூச்சு உள்ளவரை களத்தில் நின்ற கோடான கோடி போர் வீரர்களை இழந்தான். 

கடைசியில் மகுடம் இழந்தான்,  இறுதியில் தன்னையும் தற்காத்துக் கொள்ள முடியாமல் களப்பலியாகிறான் துரியோதனன். 

வேலுப்பிள்ளை பிரபாகரனை பற்றி நினைக்கும் போது, இந்த எண்ணங்கள் வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஈழத்தில் இன்று தமிழர்கள் நிலை கேள்வி குறியாகி இருக்கிறது. வாழ்வாதாரங்கள் முற்றிலும் சீர் குலைந்த நிலையில் வாழ வழி தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.



சொந்த நாட்டிலேயே சொத்துக்களை இழந்து, அகதிகளாய் மாறிப்போன அவலம் ஒருபுறம் என்றால், நாளை வரை உயிருடன் இருப்போம் என்ற உத்திரவாதமும் எவருக்கும் இல்லை.



தமிழர்களுக்கு  இந்நிலை வருவதற்கு யாரு காரணம்?

ஈழத்தில் நடந்த யுத்தமும், ராஜபஷேயும்தான் காரணமா?

சிங்கள இனவாதமும், சிறுபான்மையர் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் மட்டுமே காரணமா?

இல்லை...இல்லவே இல்லை. இதற்க்கு பின்னால் இருப்பது வேலுப்பிள்ளை பிரபாகரன்.



இந்த வார்த்தை அவரின் தீவிர ஆதரவாளர்களுக்கு எரிச்சலை தரலாம். ஆனால் உண்மை எப்போதுமே கசக்கத்தான் செய்யும். என்ன செய்ய?

வாகன ஓட்டிகள் செய்யும் சிறு தவறு அல்லது கவனக் குறைவு பெரும் விபத்திற்கு காரணமாக மாறுகிறது.

வாழ்க்கையும் அப்படித்தான்.  தனி மனிதன் என்றில்லை..சில தலைவர்கள் எடுத்த தவறான முடிவுகள் தலை கீழாய் மாறிப்போயிருக்கிறது.

அதற்கு பிரபாகரன் சிறந்த உதாரணம்.  இல்லாத ஒருவரை பற்றி விமர்சிப்பது தர்மமல்ல.

இருப்பினும் தனி மனித தவறுகள் தான் ஈழத்தமிழர்களின் தலை விதியை மாற்றி எழுதி இருக்கிறது எனும் போது சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

ஒரு காலகட்டத்தில் இலங்கையில் இனவாத நெருப்பு ஏறிய தொடங்கிய போது, தனி ஈழம் அமைப்பதை லட்சியமாக கொண்ட பல குழுக்கள் களத்தில் இருந்தன.

அரசியல் ரீதியாக தீர்வு பெற துடிக்கும் அமிர்தலிங்கம் போன்ற மூத்த தலைவர்கள் இருந்தார்கள்.



ஆனால் இவர்கள் யாரையும் வளர விடாமல், தடுத்தது மட்டுமல்ல, களத்தில் கூட இல்லாமல் களையெடுத்த பெருமை பிரபாகரனை சாரும்.



இலங்கையில் வேரறுக்கப்பட்டது பல இயக்ககங்கள். அதன் உறுப்பினர்கள் ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.



தங்களைத் தவிர வேறு யாரும் களத்தில் இல்லை என்ற நிலை வந்தபோது துரியோதனத் தவறை துணிந்து செய்தார் பிரபாகரன்.

ராஜீவ் படுகொலை.



இந்திய அமைதிப் படை இலங்கைக்கு சென்று அமைதிப்புறாவை மட்டும் பறக்க விட்டது என்று சொல்வதிற்கில்லை. பல தவறுகள் அரங்கேறின. உரிமைகள் மீறப்பட்டன. மறுப்பதற்கில்லை.



அமைதிப்படையில் பெரும்பான்மையாக தமிழர்கள் இருந்திருந்தால் இந்த அளவிற்கு கசப்புகள் ஏற்பட்டிருக்காது என்று எண்ணத்தோன்றுகிறது.

அமைதிப் படையின் செயல்களை  ஆதரிக்க வில்லை. அவமானமாக இருக்கிறது. என்ன செய்ய முடிந்து போன விஷயம்.



ஆனால் இந்தியாவின் துணை இல்லாமல், தனி ஈழம் அமைக்க முடியாது என்பதையோ, இந்தியாவின் துணை இல்லாமல் ஈழத்தமிழர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற முடியாது என்பதையோ உணராமால் ராஜிவை படுகொலை செய்தது பிரபாகரன் செய்த வரலாற்று தவறு.

ஒற்றை குண்டில் வெடித்து சிதறியது ராஜீவ்காந்தி மட்டுமல்ல, ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும் தான்.

ஒட்டு மொத்தமாக தமிழ் நாட்டில் ஈழஆதரவு ஒரே இரவில் காணாமல் போனது.

அப்போது இந்தியா நினைத்திருந்தால் ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை கைது செய்து கொண்டு வந்திருக்க முடியும்.

அப்படி செய்திருந்தால் அந்த சூழ்நிலையில் தமிழ் நாட்டில் எந்த எதிர்ப்பும் எழுந்திருக்காது. இலங்கை கூட எந்த எதிர்ப்பும் செய்திருக்காது.

ஆனால் இந்தியா அப்படி செய்யவில்லை. இது ஈழ தமிழர்கள் மேல் இருந்த கருணை ஒரு காரணம்.

அடுத்து பொதுத் தேர்தல் வந்தது.

அதிபர் தேர்தலில் ஒரு அணியில் ராஜபசேயும், எதிர் அணியில் ரணில் விக்கரமசிங்கேயும் இருந்தார்கள்.

ரணில் தமிழர்கள் பால் அன்பு கொண்டவர். அவர்களுக்கு கௌரவமான வாழ்க்கையை ஏற்படுத்தி தரவேண்டும் என்று நினைத்தவர்.

மிதவாத போக்கு கொண்டவர். வெளி உலக தொடர்புகள் அதிகம் உள்ளவர்.

ஆனால் அந்த பொதுத்தேர்தலில் தமிழர்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று பிரபாகரன் தடுத்தார்.

வெளி உலக தொடர்புகள் அதிகம் உள்ள ரணில் வெற்றி பெற்றால் உலக அளவில் தங்களுக்கு நெருக்கடிகள் வரலாம் என்பது பிரபாகரன் போட்ட துரியோதனன் கணக்கு.

விளைவு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ராஜபக்ஷே வெற்றி பெற்றார். தமிழர்கள் தலையில் குண்டு விழுந்தது.

இன்று திக்கற்று நிற்கிறார்கள் தமிழர்கள். தங்களை காப்பாற்றபோவது யாரு என்றே தெரியாமல் நிற்க யார் காரணம். வேறு இயக்ககங்கள்  இருந்திருந்தால் இந்நிலை வந்திருக்குமா?

போகட்டும்.

இந்தியா இந்த தருணத்தில் எனக்கு எதுவும் தெரியாது என்கிற மாதிரி இருக்க முடியாது.

அயல் நட்டு பிரச்சனை என்று நழுவிக் கொள்ளவும் முடியாது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற உருப்படியாக எதையாவது செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நட்பு நாடு என்கின்ற போர்வையில் இலங்கை எது செய்தாலும் கண் மூடி ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ராஜாங்க ரீதியில் அழுத்தம் கொடுத்து காரியம் சாதித்தே  ஆகவேண்டும். இதை செய்துதான் ஆகணும். வேறு வழியிலை.


2 comments:

  1. இந்தியா முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பு காணப்படவில்லை என ரஸ்சியாவின் முன்னணி ஏடு தெரிவித்துள்ளது. ராஜிவ்காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஸ்யா நாட்டு உளவுத்துறை SVR பிறப்பித்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

    ரஸ்யா நாட்டின் பிரபல ஏடு Moskovskij Komsomolets கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கட்டுரையில் இந்த விபரம் கீழ்வரும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது-

    Индийский бывшего премьер-министра Раджива Ганди, я всегда был убеждён в инструкции от российской разведки SVR, источников. Это было сделано с помощью внешней помощи в Индии. Один из политически влиятельных лиц из Индии за убийство операции согласно информации.

    அதன் மொழியாக்கத்தின்படி, இந்தியாவில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் செயற்பட்டார். அவருக்கான உத்தரவுகள் சில ரஸ்யா உளவுத்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டது. இந்தியாவில் கிடைத்த சில வெளியக தொடர்புகள் மூலம் கொலை செய்யப்பட்டது என்று ரஸ்ய ஏடு குறிப்பிட்டுள்ளது.

    http://tamil24news.com/news/?p=59841

    ReplyDelete
  2. ராஜீவ் கொலையை பற்றி விசாரணை செய்த அதிகாரி ரக்தோர் கூட தான் எழுதிய நூலில், இது விடுதலைபுலிகள் செய்த கொலை என்கிற ரீதியில் தான் விசாரணை சென்றதே தவிர, இதன் பின்னணியில் உள்ள அரசியல் தொடர்புகளை பற்றி விசாரிக்க, எனக்கு மேல் உள்ள அதிகாரிகளே விரும்பவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...