ads

Friday 11 September 2015

வேதியனும் வேதாளமும்

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது’ என்பது பற்றி வேதாளம் கேள்வி எழுப்ப, வேதியன் அதற்கான பதிலைச் சொல்லிக் கொண்டே வருகிறான். சிறிது ஓய்வுக்குப் பின்னர் வேதாளத்தைத் தூக்கித் தோளில் போட்டுக¢கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். 

வேதியா!  விவேகானந்தர், மனிதனின் உண்மை இயல்பு பற்றி கூறியுள்ளக் கருத்துக்களை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.. இன்னும் தொடர்ந்து அவர் கூறியுள்ள கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .. சொல்வாயா?  

வேதாளம் கேட்க வேதியன் சொல்லத் தொடங்குகிறான்..

வேதாளமே, பரம்பொருள் தத்துவம் பற்றிய விவேகானந்தரின் கருத்துக்களை இப்போது நாம் பார்ப்போம்.  

“ எல்லையற்றப் பரம்பொருள் எல்லைக்கு உட்பட்டதாக மாறியது எப்படி? இக்கேள்வியே வேதாந்தத்தில் மிகவும் புரிந்து கொள்ள முடியாத கஷ்டமான கேள்வியும் அடிக்கடி கேட்கப்படுகிற கேள்வியும் ஆகும். 

பரம்பொருளானது காலம் ,இடம், நிமித்தம் எனப்படும் காரண காரியங்களுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டதன் மூலம் பிரபஞ்சமாக ஆகியிருக்கிறது. இது அத்வைத தத்துவத்தின் மையக்கருத்து ஆகும்.

பிரபஞ்சம் என்றால்   பொருளாலான உலகம் மட்டுமன்றி, மனம், ஆத்மா, என்பது போன்றவைகளும், சொர்க்கங்கள், பூமிகள் என எங்கும் பரவி இருக்கின்ற அனைத்துமே பிரபஞ்சத்திற்குள் அடங்கும். 

ஆனால் பரம்பொருள் என்பது இந்த காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டது.  வேறொன்றையும் சாராமல் தனித்து நிற்கும் தத்துவம் அது.  பரிபூரண சுதந்திரமாக இருக்கும் பரம்பொருள் தத்துவத்திற்கு எந்தப் பின்னணியும் இருக்க முடியாது.

அந்தப் பரம்பொருளை அறிய முடியாது  . அவர் நம் அறிவு நிலைக்கு மேலானவர். அதாவது நாம் அறியக்கூடியவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவரே அவர். 

ஆனால் அவர் எல்லா அறிவுக்கும் நிரந்தர சாட்சியாக இருக்கிறார். நாம் அறிவதையெல்லாம் அவர் மூலமாகத்தான் அறிய முடியும். நம் ஆன்மாவுக்கும் ஆன்மாவாக இருப்பவர் அவரே.

நம் ஆன்மாவுக்கும் ஆன்மாவாக அவரே இருப்பதால் அவரைத் தனியே வெளியேக் கொண்டுவந்து நிறுத்திப் பார்க்க முடியாது.

வேதாந்தத்திலுள்ள மிக உன்னதமான கருத்து ஒன்று இதோ..

“சுவேத கேதுவே, அவர்தான் உன்னுடைய ஆன்மாவின் உட்பொருளாக இருக்கிறார். அவரே மெய்ப்பொருள். அவரே உன் ஆன்மாவின் ஆன்மா. நீயே அவர்.” நீயே கடவுள்(தத்வமஸி)    இதுதான் பொருள்.  வேறு எப்படியும் பரம்பொருளை விளக்க முடியாது.

ஒன்றே ஆன பரம்பொருளை, மொழியாலோ, உறவாலோ உருவகப்படுத்த முயல்வது முடியாத காரியம். எல்லாவற்றிற்குள்ளும் நிலையாக இருப்பவர் அவரே ஆவார்.

நம் ஆன்மாவின் உட்பொருளாகவும், மெய்பொருளாகவும் இருப்பவரை நம்மிலிருந்து நாமே எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும்?  எனவே பரம்பொருள் என்பவர் அறியப்படுபவரோ, அறியப் படாதவரோ அல்லர். அவர் இந்த இரண்டு நிலைகளையும் விட மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்.  அவரே நம் அந்தராத்மாவாக இருப்பவர்.

ஆகவே நாம் அறிந்தோ அறியாமலோ பரம்பொருளிலேயே வாழ்ந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருப்பதால் நாம் பரம்பொருளை நம் அறிவினால் அறிய முடியாது. நாம் எதையுமே பரம்பொருளின் மூலமாகத்தான் செய்ய முடியும்.  

மாயை

பரம்பொருள் தன்னைப் பல்வேறு நாம ரூபங்களாக வெளிப்படுத்திக் கொள்கிறது என்ற கருத்தை ஆரம்பத்தில் பார்த்தோம். அதாவது காலம், இடம் , காரண காரியங்கள் என்பதற்குள் தன்னை உட்படுத்திக்கொள்வதன் மூலம். 

இந்த காலம் இடம் காரண காரியங்கள் என்பது என்ன? என்பதைப் பற்றி ஆராய்வோம். 

இங்கே இரண்டு தத்துவங்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று பரம்பொருள் இன்னொன்று மாயை.  காலம் இடம் காரண காரியங்கள் என்பது மாயை.

காலம் -  காலம் நம் மனதின் மாறுதலுக்கு ஏற்ப அதுவும் மாறிக்கொண்டே இருக்கிறது.  சில சமயங்களில் சிறிது நேரத்துக்குள்ளேயே பல வருடங்கள் வாழ்ந்ததாக கனவு காண்கிறோம். சில சமயங்களில் பல மாதங்கள் ஒரே கணத்தில் ஓடிவிட்டதாக நமக்குத் தோன்றும். காலம் என்ற கருத்தே சில சமயம் முழுவதுமாக மறைந்தே விடுகிறது. 

காலம் என்பதை தனியே நினைத்துப் பார்க்க முடியாது. நாம் இரண்டு நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்று முன்னால் நடந்தது மற்றொன்று அதைத் தொடர்ந்து நடப்பது இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து வருவது காலம். 

இடத்தின் தன்மையும் இதே போல்தான் .. இடம் என்பது என்ன என்பதை நம்மால் அறிய முடியாது. ஆனாலும் அது இருக்கிறது.  நிறம்,எல்லைகள், திசைகள் என்ற எந்த சார்புமே இல்லாத இடத்தைப் பற்றி நினைத்துப் பாருஙகள் அது முடியாது. இரண்டு எல்லைகளுக்கோ ,மூன்று பொருட்களுக்கோ உட்பட்டதாகத்தான் இடத்தை நாம் நினைக்க முடியும். வேறு ஒரு பொருளோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் இடம் என்பது இருப்பதாக நாம் சொல்ல முடியும். 

இப்படி காலமும் இடமும் இரண்டு நிகழ்ச்சிகளை சார்ந்தே இருக்கிறது. 

காரண காரியக் கருத்து காலம் இடம் இவற்றிலிருந்து பிரிக்க முடியாததாக இருக்கிறது.   காலத்துக்கும் இடத்துக்கும் இருப்பு கிடையாது. இவை இரண்டும் எல்லாவற்றையும் நிழல் போல் சூழ்ந்திருக்கின்றன. அந்த நிழல் நம் கைக்கு அகப்படாது. 

ஏனென்றால் உண்மையான இருப்பு அவைக்கு இல்லை. ஆனாலும் அவை இல்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் எல்லாமே காலம் இடம் ஆகிய இரண்டின் மூலமாகத்தான் பிரபஞ்சமாக வெளிப்படுகின்றன. 

எனவே காலம் இடம் காரண காரியம் இவற்றின் சேர்க்கையை இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாது என்றுத் தெரிகிறது.

  உதாரணத்திற்கு நாம் கடலில் உள்ள அலை ஒன்றை எடுத்துக் கொள்வோம். அலையும் கடலும் ஒன்றுதான் என்று நமக்குத் தெரியும் என்றாலும் அவற்றை அலை, கடல் என்று தனித்தனியே பிரித்துப் பார்க்கவும் முடிகிறது. இது எப்படி சாத்தியம்?  அவற்றின் உருவமும் மனதில் அவற்றைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள கருத்துமே ஆகும்.

நாம் கடலை நினைக்காமல் அலை என்ற உருவத்தை மட்டும் நினைத்துப் பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது. கடலோடு சேர்த்துத்தான் நாம் அலையைப்பற்றி நினைக்க முடியும். அலை அடங்கும் போது அதன் உருவம் கண நேரத்தில் மறைந்து விடுகிறது. ஆனாலும் நாம் கண்ட அலை உருவம் பொய்த்தோற்ற மல்ல.. அலை இருந்த வரையில் அலை உருவமும் இருந்தது. நாம் அலை உருவத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது. பார்த்தோம். 

   இதுதான் மாயை.  

ஆகவே இந்தப் பிரபஞ்சத்துக்கு அதற்கே உரித்தான தனி உருவம் இருக்கிறது. பரம்பொருளே கடல். நாமும் மற்றும், சூரியன் நட்சத்திரங்கள் போன்ற எல்லாமே அந்தக் கடலில் தோன்றும் அலைகள்தாம். அலைகளை வேறுபடுத்துவது நாம ரூபமே. 

அலை என்பது மறைந்தவுடன் அதன் உருவமும் மறைந்து கடலோடு ஒன்றிவிடுகிறது. ஒவ்வொருவனும் மாயையைக் கடந்தவுடன் மாயை மறைந்து அவன் விடுதலையடைகிறான். அதாவது தானும் பரம்பொருளே என்பதை உணர்கின்றான்.

இந்த மாயை என்கிற கால இட காரண காரியங்கள் நாம் பரம்பொருளை அடைவதற்கு ,  தடையாக இருக்கின்றன. பரம்பொருளுக்கும் நமக்கும் இடையில் திரை போட்டு விடுகின்றன. இவற்றை நாம் உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறோம். 

ஆனால் இவற்றிலிருந்து விடுபடத்தான் நம் போராடிக்  கொண்டிருக்கிறோம். 
ஆன்மிக ரீதியில் இதைப் பார்ப்போம்.  

எல்லையற்ற தத்துவத்தின் எல்லைக்குட்பட்ட வெளிப்பாடே இயற்கையாகும் அதாவது பிரபஞ்சமும் அனைத்தும் என்று பார்த்தோம். 

இந்த மாயை என்ற இயற்கை சூழலை நாம் வெற்றிக் கொள்ள,  நம் உண்மையான நிலையை அடைய முயற்சிகளை எடுத்துப் போராடுகிறோம். 
உதாரணத்திற்கு ஒழுக்கம் என்பது   என்ன? நம் உணர்வுகளை கட்டுப்படுத்துவது. 

அதாவது இயற்கையாய் எழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது. அதாவது இயற்கை நம்மீது கொள்ளும் ஆதிக்கத்தை நீக்கிக் கொள்ள நாம் எடுக்கும் முயற்சியே ஒழுக்கம் ஆகும். ஒரு கட்டத்தில் அவற்றை நாம் வென்று விட முடியும் என்பதே உண்மை. 

எல்லக்குட்பட்ட இந்த மாயை என்ற  இயற்கைச் சூழலை எப்படி நாம் வெல்வது? 

பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும் போது எல்லா உயிர்களுமே தம்மை மாற்றிக் கொள்வதன் மூலமே இயற்கையை வெல்கின்றன என்பதை அறிகிறோம்
.
ஒரு சிறு மீன் நீரிலுள்ள தன் விரோதிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள பறக்க விரும்புகிறது . அது எப்படி தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது? 

இறக்கைகளை வளர்த்து பறவையாவதன் மூலம் அது தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது. அதாவது அது நீரையோ காற்றையோ மாற்றவில்லை.  

மாற்றம் அதனிடம் உருவானது.  வெற்றி பெறுவதற்கான மாற்றம் தன்னிடத்திலேயே உருவாக வேண்டும் என்பது இதில் தெரிகிறது. ஒவ்வொருவரும் தம்மை மாற்றிக் கொள்வதன் மூலமே தீமையை வெல்ல முடியும்.

ஆகவே இயற்கையை வெற்றியடைவதற்கு அதாவது மாயையை வெற்றியடைவதற்கு இதுதான் வழி.. நம்மை நாமே முழுமையாக்கிக் கொள்வது. மாற்றம் அடைவது. 

அத்வைதத்தின்   இந்தக் கருத்துத்தான் இன்றைய பௌதிக விஞ்ஞானக் கோட்பாடுகள் மற்றும் தற்கால  ஆராய்ச்சியோடு ஒத்துப்போகின்றன. 

எல்லாப் பொருள்களும் ஒரே சக்தியின் வெளிப்பாடுகளே என்று விஞ்ஞானிகள் சொல்லும் போது,  அது உங்களுக்கு உபநிஷதங்களிலுள்ள பரம்பொருள் தத்துவத்தை நினைவுப் படுத்த வில்லையா? 

ஒரு நெருப்பு பல உருவங்களாத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதைப் போல், பரம்பொருளானது ஒவ்வொரு ஆத்மாவின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதோடு இன்னும் பல மடங்கு உயர்ந்த நிலையிலும் இருக்கிறது என்று உபநிஷதங்கள் கூறுகின்றன. 

இந்துக்கள் மனத் தத்துவ ஆராய்ச்சியின் மூலமாகவும், ஆன்மிகத் தத்துவ ஆராய்ச்சி மூலமும், அறிவு பூர்வமான தத்துவ ஆராய்ச்சி மூலமும் முன்னேறினார்கள்.

ஐரோப்பியர்கள் வெளி இயற்கையிலிருந்து ஆராய்ச்சியை ஆரம்பித்து , அத்வைதத்தின் முடிவுக்குத்தான் வந்து கொண்டிருக்கின்றனர்.

மனத்தின் மூலம் தேடுவதால் கடைசியில் அந்த ஒரே பரம்பொருள் தத்துவத்தை நாம் உணர்கிறோம். 

அந்த பரம்பொருள் ஆத்மாவிற்கு ஆத்மாவாகவும், எல்லாவற்றிற்கும் உட்பொருளாகவும், மெய்ப்பொருளாகவும், சச்சிதானந்த சொரூபமாகவும் இருக்கிறது.

எல்லாமாகவும் இருக்கும் அந்த ஒரே¢ பரம்பொருளைப்பற்றித்தான் அத்வைதம் போதிக்கிறது. 

‘ஆன்மிக முன்னேற்றம் அடையுங்கள், உண்மைத் தன்மையை உணர்ந்து அதனுடன் இரண்டறக் கலந்து ஒன்றி விடுங்கள்’ என்று கூறுகிறது.   

‘வேதாளமே, சிறிது ஓய்வுக்குப்பின் தொடர்ந்து விவேகானந்தர் கூறியுள்ள கருத்துக்களை பார்ப்போம்’

வேதியன் கூறி முடித்ததும் அவனிடமிருந்து விடுபட்ட வேதாளம் அருகிலிருந்த மரத்தின் கிளையைப்பற்றிக் கொண்டு தலை கீழாகத் தொங்க ஆரம்பித்தது.

மதிவாணன் 

soundarya lahari in tamil



இந்த சௌந்தர்ய லஹரீ பாடல்கள் கைலாய மலையில் சிவாலயத்தின் மதிற்சுவரில் எழுதப்பட்டிருந்தாக ஒரு தகவல் சொல்கிறது. இதை மேருமலையில் புஷ்பதந்தர் என்பவர் எழுதி வைததார் என்றும், அதைப் படித்த கௌடபாதர் என்ற முனிவர்  ஸ்ரீஆதிசங்கருக்கு உபதேசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

லிங்கபுராணத்தில் விநாயகர் துதியில், சௌந்தர்ய லஹரீ, மாகமேருமலையில் விநாயகப் பெருமானால் எழுபட்டது என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னொரு கதை.

   ஸ்ரீ ஆதிசங்கரர் கைலாயம் சென்றிருந்தபோது சிவபெருமானிடமிருந்து இந்த ஸௌந்தர்ய லஹரீ பாடல்களை பெற்று வந்ததாகவும், வரும் வழியில் நந்திதேவர் ஸ்ரீ ஆதிசங்கரரிடம் பாடல்களின் ஒரு பகுதியைப் பிடுங்கிக் கொள்ள எஞ்சிய முதல் பாகத்தில்  41 செய்யுட்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆதிசங்கரர்  சிவபெருமானிடம் வேண்ட, எஞ்சியவற்றை நீயே பாடிக்கொள் என்று சிவபெருமான் கூற, 59 பாக்களை  ஆதிசங்கரரே பாடி முழுமையான நூலாக்கினார்  என்று கூறப்படுகிறது. 

எப்படி இருப்பினும் இதை பாடி நூலாய் தொகுத்தவர் ஆதிசங்கரபெருமானே என்பதை எல்லோரும் பொதுவாக ஏற்றுக் கொள்கின்றனர். 

தேவி ஸ்தோத்திரங்களில் தலை சிறந்த ஸ்தோத்திரமாக கருதப்படுகிறது ஸௌந்தர்ய லஹரீ.  நமஸ்கரித்தல், ஆசி கூறுதல், சித்தாந்தை எடுத்துரைத்தல், பராக்கிரமத்தைப் புகழ்தல், பெருமைகளை விளக்குதல், பிரார்த்தனை செய்தல்  என்ற அறுவகைப்பட்ட அனைத்து லக்ஷணங்களும் ஸௌந்தர்ய லஹரியில் உள்ளன.

 1. ஆனந்த லஹரீ
             
சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதிசக்த: ப்ரபவிதும்
நசேதேவம் தேவோ நகலு குசல: ஸ்பந்திதிது- மபி
அதஸ்-த்வா மாராத்தயாம் ஹரிஹர-விரிஞச்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத- புண்ய : ப்ரபவதி

பலன்: சுபம், கார்ய ஸித்தி 

கருத்து: சிவன் உலகைப் படைக்கிறார். அதற்கான திறமை அவருக்கு வேண்டும். அவர் சக்தியுடன் சேர்ந்திருப்பதாலேயே அத்திறமை அவருக்கு கைவருகிறது. திருமால், சிவன், பிரம்மா இம்மூவர்களாலும் ஆராதிக்கப்படுகிற உன்னை வணங்கவோ, துதிக்கவோ புண்ணிம் செய்திருந்தால் மட்டுமே முடியும்.

யந்திரம்- ஸ்ரீசக்ரம், மாமேரு. தினமும் 1001 முறை 12 நாட்கள். கிழக்கு முகமாக இருந்து ஜபிக்க வேண்டும். சிவப்பு மலர்கள்- நைவேத்யம்- வெல்லம் நெய்கலவை, அன்னம்.

2.  பாத தூளி மகிமை

தனீயாம்ஸம் பாம்ஸும் தவசரண- பங்கேருஹ - பவம்
விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகோ- னவிகலம்
வஹத்யேனம் சௌரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர: ஸம்க்ஷுத்யைனம் ப்ஜதி பஸிதோத்தூளன விதிம்.

பலன்: உலகம் உன் வசம்

கருத்து: பிரம்மா உன் திருவடித் தாமரை தூசுகளிலிருந்து சிறு அணு கிடைக்கப்பெற்று அதைக் கொண்டு உலகங்களைப் படைக்கிறார். அப்படிப் படைக்கப்பட்ட உலகினை ஆதிசேஷனும்( விஷ்ணுவும்) தன் ஆயிரம் தலைகளால் தாங்கிநிற்கிறார். சிவனும் அத்துளிகளையே விபூதியாக அணிந்து கொள்கிறார்.

யந்திரம்- ஸ்ரீசக்ரம்/மகாமேரு.  பாராயணம் தினம் 1000 முறை, 45 தினங்கள். வடக்குமுகம் அமர்ந்து, குங்கும அர்ச்சனை. நைவேத்யம், தேங்காய் பழம், பால் பாயாசம்.

3. முக்தி தரும் பாதக் கமலம்

அவித்யானா- மந்தஸ்திமிர- மிஹிர- த்வீபநகரீ
ஜடானாம் சைதன்ய- ஸ்தபக- மகரந்த- ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி- குணநிகா ஜன்மஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு -வராஹடஸய பவதி

பலன்: சகல கலையும் அமையும்

கருத்து:  உன் பாதத்தூளி, அறிவிலிகளின் மன  இருளை அகற்றும் சூரியத்தீவின் நகரம் போல் ஒளிபொருந்தியது. மூடர்களுக்கு, கற்பகத் தருவிலிருந்து வழிகின்ற  அறிவெனும் தேன் போன்றது.  

ஏழைகளுக்கு நினைத்தை கொடுக்கவல்ல சிந்தாமணி  இரத்தினமாகவும், பிறவிக் கடலில் மூழகிக்கிடப்பவர்களுக்கு, பூமியை கடலிலிருந்து மீட்டு வந்த விஷ்ணுவின் வராக அவதாரத்தின் கோரைப்பற்களைப் போன்றதாகவும் இருக்கிறது. 

யந்திரம் ஸ்ரீ சக்ரம்/ மகாமேரு.தினமும்1008முறை, 45 நாட்கள்.வடகிழக்கு முகமாய் அமர்ந்து, வெள்ளைமலர்கள்.  நைவேத்யம்  உளுந்து வடை, தேன்  அன்னம், வெற்றிலை பாக்கு.

4.பாத கமலங்களின் அளவற்ற சக்தி.

த்வ- தன்ய: பாணிப்ப்யா- மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித- வராபீத்ய பிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபிச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானம்  தவ ஹி சரணாவேவ நிபுணௌ

பலன்: பயநிவர்த்தி ரோக நிவர்த்தி

கருத்து: மற்ற தேவர்கள் தங்களது இருகரங்களால் பக்தர்களுக்கு அபய வரமளிக்கின்றனர். நீ  அவ்வாறு செய்யாமல் அவர்களை காத்துக் கருணைப் புரிகிறாய்.  பக்தர்களின் வேண்டுதல்களுக்கு மேலாகவே பலனை அளிக்கிறாய். உன்னுடைய பாதங்களே பயத்திலிருந்து காக்கவும், வேண்டியதை வழங்கவும் செய்ய வல்லது.

யந்திரம் ஸ்ரீசக்ரம்/மகாமேரு. தினசரி 1000முறை.36 நாட்கள் வடகிழக்கு முகமாய் அமர்ந்து. குங்கும அர்ச்சனை. நைவேத்யம்- கரும்பு துண்டுகள், எலுமிச்சை பழச்சாறு பால், அன்னம்.
        
5.தேவி பூஜையின் மகிமை

ஹரீஸ்-த்வா- மாராத்த்யா ஜன ஸௌபாக்ய- ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப- மனயத்
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயன- லேஹ்யேன வபுஷா
முனீன- மப்- யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்

பலன்: குடும்ப ஒற்றுமை நிலவும், ¢கணவனின் அன்பு பெருகும்

கருத்து:  துதிக்கும் பக்தர்களுக்கு எல்லாவிதமான செல்வங்களையும் தந்தருளும் தேவியே, மகாவிஷ்ணு உன்னைத் துதித்து, மோகினி வடிவத்தை எடுத்து ,  சிவனையே மனம் மயங்கச் செய்தார். 

உன்னைத்  துதித்த மன்மதன் ரதியின் கண்களுக்கு மட்டும் அழகிய வடிவுடன் காட்சியளிக்கிறான். அருந்தவ முனிவர்களின் மனங்களையும் மயங்க வைக்கும் சக்திப் பெற்றுத் திகழ்கிறான்.

யந்திரம் ஸ்ரீசக்கரம்/மகாமேரு . படத்தில் உள்ள யந்திரம் செய்து கையில் கட்டிக் கொள்ள வேண்டும். தினசரி 2000 முறை 30 நாட்கள் ஐபம். கிழக்கு முகமாய் அமர்ந்து.  சிவப்பு மலர்கள், நைவேத்யம்- பாசிபருப்பு பொங்கல்  
                                                                                                                              
                                                                                                                                 தொடரும் ...


Sunday 16 August 2015

ருத்ராட்சம் உருவான கதை.

தாரகாசுரனைத் தெரியுமா?

முருக வதத்தில் முக்கிய கதாபாத்திரம். போர் முனையில் வேர் அறுந்த மரம் போல் விழுந்த பிறகு, அவன் வம்சத்தில் வந்த அம்சங்களே தாரகாஷன், கமலாஷன், விதியுன்மாலி.

மூவரும், அப்பன் அழிவுக்குக் காரணமானவர்களை எப்போது அழிப்பது என யோசிக்கலானார்கள்.

விளைவு!  கடுந்தவம்!
யாரை நோக்கி?

பிரம்மாவை நோக்கி!

ஒற்றைக்காலில் நின்னு, காற்றையே உணவாக தின்னு கடுந்தவம். வருடங்கள் பல கடந்தது.

மெய்வருத்தி செய்த தவத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது. நான்முகன் பிரம்மா, வான் மார்க்கத்தைக் கடந்து இவர்கள் முன் ஆஜரானார். 

“குழந்தைகளே உங்கள் தவத்தை மெச்சினோம். என்ன வரம் வேண்டும்?”

“ஐயனே, நரை, திரை, மூப்பில்லாத வாழ்வு, அதுவும் மரணமில்லா பெருவாழ்வு தர வேண்டும்.”

“குழந்தைகளே பிறப்பெய்த அனைத்து உயிரினத்திற்கும் இறப்பு என்பது உண்டு. அது மாற்றமில்லாதது. அதனால் அவ்வரத்தை என்னால் அளிக்க முடியாது. வேறு வரம் கேளுங்கள்.”

“ஒப்பில்லா உயர்வைப் பெற்றவரே, எமை பெற்றவரே, எங்கள் மூவருக்கும் மூன்று கோட்டைகள் வேண்டும். எண்ணிய கணமே விண்ணில் பறக்கும் ஆற்றல் அதற்கு வேண்டும். அவை ஒன்றாக இணையும் போது ஆயிரம் வருடங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 

“ஒரு வேளை எங்களுக்குக் காலன் வரும் காலமாக இருந்தால் அப்போது ஒப்பில்லா சக்தி பெற்ற ஒருவரால்தான் எங்களுக்கு மரணம் வேண்டும். இதுதான் எங்களுக்குத் தேவை.”

“சரி... தந்தோம் வரம். உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவும், இருப்பிடமான கோட்டைகளை நிர்மாணிக்கவும் அசுரர் குல சிற்பியான மயனை அனுப்பி வைக்கிறேன். 

“அவர் தங்கத்தாலான கோட்டை, வெள்ளியிலான கோட்டை, இரும்பு கோட்டை என முறையே மூன்று கோட்டைகளை உருவாக்கித் தருவார். அதில் அமர்ந்து அரசாட்சி செய்யலாம்” என வரத்தைத் தந்துவிட்டு வானுலகம் திரும்பினார் பிரம்மா.

மயனின் கை வண்ணத்தில் கோட்டைகள் உருவானது. அப்புறம் என்ன? சேட்டைகள் அரங்கேறியது. குறிப்பாக தேவர்கள் ஜாதகத்தில் எல்லாம் ஒரே சமயத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச் சனி என்று ஒட்டுமொத்த சனியின் பார்வை பட்ட மாதிரி கெட்ட காலம் கிட்டே வந்தது.

தேவர்கள் முதலில் செய்வதறியாது திகைத்தார்கள். சாகா வரம் பெற்றிருந்தும், சாவின் விளிம்புவரை சென்று திரும்பினார்கள். அல்லலுறும் வாழ்க்கைக்கு அறவே பழக்கப்படாத தேவர்களுக்கு, அரக்கர் அணியை அழிப்பதற்கான யுக்தி என்ன என்று திட்டம் தீட்டினார்கள்.

அது மூவர்களில் ஒருவரான முக்கண்ணன், சிவபெருமானே சிறந்தவர். அவரால்தான் மூவர் அணியின் கொட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என எண்ணினார்கள்.

எண்ணம் முடிவானது, முடிவு செயலானது. நேராக கைலாய பயணம். நிஷ்டையில் இருந்த சிவனுக்கு முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்கள். தாங்கள் வந்ததின் நோக்கத்தைச் சொன்னார்கள்.

நித்திரை கலைந்த சிவன் சித்திரை மாதத்து வெயில் மாதிரி சூடானார். தீமைகளை அழிப்பதும், தீயவர்களை ஒழிப்பதும், இறையருளின் ஒரு கடமை என்பதை உணர்ந்தார்.

அதோடு அரக்கர்களின் அழிவுக்கான அத்தியாயம் ஆரம்பமாகிவிட்டது என்பதும் அவருக்குத் தெரியும். 

அரக்கர்கள் யார்? பலம் பெற்றவர்கள் என்பது இருக்கட்டும், வரம் பெற்றவர்கள். வரம் பெறும் வரலாற்றை ஆராய்ந்தால், சாகா வரத்திற்குச் சமமாக வரத்தைப் பெற்றிருப்பார்கள். அதனால் பலம் பெற்ற அரக்கர்களை வதம் செய்ய முறையான ஆயுத பிரயோகமே சிறந்தது என நினைத்தார்.

உடன் தியானத்தில் ஆழ்ந்தார். 

அதுவும் எப்படி? 

கண்களை மூடாமல் உற்று நோக்கியபடியே.

எத்தனை ஆண்டுகள்?

ஆயிரம் ஆண்டுகள்.

தியானத்தின் இறுதியில் உருவானதுதான் அகோராஸ்திரம். 

அதன் பின்புதான் அரக்கர்களின் அழிவுக்கு வித்திட்டது என்பது புராணக் கதை. ஆனால், அப்படி ஆயிரம் ஆண்டுகள் தவத்தின் பலனால் சிவனின் கண்களிலிருந்து சிந்திய கண்ணீர்த் துளிதான் ருத்ராட்ச மரங்களுக்கு வித்திட்டது.

மூன்று கண்ணில் இருந்து மூன்று துளி கண்ணீர். இதுதான் ருத்ராட்சம் உருவான கதை.

alangudi guru





ஓம் ப்ரும் பிரகஸ்பதையே நமஹா  

Tuesday 28 July 2015

ரசமணி இரகசியங்கள்

சித்தர்கள் என்ற சொல்லைக் கேட்டாலே மனதில் சிலிர்ப்புத் தோன்றும். ஆண்டவனுக்கு நிகரானவர்கள், அஷ்டமா சித்திகளை ஆடவல்லவர்கள். காடுகளிலும், மலைகளிலும் மறைந்து வாழ்ந்தாலும் மனித இனத்திற்காக மகத்தான மருத்துவ முறையை கண்டறிந்தவர்கள். 

அதுதான் சித்தர்கள் கண்டறிந்த சித்த வைத்தியம். சிவபெருமானால் சித்தர்களுக்கு அருளப்பட்டதுதான் சித்தவைத்தியம்.

வெறும் வைத்தித்தோடு நில்லாமல் யோகம், ஞானம் மார்க்கத்திலும் சிறந்தவர்களாக திகழ்ந்தார்கள். இவர்கள் கண்டறிந்த உலோகமாற்று இன்று வரை யாராலும் அவிழ்க்க முடியாத பரம ரகசியம்.  மிக சாதாரண உலோகங்களை தங்கங்களாக மாற்றும் வித்தை. இதை ரசவாதம் என்பார்கள்.

தண்ணூரல் அற்று விட்டால் தாமிரமும் தங்கமாகும் என்கிறார் ஒரு சித்தர். அதாவது தாமிரம் என்கிற செம்பில் இயற்கையாக இருக்கும் பச்சை நிற களிம்பை நீக்கி விட்டால், செம்பு தங்கமாக ஜொலிக்கும்.  

அதற்கு கூத்தன் குதம்பை சாற்றில் 9 முறை உருக்கி ஊற்றினால் செம்பு தங்கமாகும் என்பது அவர்கள் கண்டுபிடிப்பு.  ஆனால் அந்த கூத்தன் குதம்பை எது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புதான் இரசமணி. சித்தர்கள் ஒரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு செல்ல இரசக்குளிகை என்னும் இரசமணியை பயன்படுத்தினார்களாம்.  

முறையாக செய்யப்பட்ட இரசமணியை மந்திர ஜெபயங்கள் உருவேற்றி வைத்திருப்பார்கள்.  வேறிடம் செல்ல நினைக்கும் போது, இந்த இரசமணியை வாயில் போட்டுக் கொண்டால் காற்றில் பறக்கும் சக்தி அவர்களுக்கு வந்துவிடும். இந்த முறையில்தான் போகர் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு சென்றாக கோரக்க சித்தர் சொல்கிறார்.

மந்திர சித்திபெற நாம் மகான்கள் அல்ல, யோகிகளோ, ஞானிகளோ அல்ல. சித்தர்களும் அல்ல. சாதாரண மனிதர்கள். பந்தபாசம் அற்றவர்களுக்கும், பணத்தாசை இல்லாதவர்களுக்கும் மட்டுமே மந்திர சித்தி கிடைக்கும். ஆனால் மருத்துவப் பயன்கள் எண்ணில் அடங்கா.

மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது. இம்மூன்றும் சமமாக இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த சமநிலை கெடும்பபோது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

வாதம் என்பது நம் உடல் வளர்ச்சிக்கு உரிய வாயு. பித்தம் என்பது உடல் நம் உடலில் தங்கி இருப்பதற்கு உரிய வெப்பத்தை தருவது, கபம் என்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவது.  இம் மூன்றும் கூடினாலும், குறைந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்டும்.

அந்த வகையில் வாதம் கூடி குறைந்தால் 1482 வியாதிகளும், பித்தம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும், கபம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும் தோன்றுமாம். இதை சமநிலைப்படுவதுதான் இரசமணி.

இரசமணி அணிந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும்.

இரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த இரசமணிக்கு உண்டு.

உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு இரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

இரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் உள்ளொளி தூண்டப்பட்டு முகம் பிரகாசிக்கிறது. சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.

விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு.

பேய், பிசாசு, காத்து, கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.

செய்வினை கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் இரசமணியை பயன்படும்.

நியாயமான வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும்.

வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை இரசமணிக்கு நிச்சயம் உண்டு.

ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் இரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
இப்படி இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திரவ நிலையில் இருக்கும் பாதரசத்தை மூலிகை சாறுகளால் சுத்தி செய்து, அதே மூலிகை சாற்றால் திடப் பொருளாக மாற்றி, மருத்துவ குணமாகக்கி அணிந்து கொள்வதுதான் இரசமணி.

இரமணியை வைத்துக் கொண்டு அஷ்டமா சித்துக்களும் ஆடலாம் என்பது சித்தர்கள் வாக்கு.  ஆனால் அந்த சூட்சும திறவுகோலை அவர்கள் விளக்கவில்லை. விளக்கியவைகளும் புரியும் நிலையில் இல்லை. ஒருவேளை கலியுகத்திற்கு இது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்.

நமக்கு அஷ்டமா சித்திகள் கை கூடா விட்டாலும் ஆரோக்கியம் கூடினால், நோயற்ற வாழ்வு அமைந்து விட்டால், எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டால் போதும்.  அதற்கு இந்த இரசமணிகள் பெரிதும் உதவுகிறது.



Blood Pressure

 இருதயம் இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது என்று நம்மில் பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் இருதயம் ரத்தத்தைச் சுத்தம் செய்வது கிடையாது.   

நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜைகள் போன்ற உறுப்புக்களே இரத்தத்தை சுத்தம் செய்கின்றன.

அதே போல் இரத்தத்தை உருவாக்குகின்ற  உறுப்பு எலும்பு மஜ்ஜைகள். 

இரத்தத்தை ஒரு ரயில் போல் கற்பனை செய்து கொண்டால், உடலிலுள்ள முக்கிய உறுப்புக்களை ரயில் நிலையங்கள் என்று கொள்ளலாம்.  

ரத்தம் என்ற ரயில் இருதயம் என்ற இடத்தில் ஆரம்பித்து  உடல் முழுவதும் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்கும் உள்ளேயும் சென்று வெளியே வரும். 

ரயில் சில ஸ்டேஷன்களில் சில   பயணிகள் ஏறுவார்கள், சில ஸ்டேஷன்களில் சில பயணிகள் இறங்குவார்கள். அதே போல் உடலில் இருக்கும் உறுப்புகள் என்ற ஸ்டேஷன்களிலிருந்து சில பொருட்கள் ஏறும் சில பொருட்கள் இறங்கும். 

இரத்த அழுத்தம் என்றால் என்ன?

நம் உடல் வேலைசெய்யும் போது உடலிலுள்ள செல்கள் இரத்தத்தில் உள்ள சக்தியை எடுத்துக் கொள்கின்றன. 

செல்களை குழந்தையாகவும் இருதயத்தை இரத்தமாகவும் கற்பனை செய்யுங்கள். எத்தனை குழந்தைகள் சாப்பிடுகிறதோ அத்தனை பி.பி. உங்களுக்கு அதிகமாகும்.  

நீங்கள் உங்கள் இரண்டு கைகளையும் மேலேயும் கீழேயும் ஆட்டுங்கள். உங்கள் பி.பி ஏற்கனவே இருந்ததைவிட அதிகரிக்கிறதா குறைகிறதா? அதிகமாகிறது அல்லவா?  ஏன் ? இரண்டு கைகளிலுள்ள அனைத்து செல்களும் இரத்தத்திலுள்ள பொருட்களை சாப்பிடுவதால் இருதயம்  வேகமாக அந்த இடங்களுக்கு இரத்தத்தை அனுப்பி அதிகமாக உணவு விநியோகம் செய்கிறது.

நீங்கள் வேகமாக ஓடினால் பி.பி அதிகமாகிறதா குறைகிறதா?  வேகமாக ஓடும் போது யாராக இருந்தாலும் அவர்களுக்கு பி.பி . அதிகமாகத்தான் இருக்கும். 

ஹை பி.பியை நோய் என்று சொல்கிறார்களே, உலகத்தில் யாரும் வேகமாக ஒடக்கூடாதா? பி.பி நார்மலாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பது பொதுவான கருத்து. ஒரு நாய் துரத்தும் போது பி. பி. நார்மலாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்து மெதுவாக ஓடினால் நாய் உங்களைக் கடித்து விடும். நாய் துரத்தும் போது பி.பி யை நார்மலாக வைத்துக் கொண்டிருக்க முடியாது.

இரத்த அழுத்தம் நார்மலாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான். 

ஒலிம்பிக் போட்டியில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது. ஏனென்றால் எந்த ஒரு விளையாட்டிற்குச் சென்றாலும் பி.பி அதிகரிக்கவேச் செய்யும். 

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் பி.பி நார்மலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  

குறைந்த இரத்த அழுத்தம்

ஒரு மணிநேரம் அசைவின்றி தியானத்தில் அமருங்கள்.  அப்போது ரத்த அழுத்தத்தைச் சோதித்துப் பாருங்கள். இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்திருக்கும். உடனே லோ பிரஸ்ஸர் என்று சொல்லிவிட முடியுமா?  

எனவே குறைந்த இரத்த அழுத்தம் என்பது ஒரு நோயே கிடையாது. குறைந்த இரத்த அழுத்தம் ஒரு நோய் என்றால் யாரும் தியானம் செய்யக் கூடாது.

தியானத்தில் நமக்கு பல அதிசய சக்திகள் கிடைக்கிறது என்கிறார்கள். குறைந்த இரத்த அழுத்தம் நோய் என்றால் தியானம் செய்யும் போது எப்படி ஆற்றல் கிடைக்கும். தியானம் முடிந்தவுடன் கைகால்களை மேலும் கீழும் ஆட்டுங்கள். அப்போது இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. 

நம் உடலுக்கு எப்போழுது எவ்வளவு இரத்த அழுத்தம் வேண்டுமோ அதற்குத் தகுந்தவாறே உடல் அதை அதிகப்படுத்தியோ  குறைத்துக் கொள்ளவோ செய்கிறது.  

சார், இதெல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆனால் நான் ஓடவேயில்லை.. வீட்டில் உட்கார்ந்திருக்கும் போதே எனக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறதே இதற்கு காரணம் என்ன? நான் வேலை செய்து கொண்டிருந்தேன் அப்போது எனக்கு லோ பிரஷர் வந்து தலை சுற்றி விட்டது .. இதற்கெல்லாம் என்ன சொல்கிறீர்கள் ? என்று நீங்கள் கேட்கலாம்..    

நம் உடலுக்கு வேலை கொடுக்கும் போது, அனைத்து செல்களும் வேலை செய்யும் பொழுது அனைத்து செல்களும் சாப்பிடும்பொழுது அல்லது செல்களுக்கு நோய் வரும்பொழுது, தன் நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்கும், இயக்க சக்தி அதிகரிப்பதற்கும், இரத்த அழுத்தம் அதிகமாகிறது. எப்போழுது நம் உடலிலுள்ள செல்களுக்கு உணவு தேவையில்லையோ அப்போது பி.பி குறைவாகும். 

 ஒரு செல்லுக்கு நோய் வந்தால் நான்கு விசயங்களைக் கேட்கும்
.
1. இரத்த அழுத்தம்  2. சர்க்கரை. 3. ஆக்ஸிஜன் 4. நோயைக் குணப்படுத்த தேவையான தாதுப் பொருளும் வைட்டமின்களும்.

இந்த 4பொருட்கள் ஒரு செல்லுக்குள் நுழைந்தால் அந்த செல்லுக்கு எப்பேற்பட்ட நோயாக இருந்தாலும் அது தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும். ஒரு செல்லுக்கு நோய் வந்தால் முதலில் அது கேட்பது பி.பி.

 ஏனென்றால் இரத்த அழுத்தம் அதிகமானால்தான் அதற்கு பொருள் வேகமாக வந்து சேர்ந்து சாப்பிட முடியும். அப்போதுதான் நோயைக் குணப்படுத்த முடியும்.  10000 செல்களுக்கு நோய் வந்துவிட்டால் 10000 செல்களும் முதலில் பி.பியைக் கேட்கும். 

பி. பி அதிகமாகும். 10000 செல்களும் தங்கள் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அரைமணியோ, ஒரு மணி நேரமோ, நான்கு மணி நேரமோ தேவைப்படலாம். இவ்வளவு நேரமும் பி.பி அதிகமாகத்தான் இருக்கும். பி.பி நார்மலாக இருந்தால் நோயைக் குணப்படுத்த முடியாது. 

 யாருடைய உடலில் நாம் ஏற்கனவே சொன்னது போல் 1 இரத்தத்திலுள்ள பொருள்களின் தரம். 2 பொருள்களின் அளவு, 3 இரத்தத்தின் அளவு, 4 மனது , 5 உடல் அறிவு  இந்த ஐந்து விசயங்களும் ஒழுங்காக இருக்கிறதோ அவர்களுடைய பி.பி அதிகரிக்கும், 

நோய்கள் குணமாகும், பின்பு பி.பி நார்மலுக்கு வந்து விடும். மேலே சொன்ன பொருட்களில் ஒன்றோ இரண்டோ சரியில்லை என்றால் நம் உடலில் உள்ள நோய்களை குணப்படுத்த முடியாது.. 

அப்படி ஒரு செல் குணமாகாமல் தவிக்கும் போது பி.பியைக் கேட்டுக் கொண்டே இருக்கும்.   இரத்தத்தின் அளவு குறைவானாலும், மனம் கெட்டுப்போனாலும், உடலின் அறிவு கெட்டுபோனாலும் பி.பி அதிகரித்த நிலையிலேயே இருக்கும்.  

  நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்துவிட்டது . அதைக் குணப்படுத்த இயலாமல் தவிக்கிறது என்பதை உணரவேண்டும்.   இரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது.. இருதயம் கோளாறாகி விட்டது என்று தவறாக நினைக்கக் கூடாது. 

மேலே சொன்ன ஐந்து காரணங்களை சரி செய்வதன் மூலம் உடலிலுள்ள செல்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து நோயைக் குணப்படுத்தி, பி.பியைக் குறைக்க முடியும் இதுவே சரியான தீர்வு.  

  உடலிலுள்ள செல்களுக்கு நோய் ஏற்பட்டு அதை குணப்படுத்த தேவையான பொருட்கள் இரத்தத்தில் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது இல்லாமல் போயிருந்தாலோ பி.பி அதிகரிப்பது உயர் பி.பி என்று பார்த்தோம். 

அதே போல் திசுக்களாலான இருதயத்திற்கும் செல்கள் உண்டு. இருதயத்திலுள்ள செல்கள்  சாப்பிடக்கூடிய பொருள் கெட்டுப்போயிருந்தாலோ,  அல்லது இல்லாமல் போயிருந்தாலோ இருதய செல்கள் பாதிக்கும். 

இதைக் குறை இரத்த அழுத்தம் என்கிறோம்.  எனவே உயர் பி.பி என்பது, குறை பி.பி என்பதும் இருதய சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, இரத்தத்திலுள்ள பொருட்கள் சம்பந்தப்பட்ட நோய்.  குறிப்பாக மேலே சொல்லப்பட்ட ஐந்து பொருட்கள் சம்பந்தப்பட்ட நோய். எனவே அந்தப் பொருட்களை சரிப்படுத்திக் கொண்டால் பி.பி நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். 

மற்றபடி மருத்துவரிடம் சென்று மாத்திரை வாங்கிப் போட்டால் அது நோயைக் குணப்படுத்துவதில்லை.

பி.பி அளவை கண்ட்ரோல் மட்டுமே செய்கிறது. சில நாட்களில் நாம் சாப்பிடும் மருந்துகளின் டோஸ் மட்டுமே அதிகரிக்கிறது. நோய் குணமாவதில்லை.    

வாழ்க்கை முழுவதும் மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். நாம் செல்களை குணப்படுத்திக் கொண்டால்தான் நோயை விட்டு விலக முடியும். 

 பி.பி மாத்திரை என்பது ஆபரேஷன் மற்றும் ஆபத்துக் காலத்தில் பி.பி யை ஒழுங்காக வைத்துக் கொள்ள கண்டுபிடிக்கப்பட்டதுதான். மருந்து மாத்திரை களை உற்பத்தி செய்யும் கம்பெனிகள் விற்பனையை அதிகப்படுத்தி தாங்கள் லாபம் சம்பாதிக்க இரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் மருந்து என்று கூறி இதை மக்களை நம்பவைத்து விற்றுக் கொண்டிருக்கின்றனர்.  உலகில் இரத்த அழுத்தம் என்று நோயும் கிடையாது, அதைக் குணப்படுத்தும் அவசியமும் இல்லை.

நம் கடைபிடிக்கிற ஐந்து விசயங்கள் மூலம் உடலில் 300 கோடி செல்கள் ஒரு நிமிடத்தில் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கின்றன. இந்த ஐந்து விசயங்கள் செல்களிலுள்ள நோய்களைக் குணப்படுத்துகின்றன. எந்த ஒரு மருந்தும் மாத்திரையும் இன்றி ஐந்து விசயங்களை ஒழுங்குப்படுத்துவன் மூலம் 4 மாதத்தில் பி. பி யை ஒழுங்குப் படுத்த முடியும். 

ஏற்கனவே சாப்பிடும் பி.பி மாத்திரையின் அளவை படிப்படியாக குறைத்துக் கொண்டு  வந்து 4வது மாதத்திலிருந்து பி.பி மாத்திரையின் அவசியமே இல்லாமல் செய்து விடலாம்.  

 ஹீலர் பாஸ்கர் 

Sunday 26 July 2015

முகூர்த்த நாள்

திருமணத்திற்கு ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் மட்டும் போதாது. பல்வேறு விஷயங்களை அலசி ஆராய வேண்டியிருக்கிறது.  

அதில் ஒன்றுதான் முகூர்த்தம்.  பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் சுபமுகூர்த்த நாட்களை தவிர்த்து, அவரவர் வசதிக்கு ஏற்ற மாதிரியான நாட்களை தேர்வு செய்கிறார்கள்.

இந்த தேர்வுதான் பல சமயம் தவறாகி திருமண வாழ்க்கை கசப்பில் முடிய காரணமாக அமைந்து விடுகிறது. இதில் அதிகம் படித்தவர்கள்தான் அலட்சியம் காட்டுகிறார்கள்.  

என்ன பொருத்தம். மனசுதான் காரணம் என்று ஜோதிடத்தை புறம் தள்ளி நடந்த திருமணங்கள் கோர்ட் படியில் நிற்பதை பார்க்க முடிகிறது.

 ஒரு ஜாதகனுக்கு அமையும் திருமணமோ, மறுமணமோ அதைப் பற்றிய செய்திகள் அனைத்து ஜோதிட நூல்களிலும் உள்ளது. ஆனாலும் சுக்கிர நாடி என்ற நூலில் இதுபற்றி அதிகம் கூறப்பட்டிருக்கிறது. திருமண சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் சுக்கிரநாடிதான் அடிப்படை நூலாகும். 

ஆணோ பெண்ணோ ஒருவரின் திருமணத்தைப் பற்றியும், வாழ்க்கைத் துணைப் பற்றியும் சொல்வது சுக்கிரன். மேலும் அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் 7ஆம் இடம் வாழ்க்கைத் துணைக்கான இடம்.  

ஏழிற்குரிய கிரகம் எத்தனை கிரகங்களுடன் சேர்ந்திருக்குமோ அத்தனை தாரம் அவனுக்கு என்று சொல்லப்படுகிறது. இதை நேரிடையாக திருமணம் என்று கொள்ளாமல், இன்றைய காலகட்டத்திற்கு காதல் என்று சொல்லாம்.

ஜோதிட ரீதியாக பொருத்தம் பார்த்து செய்யப்படும் திருமணங்கள் கூட மறுதார யோகத்திற்கு வழிவகுத்து விடுகிறது.  இதற்கு ஜாதிடத்தின் மீது பழி போட முடியாது. திருமணம் நடக்கக்கூடிய நாளானது சரியான முகூர்த்தத்தில் அமையா விட்டால் இரண்டாவது தாலி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ஏழாம் இடத்தில் வக்கிரம் பெற்ற கிரகங்கள் அமர்ந்திருந்தால் திருமண வாழ்க்கையில் திருப்தியற்ற நிலை ஏற்பட்டு பிரிவுக்கு வழிவகுத்து விடுகின்றன.

ஐந்தாம் அதிபதி ஏழாம் அதிபதி பரிவர்த்தனை பெற்றிருந்தால் இரண்டாம் திருமணத்திற்கு வழி வகுக்கும்.

சந்திரன் சுக்கிரன் சேர்க்கை பெற்றால் களத்திர தோஷத்தை தரும்.

ஏழாம் இடத்தில் கேது அமர்ந்து, கேது தசையோ, கேது புத்தியோ நடப்பில் இருந்தால் கணவன் மனைவி  திடீர் விபத்தில் மரணமடைதல், கருத்து வேறுபாட்டால் பிரிதல் போன்றவை நிகழும்.  

ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் இரண்டாம் தாரம் சாதாரணமாகிவிட்டது. ஏனெனனில் இப்போதெல்லாம் களத்ர தோஷத்துடன்தான் நிறைய பிள்ளைகள் பிறக்கிறார்கள்.

அதோடு ஒருவருக்கு இரண்டு தாரங்கள் அமையும் என்ற அடிப்படை விதி இருந்தால், அது அமைந்து விடுகிறது. என்னதான் பொருத்த கணிதங்கள் செய்தாலும் அதையும் மீறி நடப்பதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது. இதற்கு இறைவனை தொழுது, பரிகாரம் தேடுவதுதான் கடைசி வழி.

காளிதாசர்


உஜ்ஜயினி நகரில் உயர்குலத்தில் பிறந்த ஒரு சிறுவன், சூழ்நிலை காரணமாக ஆடுமேய்ப்பவர் இல்லத்தில் வளர்ந்தான். பெரியவன் ஆனதும், அவனும் ஆடு மேய்க்கும் தொழிலையே செய்தான். 

அவன் வாழ்ந்த ஊரில் வசித்த ஒரு ஆசிரியரிடம் ஒரு இளவரசி படித்தாள். அரண்மனை வாழ்வு தந்த ஆணவத்தால், அவள் ஆசிரியரையே மதிக்கவில்லை. 

இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர், அவளுக்கு தகுந்த பாடம் கற்பிப்பதற்காக, ஆடு மேய்க்கும் இளைஞனுக்கு அவளை மணம் முடிக்க ஏற்பாடு செய்துவிட்டார்.

இளவரசி கலங்கவில்லை. அவள் காளி பக்தை, மகாகாளியிடம் தன் ஆணவத்துக்கு மன்னிப்பு கேட்ட அவள், தன் கணவனை மிகச்சிறந்த அறிவாளியாக்க வேண்டி விரதமிருந்தாள். 

தன் கணவனுக்கு காளி மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தாள். அவனும் அம்மந்திரத்தைச் சொல்லி காளியின் நேரடி தரிசனம் பெற்றான். அவனை உலகம் போற்றும் புலவராக்கினாள் காளிதேவி. அவரே மகாகவி காளிதாசர்.

அதன்பிறகு காளிதாசர் இலக்கியம், தத்துவம் , ஆயுர்வேதம் , இதிகாசம் , புராணங்கள் , ஜோதிடம் , பூகோளம் எல்லாவற்றையும் படித்து அறிவாளியானார். 

காளிதாசர் வடஇந்தியா முழுதும் சுற்றினார் . காளிதாசர் ஏசுநாதர் பிறப்பதற்கு முன்பு 150 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார் என்று ஒருசில வரலாறு குறிப்பிடுகிறது .

மால்விகாமித்ரா, விக்ரமவர்ஷியம், அபிக்யான் சாகுந்தலம் , குமாரசம்பவம், ரகுவம்சம், மேகதூதம், ருதுசம்ஹாரம் ஆகிய காவியங்களையும் காளிதாசர் இயற்றினார். அவர் இயற்றிய ஒரே ஜோதிட நூல் உத்திரகாலாமிர்தம்.

கவி காளிதாசர் பற்றி ஒரு சுவையான கதை!

பரம முட்டாளும், ஏழையுமான ஒருவன் ஒரு நாள் காளிதாசரிடம் வந்து, ஐயா, நான் மிகவும் ஏழை. எப்படியாவது போஜராஜனிடமிருந்து பொருளுதவி கிடைக்கத் தாங்கள் உதவ வேண்டும் என வேண்டினான்.

காளிதாசர் மனமிரங்கி, நாளை காலையில் அரசவைக்கு, நான் சென்ற பிறகு நீங்கள் வாருங்கள். ஆனால் நீங்கள் அங்கு எதுவுமே பேசக் கூடாது என்றார். அவனும் சம்மதித்தான்.

காளிதாசர் சென்றதும், அவரிடம் பொறாமை கொண்ட சிலர், அந்த முட்டாளை அழைத்து, நீ மன்னனைப் பார்க்க வெறும் கையுடன் செல்லாதே, இரண்டு கொள்ளிக்கட்டைகளை எடுத்துச் செல். அவையில் மன்னன் முன்பு, அந்தக் கொள்ளிக்கட்டைகளை வைத்துவிட்டு நில்” என்றனர்

அந்த முட்டாள் இதற்கும் சம்மதித்தான்.  மறுநாள் அரசவைக்கு, காளிதாசர் சற்றுத் தாமதமாகச் சென்றார். தாமதத்திற்கான காரணத்தை மன்னர் கேட்டார்.

அரசே, இன்று என் குரு வந்திருந்தார். அவருக்குப் பணிவிடைகளைச் செய்துவிட்டு வரத் தாமதமாயிற்று. என் குருவும் இன்னும் சற்று நேரத்தில் இங்கு வருவார். அவர் இன்று மௌன விரதம். எதுவுமே பேசமாட்டார்” என்றார்.

சிறிது நேரத்தில் அந்த முட்டாள் இரண்டு கைகளிலும் கொள்ளிக்கட்டைகளுடன் சபைக்குள் நுழைந்து அரசன் முன்பு அவற்றை வைத்துவிட்டுப் பேசாது நின்றான்.  

அவையில் அனைவரும் இதனைப் பார்த்து திகைத்தனர்! அரசன் காளிதாசரைப் பார்த்தார். கவிஞருக்கு இது விரோதிகளின் சூழ்ச்சி என்பது புரிந்தது. உடனே சமயோசிதமாகத் ‘தனது குருவின்’ செயலுக்கு விளக்கமளித்து ஒரு சுலோகத்தைக் கூறினார்.

‘தக்தம் காண்டவமர்ஜுநேந து வ்ருதா திவ்யைர் த்ருமைர் பூஷிதம் தக்தா வாயுஸுதேந ஹேமரசிதா லங்கா வ்ருதா ஸ்வர்ணபூ: |
தக்தஸ் ஸர்வஸுகாஸ்பதஸ் ஸ மததோ ஹா ஹா வ்ருதா சம்புநா, தாரித்ர்யம் ஜநதாபகம் புவி புந: கேநாபி நோ த ஹ்யதே ||

அழகிய மரங்கள் நிறைந்த காண்டவ வனத்தை அர்ஜுனன் எரித்தான். பொன்மயமான இலங்கையை அனுமன் எரித்தான். இன்பங்களைத் தரும் மன்மதனை பரமசிவன் எரித்தார்.  

இவை அத்தனையும் வீண். இவற்றால் யாருக்கு என்ன பயன்? மக்களை அல்லும் பகலும் வாட்டும் வறுமையை இதுவரை யாரும் எரிக்கவில்லையே?
இதனைத் தங்களால்தான் அறவே எரித்துச் சாம்பலாக்க முடியும் என்பதைக் காட்டத்தான் எனது குருநாதர், கொள்ளிக் கட்டைகளைக் கொண்டு வந்திருக்கிறார்’ என்றார் கவி காளிதாசன்!

image link weeklyblitz.net

விதியை வெல்ல முடியுமா?

பன்நெடும் காலமாக பலரால் தொடுக்கப்படும் கேள்விதான் இது.  முடியும் என்கிறார்கள் ஒரு சாரார்.  முடியும் என்பதற்கு பின்னால் முயற்சி வேண்டும் என்பது அவர்கள் கூற்று.

முடியாது என்கிறார்கள் மறு சாரார். ஊழ்வினை, பூர்வபுண்ணியம் என்பதை தங்கள் தரப்பு வாதத்திற்கு துணைக் அழைக்கிறார்கள். 

பிறப்பின் போதே அமர்ந்த கிரகங்கள் வாழ்க்கையை வழிநடத்தி செல்கின்றன. எது எப்போது நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மாணிக்கப்பட்ட ஒன்று என்பது எதிர் தரப்பு வாதம்.

என்றாலும் கிரக பலன்களை சொல்ல வந்த ஞானிகள் பரிகாரத்திற்கும் பக்கம் ஒதுக்கியதை மறுக்க முடியாது.  

ஆரம்பம் ஒன்று இருந்தால் அதற்கு எதிர் முனையில் முடிவு ஒன்று இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த வகையில் நமையாளும் நவக்கிரகங்கள் நம்மை பாதிக்கும் போது, அதில் இருந்து மீள சொல்லப்பட்ட மார்க்கம்தான் பரிகாரம்.

வியாதி வருவது விதி என்று எடுத்துக் கொண்டால், மருந்து உண்டு நிவாரணம் தேடுவது விதியை வெல்லும் வழி. விதியை வெல்லும் வழியை இறைவழிபாட்டின் மூலமும், சிலசமயம் மருந்துகளின் துணையோடும் வெல்ல முயன்றிருக்கிறது மனித இனம். அதாவது நம் முன்னோர்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். மனிதனுக்கு தேவையான 16 பேறுகளில் ஆரோக்கியமும் ஒன்று.  அதனால்தான்  

கலையாத கல்வியும், குறையாத வயதுமோர் 
கபடு வாராத நட்பும், கன்றாத வளமையுங் 
குன்றாத இளமையும், கழுபிணி யிலாத உடலும் 
சலியாத மனமும், அன்பகலாத மனைவியும் 
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும் 
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும் 
தொலையாத நிதியமும் என்று அம்பிகையையிடம் கேட்கும் அபிராமிபட்டரின் வேண்டுதலில் கழுபினியிலாத உடலும் என்ற வார்த்தை இடம் பெறுகிறது. 

இந்த ஆரோக்கியத்தை தரவல்லவர் தன்வந்திரிபகவான். கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு மகாலக்ஷ்மி, வீரத்திற்கு பார்வதி என்று சொல்வது போல், மருத்துவ கடவுள் தன்வந்திரி பகவான். 

பாற்கடலில் அவரித்த பார்கவியோடு தோன்றியவர். இறப்பே இல்லாத அமிர்தத்தோடு அவதரித்தவர். நோய்க்கு மருதுண்ணும் போது, தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்துண்டால், வெகுவிரைவில் நோய் குணமாகும்.

அதுமட்டுமல்ல, மருந்துண்ணவும் நேரம் இருக்கிறது. மனித இனத்திற்கு மகான்கள் கொடுத்த மகத்தான கொடைதான் பஞ்சாங்கம். அது வெறும் நல்லநேரம், கெட்ட நேரத்தை சொல்வதோடு நின்று விடவில்லை, இந்த காலக்கணிதத்தின் வாயிலாக சகலமும் அறியலாம்.  

அந்த ஆழ்கடலில் இருந்து நாம் எடுக்க நினைக்கும் முத்து அமிர்தகடிகை அல்லது அமிர்த நாழிகை. குறிப்பாக சொல்லப் போனால் வியாதிக்கு மருந்துண்ணும் நேரம்.  இதை சற்று விளக்கமாக பார்ப்போம். 

மொத்தம் இருப்பது 27 நட்சத்திரங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு நட்சத்திரம் வீதம் உதயமாகிறது. ஒரு நட்சத்திரம் நாள் ஒன்றுக்கு தோராயமாக 60 நாழிகைக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நடப்பில் இருக்கும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு நாளின் துவக்கம் என்பது சூரிய உதயத்தில் இருந்து தொடங்குகிறது.

அந்த வகையில் அமிர்த நாழிகையை கணக்கிட அன்றைய சூரிய உதயம் தெரிந்திருக்க வேண்டும். அதில் இருந்து அமிர்த நாழிகை துவங்கும் நேரத்தை மணிக்கணக்காக மாற்றி அதை பின்பற்ற வேண்டும். 

அவ்வாறு சரியான அமிர்த நாழிகையில் நோய்க்கான மருந்தை உண்பதால் பூரண குணமடைய முடியும் என்பது கவிகாளிதாசர் எழுதிய உத்திரகாலாமிர்தத்தில் சொல்லப்பட்டிருக்கும் சூட்சுமம்.

உங்கள் வசதிக்காக இன்னொறு சுலப கணக்கை சொல்கிறேன். மலேசியாவைப் பொருத்தவரை  சூரிய உதயம் என்பது கிட்டத்தட்ட காலை 7.00 மணி என்றே வைத்துக் கொள்ளலாம். இதில் முன்பின் நேரங்களில் உதயநேரம் இருக்கிறது. என்றாலும் 7.00 என்பது ஒத்துப் போகும்.

மருந்துண்ணும் நேரம் பெரும்பாலும் நான்கு நாழிகைக்கு குறைவில்லாமல் இருக்கிறது என்பதால் அமிர்த நாழிகை துவக்கம் முதல் முடிவு வரை ஒன்னரை மணிநேரம் இருக்கிறது. முன் பின் சூரிய உதயத்தை ஒதுக்கி விட்டால் கூட அதன் மத்திம நேரத்தில் மருந்து உண்ணலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த இடத்தில் இன்னொறு விஷயத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அவசரகால நிவாரணத்திற்கு இது பொருந்தாது.  ஒரு பாம்பு தீண்டிவிட்டது.  

அதற்கு மருத்துவம் செய்ய அமிர்த நாழிகைக்காக காத்திருக்க முடியாது.  அதைப்போல் இன்றைய நவீன மருத்துவத்தில் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகள் மருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. 

இதில் எந்த நேரத்தில் அமிர்த நாழிகை வருகிறதோ அந்த நேரத்திற்கு மருந்து உண்டால் அந்நோய் பூரணமாக குணமாகும்.  

இனி அந்த நேரத்தைப் பார்ப்போம். உதாரணமாக மருந்துண்ணும் நாளில் அசுவினி நட்சத்திரம் நடப்பில் இருந்தால் 21 நாழிகை முதல் 25 நாழிகைக்குள் மருந்து உண்ண வேண்டும். 

1.அஸ்வினி 21 முதல் 25 நாழிகைக்குள் 
2.பரணி 30 முதல் 34 நாழிகைக்குள் 
3.கிருத்திகை 50 முதல 54 நாழிகைக்குள் 
4.ரோகிணி 15 முதல் 18 நாழிகைக்குள் 
5.மிருகசீரிடம் 30 முதல் 34 நாழிகைக்குள் 
6.திருவாதிரை 40 முதல் 44 நாழிகைக்குள் 
7.புனர்பூசம். 14 முதல் 18 நாழிகைக்குள் 
8.பூசம்.         16 முதல் 20 நாழிகைக்குள் 
9.ஆயில்யம். 40 முதல் 44 நாழிகைக்குள் 
10. மகம் 20 முதல் 24 நாழிகைக்குள் 
11.பூரம். 30 முதல் 34 நாழிகைக்குள் 
12.உத்திரம். 33 முதல் 37 நாழிகைக்குள் 
13.அஸ்தம். 07 முதல் 11 நாழிகைக்குள் 
14.சித்திரை 16 முதல் 24 நாழிகைக்குள் 
15.சுவாதி 22 முதல் 26 நாழிகைக்குள் 
16.விசாகம்         20 முதல் 24 நாழிகைக்குள் 
17.அனுசம். 14 முதல் 18 நாழிகைக்குள் 
18.கேட்டை 31 முதல் 35 நாழிகைக்குள் 
19.மூலம். 14 முதல் 18 நாழிகைக்குள் 
20.பூராடம்.         10 முதல் 14 நாழிகைக்குள் 
21.உத்ராடம் 14 முதல் 18 நாழிகைக்குள் 
22.திருவோணம். 20 முதல் 24 நாழிகைக்குள் 
23.அவிட்டம் 14 முதல் 18 நாழிகைக்குள் 
24.சதயம். 20 முதல் 24 நாழிகைக்குள் 
25.பூரட்டாதி 10 முதல் 14 நாழிகைக்குள் 
26.உத்திரட்டாதி 18 முதல் 22 நாழிகைக்குள் 
27.ரேவதி 12 முதல் 16 நாழிகைக்குள் மருந்து உண்பதால் நோய்கள் பூரண குணமாகிவிடும் சித்தர்கள் கண்ட ராஜ வைத்தியம். 

நீங்களும் இதை கடைபிடித்து நோய்தாக்கத்தில் இருந்து விடுபட எல்லாம் வல்ல தன்வந்திரி பகவானை தொழுகிறோம். வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.


துரியோதனன்

மரணம் என்பது நிச்சயமான ஒன்று,   அது வந்து விட்டுப் போகட்டும். எனக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது.. அது நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் என்பதும் தெரியும்.  
உயிருக்கு பயந்தவன் நானில்லை.. ஆனால் அவமானப்பட்டு உயிரிழப்பதை நான் விரும்பவில்லை..  99 தம்பிகள், பாசமிக்க ஒரு மைத்துனன்,  உயிருக்கு உயிரான நண்பர்கள், மேலான உறவுகள், ரத கஜ தூரக பதாதிகள், நாடு நகரம்  என   கௌரவமாக வாழ்ந்தவன்.. 

என் மரணம் இழிந்த நிலையை அடைந்து விடக்கூடாது. காலம் என்னை அவமானத்தின் சின்னமாய் பேசிவிடக் கூடாது. அதற்காகத்தான் பயப்படுகிறேன்..  இந்த பீமன் என் தொடையை கதையால் அடித்து நொறுக்கி ரத்தத்தை குடிப்பதாக சபதம் செய்திருக்கிறான். 

பாஞ்சாலியோ.. என் ரத்தத்தினால்தான் தன் கூந்தலை முடிப்பாளாம்.. என்ன ஒரு அவமானம்.. 

இவ்வளவு வீராதி வீரர்கள் இருந்தும்.. தம்பிகள் இருந்தும்.. வீரமிக்க பாட்டனார், ஆசாரியர் அனைவரும் இருந்தும்.. இத்தனைக்கும் மேலாக வில் வித்தையில் ராமனுக்கு நிகரான வீரன், என் நண்பன் கர்ணன் இருந்தும் இந்தப் போரில் தோற்று விட்டேனே..  என்ன காரணம்?  
என் வம்சம் முழுதும் என்னுடன் முடிந்து விடுமோ?  என் தாய் தந்தையர் இருவரும் இருக்கிறார்கள்.. 

அவர்களுக்குப் பின்?.. 

இறைவன் என்னை முற்றிலுமாய்  கைவிட்டு விட்டான் என்றே நினைக்கிறேன்.. ஒரு அரசனாக எனக்கு சரி என்று பட்டதைத் தான் செய்து வந்தேன்.. 

ஆனால் எல்லோரும் என்னைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.. இந்தக் கண்ணன் உட்பட.. அவர்களின் மேல் எந்தத் தவறும் இல்லையாம்.. 

ஒருக்கால் உண்மை அதுதானோ? என் மேல்தான் தவறோ?  பாண்டவர்களிடம்  கொஞ்சம் இரக்கத்துடன் நடந்து கொண்டிருக்க வேண்டுமோ? தவறு செய்து விட்டேனோ?    என்ன நினைத்து என்ன செய்வது?  எல்லோரையும் இழந்து விட்டேன்.. இனி போய் என் ஒரு  உயிருக்காக யாருடைய காலிலும் மண்டியிட மாட்டேன்.  

இதுதான் விதி என்றால் அது அப்படியே நடந்து விட்டுப் போகட்டும்.. போராடிச் சாகிறேன்.. தொடையை நொறுக்கினால் என்ன? சிரசையே சிதைத்தால்தான் என்ன? உறவுகளை பலி கொடுத்த பதினேழு நாட்கள் போர் நடந்து விட்டது..  

இன்னும் ஓரிருநாட்களில்  என் தலை தரையில் சாய்ந்து விட்டால் பாண்டவர்களின்  கொடி உயரும்.. உயர்ந்து விட்டுப் போகட்டும்..”.

துரியோதணனுக்கு உறக்கம் வரவில்லை..    எப்படி வரும்? வந்தால்தான் அது அதிசயம்..  பல சிந்தனைகள் அவன் மனதில் அலைபாய  பாசறையில் உலவிக் கொண்டிருந்தான்.

பாசறை வாயிலில் நிழலாய் ஒரு உருவம் தெரிந்தது.. யாரது இந்த இரவு நேரத்தில்? அதுவும்  பெண் போலத் தெரிகிறது.. யாராக இருக்கும்..

‘யார் அது?’ துரியோதணன் குரலைச் சற்று உயர்த்தினான்.

பதில் பேசாமல் அந்த பெண்ணுருவம் உள்ளே நுழைந்தது..

‘அம்மா.. நீங்களா? இந்த நேரத்தில்..  நாய் நரிகளும் , கழுதைப் புலிகளும் நடமாடும் இந்த யுத்த பூமியில்..  நீங்கள் ஏனம்மா வந்தீர்கள்?’ துரியோதணின் குரல் நெகிழ்ந்தது . கண்களில் நீர் துளிர்த்தது.

‘மகனே துரியோதணா!’ காந்தாரி துரியோதணனை ஆசையுடன்  அணைத்துக் கொண்டு அவனது தலையை வருடினாள். 

‘நீ  இங்கே மனம் அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருக்க.. என்னால் எப்படியப்பா நிம்மதியாக இருக்க முடியும்?  உன்னை சந்தித்து பேசி விட வேண்டும் என்று இதயத்தில் ஓர் உந்துதல்.. அதனால் ஓடோடி வந்தேன்..’

‘அம்மா! இனிமேல் எங்கே என் குரலைக் கேட்க  முடியும் என்று வருந்துகிறீர்களா? 99 பிள்ளைகளை பறிகொடுத்து விட்டீர்கள்? நான் ஒருவன் போனால் என்ன இருந்தால் என்ன? ‘

‘துரியோதணா! கௌரவக் குலச் செல்வமே! எங்களுக்கு கொள்ளிப்போட  நீ ஒருவன் இருக்கிறாய் என்று நம்பிக்கையில்தான் இந்த உயிரை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறேனப்பா.. நீ இப்படியெல்லாம் பேசாதே..  எனக்கு தாங்கவில்லை..’ 

‘அம்மா!  நாளை என் இறுதி நாள் என்றே  என் உள்ளுணர்வு சொல்கிறதம்மா.. வீரனுக்கு நித்தம் மரணம் தானம்மா.. மரணத்தின் எதிர் நிற்க நான் பயப்படவில்லை..  வயதான காலத்தில்  பெற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைக் கூடச் செய்யாமல் உங்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டுச் செல்கிறேனே என்பதுதான் என் மன வேதனைக்குக் காரணம்.. உறக்கம் தொலைந்ததற்கு காரணம்.  வேறொன்றும் இல்லையம்மா..’

‘மகனே சுவேதனா!   நீ எங்களுக்கு வேண்டும்..  நான் சொல்வதை தயவு செய்து கேள்..  என் வேண்டுகோளை மறுக்காதே..  எனது கற்பு நெறியும் பதிவிரதா தர்மமும் உண்மையாக இருக்குமானால் எந்த அஸ்திரத்தினாலும் உன்னை வெல்ல முடியாது. மரணமும் உன்னை நெருங்காது.. நான் சொன்னபடி செய்வாயா மகனே? ‘

‘அம்மா..  நான் உயிர்வாழ்வது உங்களுக்கு முக்கியம் என்றால் அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.. ஆனால் அதற்காக யார் காலிலும் விழச்சொல்லாதீர்கள்  உங்கள்  மகன் வீரத்தோடும் மானத்தோடும் வாழ்ந்தான்.. மறைந்தான் என்பதைத் தவிர வேறொரு அவச் சொல்லை எனக்குத் தேடித் தந்துவிடாதீர்கள் அம்மா!’ 

‘மகனே! நீ யார் காலிலும் விழ வேண்டாம்..  இந்தப் போர்க்களத்தின் அருகிலுள்ள தடாகத்தில் குளித்துவிட்டு.. குழந்தையாய் எப்படி என் கையில் தவழ்ந்தாயோ.. அந்த நிலையில் உடலில் ஓராடையும் இன்றி நீ வா.. 

இத்தனைக் காலம் என் கணவரைப்போலவே  நானும் வெளி உலகத்தை பார்க்கக்கூடாது என்று என் கண்களைக் கட்டி விரதமிருக்கின்றோனோ.. அந்த கட்டுகளை களைந்து, என் இருவிழிகளாலும் உன்னை பார்க்க வேண்டும்.. 

அப்படி என் கண்களின் வழியே நான் உன்னைப் பார்த்து , நீ மரணமின்றி இன்னும் நெடுநாள் வாழ வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன்.. அதன் பின் உன்னை மரணம் நெருங்காது..’

‘அம்மா! என்ன இது?...’

‘மறுக்காதே மகனே! நான் உன் தாயடா.. என் பேச்சைக் கேள்..’

தாயின் பேச்சைத் தட்ட மனமின்றி துரியோதணன் பாசறையை விட்டு வெளியேறி தடாகத்தை நோக்கி நடந்தான்.  

அதே சமயத்தில் இந்த உரையாடல் , பாண்டவர்களின் பாசறையில் இருந்த சர்வ வியாபியான கண்ணனின் மனதில்  கேட்டது.  

காந்தாரியின் பதிவிராதா தன்மையையும் அவளது கற்பின் ஆற்றலையும் கண்ணன் அறிவான்..  அவள் கூறியது மட்டும் நடந்து விட்டால் துரியோதணனை வெல்ல முடியாது என்று கவலைப்பட்டான்.. என் சக்திகளும் காந்தாரியின் கற்பின் சக்தி முன் பலிக்காது..  என்ன செய்யலாம்..யோசித்தான்.

திரௌபதை அவிழ்ந்த கூந்தலுடன் செய்த சபதமும் அவனது மனதில்  தோன்றியது.. 

பாசறையை விட்டு கண்ணன் வெளியேறினான்..  தடாகத்தின¢ அருகில் உள்ள சோலையில் நின்று கொண்டான்.  

துரியோதணன் தடாகத்தில் மூழ்கி குளித்தான்.. தன் உடைகளை அங்கேயே களைந்து ஓர் ஓரத்தில் போட்டு விட்டு , உடைகளற்ற உடலில் நீர்த் துளிகள் வழிந்தோட  கரையேறி  பாசறையை நோக்கி¢ நடந்தான்..

“துரியோதணா! என்ன இது கோலம்? நீயா இப்படி? எல்லா சாஸ்திரங்களும் அறிந்தவன் தானே நீ.. இந்த வானமும் கிரகங்களும் நட்சத்திரங்களும், இரவுத் தேவதைகளும் பார்க்க நிர்வாணமாய்  வரலாமா? எங்கே உன் உடைகள்?  

இதோ என்னிடம் புதிய உடைகள் இருக்கிறது அணிந்து கொள்.. “  என்றபடியே  கண்ணன் துரியோதணனின் முன்னே வந்து கொண்டிருந்தான். 

‘கண்ணா! வழி விட்டு விலகி நில்.. உன்னிடம் பேசுவதற்கு எனக்கு நேரமில்லை.. நான் என் தாயைச் சந்திக்க வேண்டும்..’ 

“என்ன இது அநியாயம்.. துரியோதணா.. நீ என்ன சின்னக் குழந்தையா? இல்லைச் சிறுவனா?   உடையின்றி, பிறந்த மேனியுடன் தாயின் முன் செல்வதற்கு உனக்கே அசிங்கமாய் தெரியவில்லையா?  

என்னதான் உன் தாய் கண்ணைக் கட்டிக் கொண்டிருந்தாலும்.. அவள் முன் ஒரு வயது வந்த ஆண்மகன் , அவன் மகனாகவே இருந்தாலும் இப்படி நிற்பது மிகப்பெரிய பாதகமானச் செயல் என்பது உனக்குத் தெரியாதா?  

எங்கேயாவது இப்படி நடந்தது எனக் கேள்விப்பட்டிருக்கிறாயா?  சாஸ்திரங்களை படித்தவன்தானே நீ? எதற்கு இந்த விபரீத புத்தி.?” யாராவது இதை அறிந்தால் அவர்கள் உன் தாயைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நாளை இந்த உலகம் உன்னைப் பற்றி என்ன பேசும்? 

கண்ணனின் பேச்சால் துரியோதணன் குழம்பிப் போனான். 

‘கண்ணா.. என் தாயின் கட்டளைப் படியே நான் செல்கிறேன்.. எனது நன்மைக்காகவே இதைச் செய்யச் சொல்லி வற்புறுத்தினார்..’

‘எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே.. நாளை உன் செயல் எப்படிப் பேசப்படும் என்று  எண்ணிப் பார்த்தாயா?’

‘கண்ணா! இப்போது நான் என்னதான் செய்யட்டும்?’

 ‘நீ உடைகள் அணியாமல் இந்த வாழை மரத்தின்  மட்டைகளை உன் இடுப்பில் அணிந்து கொண்டு செல்.. அது கூட ஒரு விதத்தில் ஏற்புடையதுதான்..  

சாஸ்திரக் குற்றமும் இல்லை.. உன் தாயின் கட்டளையையும்  நீ நிறைவேற்றியது போல்   ஆகும்..’  

‘சரி கண்ணா.. எனக்கும் அதுதான் சரியெனப்படுகிறது’..   வாழை இலை ஒன்றை எடுத்து தன் இடுப்பில் கட்டிக் கொண்டான் துரியோதணன்.

வந்த வேலை முடிந்த திருப்தியில் அங்கிருந்து புறப்பட்டான் கண்ணன்.  

வந்து விட்டேன் அம்மா! பாசறைக்கு வந்து   தாயின் முன் நின்றான் துரியோதணன்.  

காந்தாரி இறைவனை வேண்டினாள்.. ‘நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் என் மகனை நான் பார்த்த பின், என் பார்வை பட்ட அவன் உடலிலிருந்து உயிரை வலுக்கட்டாயமாக எவராலும் அழிக்க இயலாமல் போகவேண்டும்..  

இதோ இத்தனைக் காலம் நான் கொண்டிருந்த விரதத்தையும் மீறி இப்போது என் கண்களின் கட்டுகளை அவிழ்க்கிறேன்’.. காந்தாரி தன் கட்டுக்களை அவிழ்த்தாள்.  

எதிரில் நின்ற மகன் துரியோதணனை  வாஞ்சையுடன் பார்த்தாள்.. ‘இவன் பிறந்ததிலிருந்து நான் இவனைப் பார்க்க வில்லை.. இதோ என் முன்னால் என் மூத்தச் செல்வன்.. எவ்வளவு கம்பீரத்துடன் அவன் முகம் காட்சியளிக்கிறது..

 கண்களில் மட்டுமே மெல்லிய சோகம் படர்ந்திருக்கிறது..  திரண்ட புஜங்கள் அவனது வீரத்தைப் பறைசாற்றுகிறது.. 

அவன் என்னை கும்பிட்டு வணங்கிக்கொண்டிருக்கும் உறுதியான கைகள் எவராலும் தோற்கடிக்கவே முடியாத மாவீரன் என்றல்லவாச் சொல்கிறது.. 

எப்படி என் மகனை தோல்வி நெருங்க முடியும்.. என்னால் நம்ப முடியவில்லையே..   அய்யோ! என்ன இது, இவன் இடுப்புக் கீழ் வாழை இலையை  கட்டிக்கொண்டிருக்கிறானே.. இடுப்புக்கு கீழ் இவன் தாக்கப்பட்டால் இவன் உயிர் போய்விடுமே.. 

கடவுளே! நான் என்ன செய்வேன்’..  காந்தாரி வருத்தத்தினால் கண்ணீர் வடித்தாள்.  கண்களைக் கட்டிக் கொண்டு பாசறையை விட்டு வெளியேறினாள்.. 

விடிந்தது.. போர் தொடங்கி பதினெட்டாம் நாள் யுத்தம்.   பீமனுக்கும் துரியோதணனுக்கும் கடும் கதையுத்தம்.  துரியோதணனை  துரத்தி துரத்தி அடித்தான் பீமன்.. துரியோதணன் களைத்துப் போனாலும், சண்டையைத் தொடர்ந்தான்..  பீமனை அடிக்க, தன் வலுவனைத்தையும் ஒன்று திரட்டிக்கொண்டு ஆக்ரோஷத்தோடு கத்தியவாறு   கதையை ஓங்கினான்.

கண்ணன் பீமனுக்கு  சைகைக் காட்டினான்

ஓங்கிய கதை கீழே விழுவதற்குள் பீமனின் கதை   துரியோதணனின் இடுப்பிற்கு கீழ்  வலுவாய்  தாக்கியது. துரியோதணனின் தொடை எலும்பு நொறுங்கும் சத்தம் கேட்டது.  

           *    * 
எங்கு தர்மம் இருக்கிறதோ.. அங்கே தான் ஜெயம் உண்டாகும்.  இறைவனும் தர்மத்தின் பக்கமே இருப்பான்.    துரியோதணனிடம் சிறந்த பண்புகள் இருந்தாலும், அவன்  பாதை தர்மத்திற்கு விரோதமாகவே இருந்தது.  

வீரத்தின் மூலம் அல்லாமல் வஞ்சக சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்களின் நாட்டினை பறித்துக் கொண்டு, பாண்டவர்களின் உடைகளை களைந்து சாதாரண உடை கொடுத்து அவமானப்படுத்தி, சகோதரர்களின்  மனைவி என்றும் பாராமல்,   பெண் என்ற இரக்கமும் கொள்ளாமல்  திரௌபதியை சபையோர் முன் நிறுத்தி , மானப்பங்கப் படுத்தி, பாண்டவர்களை அழிக்க தர்மத்திற்கு முரணாகச் செயல்பட்டான். 

பாண்டவர்களோ.. கொடுத்த வாக்குபடி காடுகளில் வாழ்ந்து.. நியாயமாக தங்களுக்கு சேர வேண்டிய நாட்டினை கேட்டார்கள். அவர்களுக்காக கண்ணனே தூது சென்றான்.  தன்னிடம் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் , படை பலம் இருக்கிறது என்ற ஆணவத்தினால் ஐந்தடி நிலம் கூட கொடுக்க மறுத்து விட்டான் துரியோதணன்.  பாசமும் இல்லை.. இரக்கமும் இல்லை.

தர்மம் ஜெயிக்க வேண்டும். கற்புக்கரசியான   திரௌபதியின் சபதம் பலிக்க வேண்டும்  என்பது தானே நியாயம்.  கண்ணன் நியாயத்தின் பக்கமே செயல்பட்டான். 

அதே சமயம்  காந்தாரியின் பதிவிராதா தன்மையின் சக்தியையும், அவள்  வாக்கும் பலிதம் ஆகும் என்பது தெரிந்து , அது நடக்காமலிருக்க முயற்சியை மேற்கொண்டான்.

தன் தாயின் கட்டளையை முழுமையாய் நிறைவேற்ற முடியாமல் போனான் துரியோதணன். 

சாஸ்திரம் கூறும் ஒழுக்க நெறியும் காப்பாற்றப்பட்டது.  தர்மமும்  ஜெயித்தது.

- mathivanan 

image link    indianetzone.com

வாமன அவதாரம்

தேவர்களின் தாயான அதிதி தேவிக்கு அருளிய வாக்குறுதி படி, தக்க நேரத்தில் அவளது மகனாக அவதரித்தார் பரந்தாமன். 

இரண்டு காதுகளிலும் குண்டலங்கள் அசைந்தாட, புஜங்கள் இரண்டிலும் தோள்வளை, கங்கணம் விளங்க,  ஸ்ரீவத்சம் எனப்படும் மச்சம் மார்பிலே பளிச்சிட, தண்டையும் சிலம்பும் கால்களில் இன்னிசை எழுப்ப,  மார்பிலே வனமாலை தவழ, சியாமள வண்ணனாக கண் கொள்ளாக் காட்சியாக பகவானின் அவதாரத் தோற்றம் அமைந்திருந்தது.  

தேவ துந்துபி முழங்கியது.  தேவர்கள் விண்ணிலிருந்து மலர்மாரி பொழிந்தனர். சித்தர்களும், கந்தர்வர்களும் இன்னிசை மூலம் துதித்தனர்.

காசியபரும், அதிதி தேவியும் மெய்மறந்து பக்தி பரவசத்துடன், தங்கள் மகனை பார்த்து மகிழ்ந்தனர். 

குழந்தை உருவில் இருந்த பகவானைக் கைகளால் அள்ளி மார்போடு அணைத்துச் சின்னஞ் சிறு கன்னங்களில் முத்தமழை பொழிந்து மாறி மாறிக் கொஞ்சினர் இருவரும்.  

குழந்தைக்கு வாமனர் என்று பெயர் சூட்டினர். 

வாமனர் மற்ற பிள்ளைகளைப் போலவே மகரிஷிகளிடம் சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து ஆன்மிகக் கல்வியில் நிறைகுடமாய் திகழ்ந்தார். 

இதே சமயத்தில் , பலி தனது நாட்டில் பெரிய அளவில் யாகம் ஒன்றை நடத்த தீர்மானித்து, தவ முனிவர்களின் உதவியுடன் யாகத்தை முறைப்படி தொடங்கினான். 

தமது அவதார நோக்கத்தை நிறைவேற்றும் தருணம் வந்தது என வாமனர்  தீர்மானித்தார்.  பெற்றோரிடம் ஆசி பெற்றுக் கொண்டு, மகாபலி யாகம் செய்து கொண்டிருந்த யாகசாலையை நோக்கிப் புறப்பட்டார்.  

கண்களில் கனிவும் அறிவொளியும் சுடர்விட, மந்தஹாச புன்னகையுடன் ஒரு பிராமணச் சிறுவன் யாக சாலையை நோக்கி  வருகிறான் என அறிந்த மகாபலி யாகசாலையின் வாசலுக்கு வந்து நின்றான்.  

கமண்டலம் தண்டம் ஆகியவற்றை ஒரு கரத்திலே தாங்கி, பிக்ஷை பாத்திரத்தை ஒரு கரத்திலே ஏந்தி  வாமனர் வரும் அற்புதமான காட்சி பலியின் உள்ளத்தை சிலிர்க்க வைத்தது . 

வேதியர்களும் தவமுனிவர்களும் ஆச்சரியத்துடனும் மிகுந்த மரியாதையுடனும்  வாமனரை வரவேற்று உபசரித்தனர்.

பலி வாமனரை வரவேற்று வணங்கி,  ஐயனே! தங்களை இன்று நான் தரிசிக்க நேர்ந்தது என் முன்னோர் செய்த புண்ணியமே.. என்னுடைய மரியாதைக்குரிய அன்பளிப்பாக நான் தரக்கூடியது ஏதாவது இருந்தால் தாங்கள் கட்டளையிடுங்கள், உடனே அதனை நிறைவேற்றித் தருகிறேன்  என்று பணிவுடன் கேட்டான்.

அசுரேந்திரா!  உன் பரம்பரையே இல்லையெனச் சொல்லாது கேட்டதை வழங்கும் பரம்பரையாகும். அதனால் உன் வேண்டுகோள் என்னை வியப்படையச் செய்யவில்லை. 

எனக்கு பெரிதாய் எதுவும் தேவையில்லை.  எனக்குத் தற்போது தேவை கொஞ்சம் நிலம். அதுவும் என் காலடியால் அளக்கக்கூடிய மூன்றடி மண் இருந்தால் போதும். அதை நீ தந்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றார் வாமனர். 

vamanan
image  link http://www.charanamrit.com/gods/vamana_14.html

‘ஐயனே! தங்கள் அடியால் அளக்கக்கூடிய மூன்றடி நிலத்தை வைத்துக் கொண்டு தாங்கள் என்ன செய்ய முடியும்?  தாங்கள் ஆசிரம் அமைத்து இறைவனை வழிபடுவதற்கும், பூவனம் உருவாக்கிக் கொள்ளவும்  தே¬வான நிலத்தையே தங்களுக்குத் தருகிறேன் பெற்றுக் கொள்ளுங்கள்’  என்று பலி கேட்டுக் கொண்டான்.

‘அசுர வேந்தா! உன்னுடைய   பெருந்தன்மை எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது.  ஆனாலும் எனக்கு தேவை மூன்றடி நிலம்தான்.. வேறொன்றும் தேவையில்லை , இதனை அளிப்பதாக உறுதி தந்து அதற்கான ஏற்பாடுகளை செய்வாயாக ‘

பலிச்சக்கரவர்த்தி அதற்கு ஒப்புக்கொண்டு, நிலம் தானம் தருவதற்காக தன் கிண்டியிலிருந்த நீரை எடுத்தார்.  

இருவரின் உரையாடலையும் அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த அசுர குருவான சுக்ராச்சாரியாருக்கு சந்தேகம் வந்தது.  

இவன் மானிடச் சிறுவனாய் தெரியவில்லை.. சர்வேஸ்வரரான நாராயணனாகத்தான் இருக்க வேண்டும்.  தேவர்களுக்கு உதவும் பொருட்டு ஏதோ திட்டத்துடன் வந்திருக்கிறார்.. எனவே இந்த இக்கட்டிலிருந்து பலியைக் காப்பாற்ற வேண்டும்  என்று நினைத்தார்.  

பலியைத் தனியே அழைத்து, வந்தது யார் என்று கூறி , வாமனரின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டாம்.. என எச்சரித்தார்.  

பலி யோசித்தான். ஆசானே! தாங்கள் கூறுவது உண்மையாகவே இருக்கலாம் ஆனாலும் கொடுத்த வாக்குறுதியிலிருந்து நான் பின் வாங்குவது சரியாகப்படவில்லை. பலி, வாக்கு தவறினான் என்ற அவச்சொல் எனக்கு வந்து விடக்கூடாது. அதனால் என்ன விளைவு  ஏற்பட்டாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்றான்.  

 சுக்கிராச்சாரியாருக்கு சினம் மூண்டது.   உன் தலையில் நீயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறாய்.. உன்னை காப்பாற்ற முயன்றேன். நீ என் வார்த்தையை மதிக்க வில்லை.. என் விருப்பம் என்கிறாய்.. என்னமோ செய்து கொள்.. உன் விதியை யாரால் மாற்ற முடியும் என்று கூறினார். 

பலி தனது முடிவினை மாற்றிக் கொள்ள வில்லை. கிண்டி நீரை மனைவி வார்க்க  வாமனருக்கு அவரது காலடியால் மூன்றடி நிலம் அளந்து கொள்ளலாம் என தானம் தந்தான்.   

வாமனர் மலர்ந்த முகத்துடன் எழுந்து நின்றார்.  அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவரது குள்ள உருவம் வானளாவ உயர்ந்தது. 

அனைவரும் பிரமித்து நின்றனர்.  தம்முடைய ஒரு காலினால் பூமியை அளந்தார், மற்றொரு காலினால் ஆகாயத்தை அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் இல்லை.

பலி! நீ கொடுத்த வாக்குறுதி முற்றிலுமாக நிறைவேறவில்லை .வாக்குதவறியதற்காக நீ நரகத்தில் சென்று வேதனைப் பட வேண்டிவரும். இரண்டு அடிகளால் மண்ணையும் விண்ணையும் அளந்து விட்டேன்.. மூன்றாவது அடிக்கு இடமில்லை இப்போது நான் என்ன செய்யட்டும்  சொல் என்று வினவினர்.

பிரபோ! நான் கொடுத்த வாக்குறுதியை எவ்விதத்திலும் நிறைவேற்றியே தீருவேன்.. மூன்றாவது அடியாகத் தங்கள் திருப்பாதத்தை என் சிரசில் தாங்கிக் கொள்கின்றேன் , என்றான் அசுர மன்னன். 

பலி! நீ அசுரர்களின் அதிபதியாக இருந்தாலும் உயர்ந்த மனப்பக்குவம் கொண்டு  இருக்கிறாய்.  உன் வாக்குறுதி படி நடந்து கொள்ள முன்வந்தாய். நீ முன்பு என்ன பாவம் செய்திருந்தாலும் அவையெல்லாம் உன்னை விட்டு நீங்கி, பரிசுத்தம் ஆனவனாகிறாய். 

விசுவ  கர்மாவினால் நிர்ணயிக்கப்பட்ட அதல லோகத்தை அடைந்து சகல சம்பத்துக் களோடும் நீ வாழ்ந்து வருவாய் .. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் நீ இந்திரப் பதவியை ஏற்பாய், என வாழ்த்தி மறைந்தார். 

வாமன உருவில் வந்த பகவானின் அருளால் பலிச்சக்கரவர்த்தி அதல லோகத்தை ஆளும் பேறு பெற்றான்.  
        
-மதிவாணன் 

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...