மரக் காது - சொல்ல மறக்காது.
நாசாவிலிருந்து ஒரு குழு ஆய்வுக்காக அமோசான் காடுகளுக்குள் சென்றதாம். அமோசான் ஆற்றுப் படுகைகளில் வாழும் காட்டுவாசிக் கிராம மக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி, செல் போன் போன்றவையெல்லாம் அதிசமயாக இருக்கிறது. வானொலியில் பாட்டுக் கேட்டு திடுக்கிட்டுப்போனார்களாம். ஏனென்றால் இது போன்ற அறிவியல் சாதனங்களின் செயல்பாடுகளைப்பற்றி அவர்கள் அறிந்திருக்க வில்லை.
அமோசான் மக்களின் தொலைத் தொடர்பைப் பார்த்து, நாசாக் குழுவினர் ஆச்சரியப்பட்டுப்போயினராம்.
அதாவது அவர்கள் வாழும் பகுதியில் ஒரு மரம் இருக்கிறதாம். தொலைவில் இருக்கும் யாருக்காவது தகவல் அனுப்ப வேண்டுமானால் அந்த மரத்தினருகில் சென்று அந்த மரத்திடம் சொல்ல வேண்டியச் செய்தியைச் சொல்கிறார்களாம். உடனே அத்தகவல் சேர வேண்டியவர்களை சென்றடைந்து விடுகிறதாம்..
உதாரணத்திற்கு ஒரு கிராமவாசி அடுத்த ஊருக்கு தன் வீட்டிற்கான பொருட்கள் வாங்கப் போகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் மனைவி அவனிடம் ஏதோ ஒன்றைச் சொல்ல மறந்திருந்தால், கணவன் போன பின் சட்டென ஞாபகம் வந்து விட்டால் ,நேரே அந்த மரத்திடம் சென்று, என்னங்க.. வரும்போது மறக்காம மஞ்சத் தூள் வாங்கிட்டு வந்திடுங்க.. சொல்ல மறந்திட்டேன்னு சொல்வாளாம்.. அவனுக்கு அந்தச் செய்தி உடனே சென்று சேர்ந்து விடுமாம்.
இதை ஆய்வுக்குழு அங்கேயே நான்கு நாட்கள் இருந்து சோதித்துப்பார்த்ததாம். கிராமவாசிகள் சொன்னது அந்த நபர்களிடம் சென்று சேர்ந்து செய்தியை தெரிந்து கொண்ட நபர்கள் சரியாக சொன்னபடி நடந்து கொண்டதை அறிய முடிந்ததாம்.
ஆய்வுக் குழுவினர் காட்டுவாசிகளிடம் பேசிப் பார்த்தனராம். ஆனால் ஏன் இந்த மரத்துக்கு இப்படி சக்தி? எப்படி அது அடுத்தவரின் மனதில் தகவல் சொல்கிறது என்பது போன்ற விசயங்களை அவர்களால் விளக்கிச் சொல்ல முடியவில்லையாம். அது அப்படி நிகழ்கிறது அவ்வளவுதான்.
அவர்களுடைய முன்னோர்கள் மரத்தின் மூலம் பேசிக்கொண்டார்கள். இவர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எளிய முறையாக , சௌகரியமாக இருக்கிறது. எப்படி ஆரம்பத்தில் அந்த மரத்தின் சக்தியை யார் கண்டறிந்தார்கள் என்ற விவரமெல்லாம் தெரியாது. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அது நடந்து வருகிறது. அந்த மரத்தின் கிளைகளை பல இடங்களில் நட்டு வைத்து, அந்த மர இனம் அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள்.
சரி ஏன் நாசா விஞ்ஞானிகள் அந்த கிராமத்திற்குப் போனார்கள்?
விண்வெளியில் செல்லும்போது பல சமயங்களில் தொலைத் தொடர்பு கருவிகள் பழுதான போது , அந்த விண்வெளி ஓடத்துடன் தொடர்பு கொள்வது சாத்தியமில்லாமலே போகிறது.
விண்வெளி வீரர்கள் பூமியில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டுமானால் என்ன செய்வது? ஏதாவது ஒரு வழியில் பூமியில் உள்ளவர்களோடு தொடர்பு கொண்டே ஆக வேண்டும்.. இதற்காக கருவிகளைக் கண்டுபிடிக்க, புதுவிதமாய் டெலிபதி, தொலை உணர்தல் போன்ற ஆராய்ச்சிகளில் அமெரிக்க , ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனராம். இந்த கிராமத்தைப் பற்றி கேள்விப் பட்டவுடன் நாசா விஞ்ஞானிகள் அங்கு சென்றிருக்கிறார்கள்.
மாமன்னன் அசோகன் புத்த துறவியாய் மாறிய பிறகு , தன் மகன் மகேந்திரனை இலங்கைக்கு அனுப்புகிறார்..
‘தந்தையே நான் இலங்கைக்கு என்ன பரிசு கொண்டு போகட்டும்’ என்கிறான் மகேந்திரன்.
“உலகிலேயே சிறந்த பரிசு போதிமரம்தான். புத்தர் பல காலம் அதனடியில் கழித்திருக்கிறார். தியானம் செய்திருக்கிறார். அதனடியில் படுத்துறங்கினார். மரத்தைச் சுற்றிச்சுற்றி வந்திருக்கிறார். அவருடைய அதிர்வுகளை அந்த மரம் ஈர்த்துக் கொண்டிருக்ககிறது. எனவே போதிமரத்தின் கிளை ஒன்றைக் கொண்டு போ’ என்கிறார் அசோகர்.
ஈழ நாடே அந்த கிளையின் அதிர்வால் ஈர்க்கப்பட்டது. புத்த மதத்தை பின்பற்றியது. பிற்காலத்தில் இலங்கையில் வளர்ந்த அந்த மரத்தின் கிளை ஒன்று இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
ஓஷோ - வின் உரையிலிருந்து