ads

Thursday 11 April 2013

லக்ஷ்மி குபேரன் கதை


தூரத்தில் தெரிகிறதே ஒரு உருவம். சற்றே உற்று பாருங்கள். அவன்தான் சுமாலி. 

நிற்பதும், நடப்பதும், உட்கார்வதும்,உலாத்துவதாகவும் இருக்கிறான். அவன் மனதில் அமைதி இல்லை. சந்தோசம் என்பது சற்றும் இல்லை. 

எப்படி இருக்கும்?

ஒரு காலத்தில் இலங்கையின் மன்னனாக இருந்தவன். சகல ராஜபோகங்களை அனுபவித்தவன். அத்தனையும் இன்று இல்லை. 

சுட்டு விரல் அசைவுக்கு ஓடி வந்த ஏவலர்கள் இல்லை. மந்திரி பிரதானிகள் இல்லை. அந்தபுர அழகு ராணிகள் இல்லை. எந்தபுரம் திரும்பினாலும் தனிமை...தனிமை..தனிமை. 

இன்று மகுடம் பறிபோய், தன் உயிரை காத்துக் கொள்வதற்காக பாதாள லோகத்தில் பதுங்கி வாழ்கிறான்.

யாரால் இந்த துன்பம் வந்தது?

சர்வ வல்லமை பெற்ற தேவர்களால் வந்த தீம்புதான். அதுதான் அவனுக்கு பெரிய கவலை. ஆட்சி செய்த நாட்டில் அடுத்தவன் அரியணையில் இருப்பதை எப்படி சகித்துக் கொள்வது?

அதோ..அவன் இன்னும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறான். மீண்டும் இலங்கையை ஆள வேண்டும். அது தன்னால் முடியாது என்பதையும் அவன் உள்மனமே சொல்கிறது.

மும்மூர்த்திகளின் ஆதரவும், பெரும் படை பலமும் கொண்ட தேவர்களை எதிர்த்து வெல்ல நம்மால் முடியாது என்றே நினைக்கிறான்.

அதற்காக விட்டு விடவும் முடியாது. நம் இனத்திலேயே ஒரு வீரனை உருவாக்க வேண்டும். அவன் மூலம் தேவர்களை வீழ்த்தி அரக்கர் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.

இப்படி அவன் பலவாறாக யோசித்துக் கொண்டே உலவிக் கொண்டிருந்த போதுதான் புஷ்பக விமானத்தில் போகிறான் குபேரன்.

அட .. இவன் விச்ரவசு முனிவரின் மைந்தனாயிற்றே. இவனை போல் ஒருவன் வேண்டும் என்றால்...!!என்று யோசித்ததின் விளைவு, அவன் மனதில் ஒரு எண்ணம் உதயமாகிறது.

அதை நிறைவேற்ற வேண்டுமானால் மகளின் ஒத்துழைப்பு வேண்டும். உடன் மகள் இருக்கும் இடத்தை நோக்கி போகிறான்.

மகளே கைகஸி... உன்னால் ஒரு உபாயம் ஆக வேண்டும்.

தந்தையின் வார்த்தைகளால் வியப்புற்றாள் கைகஸி.

சொல்லுங்கள் தந்தையே.

நம் அரக்கர் குலம் தழைக்க வேண்டுமானால் உன் தயவு வேண்டும்.

என் தயவா?

ஆம் மகளே... விச்ரவசு என்ற முனிவர் இருக்கிறார். அவர் மகாதபசி.  தபசியான அவர் மணவாழ்வில் ஈடுபட்டு குபேரன் என்ற மகனை பெற்றுருக்கிறார். அவன் தான் இப்போது இலங்கையை அரசாள்கிறான். அவனை போல் வல்லமை உள்ள ஒருவனை  நீ பெற வேண்டும்.

அதற்கு அவரையே கந்தர்வ மனம் புரி. அவர் வழியாக உனக்கு பிறக்கும் வாரிசால் நம் வம்சம் தழைக்கும் என்று என் உள் மனம் சொல்கிறது. 

எப்படி தந்தையே... அவரோ தபசி.. முன்பே மணமானவரும் கூட.  மீண்டும் எப்படி மணம் புரிய ஒத்துக் கொள்வார்?

இது காலத்தின் கட்டாயம். நீ.. அவரை அணுகு. அவர் மனதை மாற்று. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்து. 

தந்தையின் கட்டளையை ஏற்றுக்கொண்ட கைகசி விச்ரவசு ஆசிரமம் நோக்கி சென்றாள்.  அங்கே...விச்ரவசு அப்போதுதான் தன் அந்தி நேர வழிபாட்டை முடித்துக் கொண்டு சற்று ஓய்வாக ஆசிரம வாயிலில் அமர்ந்திருந்தார்.

rishi,


அவர் முன்னே போய் நின்றாள் கைகசி. வணங்கினாள்.

மங்களம் உண்டாகட்டும்.

சுவாமி.. என் மனதில் வரக்கூடாத ஆசை ஓன்று வந்து விட்டது?

என்ன?

முதலில் என்னை மன்னிக்க வேண்டும். பின் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

என்ன சொல்கிறாய்?

ஆம் சுவாமி. தங்களை கந்தர்வ மணம் புரிய விரும்புகிறேன்.உங்கள் வழியாக ஒரு குழந்தையை பெற்றெடுத்து, எங்கள் குலம் மீண்டும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன். அதற்கு தாங்கள் தான் அருள் புரிய வேண்டும்.

வணங்கி நின்ற கைகசியின் மேனி வனப்பை பார்த்து தவக்கோல முனிவருக்கே ஒரு தடுமாற்றம் வந்ததாம். மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் அது அப்பவே நடக்க வேண்டும் என்று அவசரப்பட்டாள் கைகசி. அதற்கும் காரணம் இருக்கிறது. கடும் தபசியாக வாழ்ந்து கொண்டிருக்கும் முனிவர் திடீரென மனம் மாறிவிட்டால், தன் நோக்கம் நிறைவேறாமல் போய் விடுமே.

சற்றே பொறுமை. இது அந்தி நேரம். அந்தி நேரம் என்பது அரக்கர்களும், பேய், பிசாசுகளும் உலாவுகிற நேரம்.  இந்நேரம் கருவாகி உருவாகும் குழந்தை அரக்க குணத்தோடு பிறக்கும்.

அதனால் காத்திரு. இரவானதும் உன்னை கந்தர்வ மனம் புரிந்து, உன் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்.

அதற்கு அவள் உடன்படவில்லை. அதனால் உடன்பட்டார். உடன் பிறந்தது ஒரு குழந்தை.

அது ..!!

பத்து தலைகளும், இருபது கரங்களும், கோரமான பற்களும் கொண்ட ஒரு கருமையான குழந்தையாக இருந்தது.

ஐயோ.. தாங்கள் சொல்லியும் கேளாமால் தவறு செய்து விட்டேன். சுவாமி.. நீங்கள் தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும். 

என்னதான் நான் பெற்றெடுத்தாலும் தகப்பன் நீங்கள்தானே.  நம் குழந்தைக்கு ஒரு வழிகாட்டுங்கள்.

கண்ணீர் மல்க வேண்டுகிறாள் கைகசி. மனமிரங்கிய   விச்ரவசு முனிவர் தன் தவ வலிமையால் அழகான ஆண் மகனாக மாற்றினார். 

அவன்தான் பின்னாளில் வளர்ந்து ராமனோடு மல்லுக்கு நிற்கப்போகிற இராவணன். 

இவனின் தந்தை விச்ரவசு என்று பார்த்தோம்.  அவருக்கு முன்னமே பரத்வாஜ முனிவரின் மகளோடு திருமணம் நடந்திருந்தது.

kubera and ravana


அவர்கள் இல்வாழ்வின் பயனாக திரேதா யுகத்தில் ஸ்ரீமுக ஆண்டு, ஐப்பசி மாதம், செவ்வாய்கிழமையில், பூராட நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத்தில் பிறந்த குழந்தைதான் குபேரன். தாயார் சுவேதாதேவி.

குபேரன் சிறந்த சிவபக்தன். பிரம்மாவை நோக்கி தவமிருந்ததால் வடக்கு திசைக்கு அதிபதியான  வரலாறு உண்டு.  சிவனை வழிபட்டதால் கைலாயத்தில் உள்ள அழகாபுரிக்கு அரசனாக மாறினான்.

ஆனால் இதற்கு முன்பு குபேரன் ஆட்சி செய்தது என்னவோ இலங்கைதான். பொன்னும், மணியும் குவிந்து கிடந்ததாம். பூலோக சொர்க்கம் என்று சொல்கிற அளவிற்கு செல்வ செழிப்பாக இருந்த இலங்கையில் வாழ்ந்தவர்தான் குபேரன்.

god kubera, லக்ஷ்மி குபேரன் கதை


அக்காலத்திலேயே தேவேந்திரனுக்கு இணையாக புஷ்பக விமானத்தில் பயணம் செய்த பெருமை உண்டு.

ஆனால் குபேரனின் கெட்ட நேரம் ராவணன் வடிவத்தில் இருந்தது. பங்காளிகள் பகை ஆரம்பமானது.  தவத்தால் அருட்செல்வத்தையும், பொருட்செல்வத்தையும் சேர்த்த குபேரன் வீரத்தை பெற தவறினார்.

அதனால் வந்தது வினை.  துஷ்டனாக வளர்ந்த ராவணன் சும்மா ஒரு மிரட்டல் விட்டான். ராவணைன் முரட்டுத்தனத்தை, ராட்சச உருவத்தை பார்த்து பயந்த குபேரன், எந்த எதிர்ப்பும் காட்டாமல் இலங்கையை விட்டு வெளியேறினார்.

இதன் பின்னர்தான் தவம் செய்து வடதிசைக்கு அதிபதியாக மாறியதும், சிவனின் அருளால் அளகாபுரிக்கு அரசனான சம்பவமும் நடந்தது. பின்னாளில் சிவனால் தன தேவதைகளாக மகாலக்ஷ்மியும், குபேரனும் நியமிக்க பட்டார்கள்.

குபேரன் அத்தாணி மண்டபத்தில் வீற்றிருப்பாராம். அதுவும் தாமரை மலர் மீதுள்ள ஆசனத்தில் வீற்றிருப்பாராம். அங்கே திருமுத்து குடையின்  கீழ்தான் இது அத்தனையும் அமைந்திருக்குமாம்.

god kuberra


ஒரு கை அபய முத்திரை காட்ட வீற்றிருக்கும் குபேரனுக்கு இருபுறமும் சங்கநிதி, பத்மநிதி என்ற தனதேவதைகள் இருக்கிறார்கள். குபேரனின் இடப்புறம் அவரது தர்மபத்தினி இடக்கையில் கருநெய்தல் மலர்கள் ஏந்திய நிலையில் வீற்றிருக்கிறார்.

சிவபூஜையில் விருப்பம் கொண்டவராக இருந்தாலும், ராஜராஜேஸ்வரியின் பஞ்சதசீ மந்திரத்தைத்தான் செபித்த வண்ணம் இருப்பார் என்கிறது சிற்ப சாஸ்திரம். இவர் பெரும் ராஜயோகத்தை தரக்கூடியவர்.

செல்வதை தரும் தரும் தனலக்ஷ்மியும், முன்பு இல்லாமல் போன தைரியத்தை தரும், வீர லக்ஷ்மியும் இவரிடம் வாசம் செய்கிறார்கள்.

இவரின் கருணை பார்வை கிட்டினால் ஏழை பணக்காரனாகலாம். எதுவும் இல்லாதவனை எல்லாவற்றையும் பெறலாம். செல்வா செழிப்போடு வாழலாம்.

எந்த பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதி ராஜனாகிய குபேரனை வணங்கினால் தான் அப்போது செய்த பூஜையின் பலன் கிட்டும்.

இவருக்கு உரிய பூஜை முறைகளை பின்னொரு பதிவில் விரிவாக பார்ப்போம். இப்போது அவருக்கு உரிய மந்திரம்.

ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரனாய 
தனதாந்யாதிபதயே தநாஷதாந்ய ஷம்ருத்திம் மே தேஹி 
தாபய ஸ்சுவாகா

நீங்களும் இந்த மந்திரத்தை தினம் தோறும் பாராயணம் செய்து குபேர அருளை பெறுங்களேன்.

வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்.

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...