ads

Thursday 4 October 2012

மரணபயம் விலக

விருப்பம் இருக்கோ இல்லையோ, நம் வாழ்க்கையில் ஒரு நாள் இவர் இருப்பிடம் போய்தான் ஆகவேண்டும். ஆனால் போன பிறகு திரும்பி வர முடியுமா என்றால்... முடியாது கண்ணு முடியாது.

என்னது முடியாதா?

ஆமாம் அவரு...அவரு.. எமதர்மரு. இப்போ புரியுதா?

புராணங்களில் எமதர்மனுக்கு உருட்டு கட்டை தேகமும், கிடா கொம்பு மீசையும், உருட்டி முழிக்கும் விழியுமாய், படு பயங்கரமான உருவத்தை கர்ப்பித்திருந்தாலும், தன்னை வணங்குபவர்களுக்கு எப்போதுமே மரண பயத்தை அளிப்பதில்லை.

என்னது? எமனை வணங்கனுமா? இது என்ன....... வெனையை வெத்தலை பாக்கு வச்சு அழைச்ச கதையாவுல இருக்கு. 

அச்சம் தவிர்... நெஞ்சை நிமிர், மிச்சம் சொல்கிறேன் கேள்.

என்னவோ?

ஒரு முறை சிவபெருமான் எமனின் முன் தோன்றினார். எமதர்மா... இதுவரை உன் கடைமையை சரிவர செய்கிறாய், அதில் குறை இல்லை.

இருப்பினும்... விபூதி தரித்தோர், ருத்ராச்சம் அணிந்தோர், நமசிவாயா என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்போர், உலக தர்மங்களை சரிவர கடை பிடிப்போர் போன்றவர்களுக்கு பிறப்பும் இறப்பும் பொது என்றாலும், இறப்பின் தருவாயில் மரண வேதனையை தரக்கூடாது என்று அன்பு கட்டளை இட்டார்.


அதனை ஏற்றுக்கொண்ட எமதர்மன் முன்சொல்லியவற்றை சரிவர கடை பிடிப்பவர்களை,  இறப்புக்கு பிந்தைய வாழ்க்கையில் பெரிதும் பாதிப்பதில்லை என்று கருடபுராணம் சொல்கிறது.

சரி இந்த எமனின் கதை தெர்யுமா உங்களுக்கு. இதோ....!

சுவர்ச்சலா.. சூரிய பகவானின் தர்மபத்தினி. சூரியனோடு இனிய இல்லறம் நடத்தியதற்கு அடையாளமாய் பிறந்தது மூன்று குழந்தைகள்.

இரண்டு ஆண்மகவு. ஒரு பெண் மகவு. அந்த இரண்டு ஆண்குழந்தைகளில் ஒன்றுதான் எமதர்மன்.


மூன்று பிள்ளைகளை பெற்ற சுவர்ச்சலாவுக்கு உடல் பலவீனம் என்பது இயற்கைதானே. அதோடு வயதும் கடந்து கொண்டிருக்கும். அதனால்தானோ என்னவோ சூரியனின் உடல் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்தாள்.

தேவர்களுக்கு உரித்தான வகையில் கடும் தவம் செய்தால் இழந்த சத்தியை மீட்டு விடலாம் என்று தோன்றியது.

ஆனால் கட்டிய கணவனையும், பெற்று வளர்த்த பிள்ளைகளையும் பிரிந்து செல்வது எப்படி? ஆசை கணவனோ தன்னை பிரிந்து அரை நாழி கூட இருக்கமாட்டாரே... என மனத்துயரில் ஆழ்ந்த சுவர்ச்சலாவுக்கு மனதில் தோன்றிய யோசனை இதுதான்.

தன்நிழலுக்கு உயிர் கொடுத்தாள். அச்சு அசலாக அவளை போலவே உயிர்ப்பித்தது. அதன் பெயர் சாயா.

பின் சாயாவிடம் நான் தவம் செய்து என் சக்தியை மீட்டுக்கொண்டு வருகிறேன். நான் வரும் வரை என் கணவரையும், என் குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக்கொள்.

எந்த காரணம் கொண்டும் நீ யார் என்ற விபரத்தை சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டு போய்விட்டாள்.

சாயாதேவி சூரியனோடு இல்லற வாழ்வில் ஈடுபட்டாள். அதன்  பயனாக அவளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது.

அந்த குழந்தைகளில் ஒன்றுதான் எல்லோரையும் ஆட்டி படைக்கும் சனிபகவான். இருக்கட்டும்.

நாட்கள் நகர்ந்தது. சாயாதேவி தன் குழந்தைகள் மேல் காட்டிய அளவிற்கு சுவர்ச்சலாவின் குழந்தைகள் மேல் அன்பு காட்டவில்லை.

விளைவு பல நாள் திருடி ஒரு நாள் மாட்டித்தானே ஆக வேண்டும். குட்டு வெளிப்பட்டது. சாயாதேவி மன்னிப்பு கேட்டு,அதனால் மனம் மாறிய சூரியன் மகிழ்ச்சியோடு குடும்பம் நடத்தியது எல்லாம் பழைய கதை.


நம் கட்டுரையின் கதாநாயகன் எமன் அல்லவா? சிவனை நோக்கி தவமிருந்து காலன் என்னும் புனைபெயரோடு உயிர்களை கவர்ந்து செல்லும் பொறுப்பை ஏற்றார். கூடவே தென்திசைக்கு அதிபதியும் ஆனார்.


சரி... எமதர்மனை எப்படி வணங்குவது?அவருக்கு ஆலயம் எங்கே உள்ளது?

கோவை சிங்கநல்லுரீல்  இருந்து மூன்று கிலோமீட்டர் துரத்தில் உள்ளது சித்திரகுப்தன் ஆலயம்.

கோவில் என்றால் வானுயர்ந்த கோபுரம், விஸ்தாரமான மண்டபங்கள் என்றில்லாமல் பழங்கால வீடு போன்ற தோற்றமுடையது எமதர்மர் கோவில்.

சித்திரா பௌர்ணமி மிக விஷேசமான நாள். அன்று 108 சங்குகளுடன் அபிழேக ஆராதனை நடைபெறும்.


மூலஸ்த்தானம் எமதர்மனுக்கு என்றாலும் கூடவே கணக்கபிள்ளை சித்திர குப்த்தன்,விநாயகர், எமதர்மனின் தங்கை ஆண்டிசியம்மன், இவரின் கணவர் ஐயனார் என்று தனி சன்னிதானங்கள் உண்டு.

இங்கு வழிபாடு செய்தால் நீடித்த ஆயுள், இறுதிகால இறப்பில் நிம்மதி, பரிபூரண சிவனருள் கிட்டும் என்கிறது கோவில் புராணம். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை சென்று வழிபாடு செய்து வாருங்களேன்.


1 comment:

  1. நகைச்சுவை உணர்வோடு சொல்றீங்க.. தகவல்கள் அருமைங்க...

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...