ads

Sunday 18 November 2012

ஆளப் பிறந்தவனே ஓடிவா !!


வாழ்க்கையில் என்னங்க வேணும்?

நிம்மதி வேணும், சந்தோசம் வேணும், அதோடு வேண்டியது வரணும், விரும்பியதை பெறனும்.  

போதுமா?

இன்னும் இருக்கே... ஊருக்காக உழைத்து ஓடா தேயுறதை விட, நமக்காக உழைத்து, நம்மை சார்ந்தவர்களை வாழவைக்கணும்.

அப்பறம். 

அடுக்கு மாடி கட்டலைன்னாலும், அடக்கமா ஒரு வீடு,

படகு மாதிரி இல்லைன்னாலும் பயணம் செய்ய ஒரு காரு,

அடடா.. அப்பறம்..!

அன்பா இருக்கிற மனைவி, அழகா ஒரு பொஞ்சாதி.

ஒ... ஒன் பிளஸ் ஒன்னா?

ஐயையோ... ரெண்டும் ஒன்னுதாங்க.

சரி..இன்னும் உங்க கிட்டே இருந்து எதிர்ப்பார்க்கிறேன். சொல்லுங்க.

கார்ல  ஊரை சுத்தணும்..  கொஞ்சி  பேசுற பொஞ்சாதி பக்கத்திலே இருக்கணும்.

பிரமாதம்... பிரமாதம்

A.T.M மிஷீன் வீட்டிலே இல்லைன்னாலும், தேவைக்கு ஏற்ப பணம் தேடி வரணும்.

நியாயமான கோரிக்கைதான் அப்பறம்.

அப்பறம் என்ன என்ன அப்பறம்.  நாமளும் அழுது    நம்மை சார்ந்தவர்களையும் அழவைக்காத ஆரோக்கியம் வேணும். அதோட நீட்டி படுத்தா நிம்மதியா தூக்கம் வர்ற மாதிரி பிக்கல் புடுங்கல் இல்லாத வாழ்க்கை வேணும்.

நல்லது. நல்லவரான உங்களுக்கு நல்லதே நடக்கும். வருவதும் பெறுவதும் நல்லதாவே இருக்கும். அதுக்கு கடவுள் துணை கண்டிப்பா இருக்கும். நானும் பிராத்திக்கிறேன்.

அப்பறம்... நீங்க நல்லவரா இருந்தால் மட்டும் போதாது.வல்லவராவும் இருக்கணும்.

அதுக்கு என்ன செய்யணும்?

ஆக்க பூர்வமா சிந்திக்கணும். அறிவுபூர்வமா செயல்படனும். தோல்வி வரும் வழியை தொடந்து கவனிக்கணும்.

அடுத்து...

ஏறி வந்த ஏணியை மிதிப்பதும், மற்றவரை ஏளனமாய் பார்ப்பதும் தப்பு.

சரி..!

ஒருத்தன் ஏழையாய் இருக்கிறான் என்று ஏளனமாய் பார்க்காதே. எந்த பிறவியில் என்ன  பாவம் செய்தானோ, இந்த பிறவியில் இல்லாமல் தவிக்கிறான். அவனிலும் உயர்ந்த வாழ்க்கையை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்.

சொல்றேன்..

வஞ்சனை செய்வதும் தவறு, நிந்தனை செய்வதும் தவறு.

செய்தால்?

வினை விதைத்தால் வினையை அறுக்கணும், தினை விதைத்தால் தினையை அறுக்கணும்.

வேண்டாம் சாமி... வேண்டாம்.

நல்லது.


சக்திக்கு மீறிய செயல்களில் புத்தியை செலுத்தாதே.

செலுத்தினால்?

பாதை மாறிய பறவை மாதிரி, வண்டியை தவறவிட்ட பயணி மாதிரி தவிப்பாய்..அதனால்  உள்ளதை வைத்து நல்லது செய்.

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் போங்கோ. அடுத்து.


நீ முதலாளியா?

சந்தோசம். வேலைக்காரன் வியர்வை காயும்முன் சம்பளம் கொடு. இல்லாவிட்டால் உனக்கு கூலி குடுக்க நாள் குறிக்கப்படும் மறந்து விடாதே.


நீ வேலைக்காரனா?

உழைக்காமல் பிழைக்க நினைத்தால்..இருப்பவன் கொடுக்கிறான்,இல்லாதவன் பெறுகிறேன் என்று தத்துவார்த்தமாக யோசித்தால், ஒன்றை பெறுவாய்... வேறு ஒன்றை இழக்க வேண்டிவரும். காத்திரு.

ஐயோ..


மாற்று கருத்தை அறியும் முன் மனதை திறக்காதே.

திறந்தால்?

நீ யார் என்பது அவர்களுக்கு தெரிந்து விடும்.

நல்லது அப்பறம்...!

அதற்காக பேச வேண்டிய தருணங்களில் அமைதியாக இருந்து விட்டால், அமைதியான தருணங்களில் நிம்மதியாக இருக்க முடியாது.

அற்புதம்... அப்பறம்..!


எந்த வகையிலாவது சந்தர்ப்பம் மனிதனை சந்திக்கும். சிந்திக்காமல் விட்டு விட்டால்?

விட்டு விட்டால்?

உழுகிற நேரத்தில் ஊருக்கு போனால் அறுக்கிற நேரத்தில் அருவாள் தேவையில்லை.


கடந்த காலங்களுக்காக வருந்தாதே. அது வரும் போகும். எதிர்காலத்திற்காக திட்டமிடு. எப்போதும் ஜெயிக்கிற இடத்தில் இருப்பாய்.

உண்மை.. உண்மை...!


என் நண்பர் மதிவாணன் சொல்வது போல், காலை உணவு உண்பதற்கு முன், கடவுளுக்கு நன்றிசொல். உன்னை போல் மற்றவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்று பிராத்தனை செய்.

ஏற்று கொள்கிறேன். அடுத்து.

குறுப்பிட்ட இடைவெளியில் உணவு உட்கொள். பசித்திருக்கும் போதே ருசிப்பதை நிறுத்து.

நிறுத்தினால்?

வைத்தியன் வீட்டுக்கு வருவதை தவிர்க்கலாம்.


ஒவ்வொரு  இரவும் மரணத்திற்கான ஒத்திகை என்பதை மறந்து விடாதே. அதனால் இன்று நம் வாழ்வின் கடைசி இரவு என்று நினைத்து சந்தோசமாக உறங்கு.

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு   உண்மை... விழித்தால் உயிர் பிழைத்தால் எல்லாம் வரும். சொந்தம் பந்தம் சொத்து சுகம்.எல்லாம்.

புரிஞ்சா சரி.

பயமற்ற வீரனை போலவும், பாசாங்கற்ற குழந்தையை போலவும், நட.. இரு. உலகம் உன்னை விரும்பும். மதிக்கும்.


சத்திய வார்த்தை.

கடைசியாக ஓன்று... பழைய செருப்பை கழட்டி எரிவது போல்,படுக்கையை விட்டு எழு. உற்சாகமாய் உழை. உண்மையை விரும்பு, உண்மையாய் இரு.

இருந்தால்?

எட்டி ஓடும் காலத்தை கட்டி இழுத்து வரலாம். நீ ஜெயிப்பாய்.










5 comments:

  1. பசித்திருக்கும் போதே ருசிப்பதை நிறுத்து.

    நிறுத்தினால்?

    வைத்தியன் வீட்டுக்கு வருவதை தவிர்க்கலாம்.

    மிகச்சிற்ப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. அருமை... ரசித்துப் படித்தேன்...

    ReplyDelete
  3. உங்கள் பாராட்டுக்கு நன்றி. ராஜராஜேஸ்வரி ( ஐயா.. or மேடம் )

    ReplyDelete
  4. உங்கள் பாராட்டுக்கு நன்றி. ராஜராஜேஸ்வரி ( ஐயா.. or மேடம் )

    ReplyDelete
  5. பாலா சார்... நன்றி... நன்றி...நன்றி..

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...