ads

Wednesday 15 February 2012

கிருஷ்ணரின் சிந்திக்க சில நிமிடம்... தன்னம்பிக்கை கட்டுரை.

சாதனையாளர்கள் பிறக்கிறார்களா உருவாகிறார்களா?

முட்டையில் இருந்து கோழி வந்ததா?  கோழியில் இருந்து முட்டை வந்ததா? இந்த கேள்விக்கான விடையை கண்டு பிடித்து விட்டால், உண்மை தெரிந்து விடும்.

சரி.... சாதனை என்பது என்ன?

இந்த பூமி பந்து உருவாக 250 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.  இது அறிவியல் கணக்கு.  இந்த பூமியில் எத்தனையோ உயிரினங்கள் தோன்றி மறைந்து விட்டன.

எத்தனையோ ஆயிரம்  கோடி மக்கள் பிறந்து , வாழ்ந்து,  இதே மண்ணில் மறைந்தும் போயிருக்கிறார்கள்.  ஆனால் வரலாற்று கணக்கில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை எத்தனை பேர்?

சில ஆயிரங்கள் மட்டுமே.... ஏன்?

கணக்கில் இருப்பவர்கள் சாதனையாளர்கள்.

சாதனை என்பது என்ன?

சாதனை என்பதே... தன்னை உணர்ந்தவன்,  தனக்கு பிறகு தன வழியை பின்பற்ற தூண்டுகோலாய் இருப்பவன், மற்றவர்கள் பயன் பெரும் வகையில் செயற்கரிய செயல்களை செய்பவன், வாழ்நாள் சாதனையாளன் என்று வரலாறு சொல்கிறது.  போகட்டும்.

தம்பி..வா....உன்னிடம் இருப்பது என்ன?

ஒரு வீடு வச்சு இருக்கேன்.  கார் வச்சு இருக்கேன்,  100 பவுன் நகை வச்சு இருக்கேன்,  வங்கி கணக்கில் அஞ்சு லட்சம் பணம் இருக்கு.  அப்பறம் என்ன ரெண்டு குழந்தை செல்வங்கள் இருக்கு.  ஆசையா கட்டின மனைவி இருக்கா.

இதுதான் உன் பதிலா....இப்படித்தான் பதில் சொல்ல போகிறாயா?  அப்படியானால்  இது ஒரு மாயை.  எல்லாம் மாயை.  இது எதுவும் உன்னிடம் நிரந்தரமாக தங்கும் என்பதற்கு,  எந்த உத்திரவாதமும் இல்லை.

கால சூழலில் நீ வீட்டை இழக்க நேரலாம்.  காரை விற்க  நேரலாம். அவ்வளவு ஏன்?  உன் மனைவி கூட உன்னை விட்டு பிரிந்து போகலாம்.  பெற்று வளர்த்து பேணி காத்த பிள்ளைகள் கூட,  ஒரு நாள் உன்னை நிர்கதியாய் விட்டு விட்டு போய் விடலாம். அதானால் இதெல்லாம் நிரந்திரம் இல்லை.  நான் கேட்பதே வேறு.

உன்னை உனக்கு தெரியுமா?  உன்னுள் ஒளிந்து கிடக்கும்  ஆக்கும் சக்தியை அறிந்து கொண்டாயா?  வாழ்நாள் சாதனையாளராக வரலாற்று பக்கங்களுக்கு வர என்ன செய்ய போகிறாய்.

அதற்கு உன்னிடம்  இருக்கும் கை இருப்பு என்ன.  அதை தெரிந்து கொண்டாயா?

குமாஸ்த்தாவாக வாழ்கையை துவக்கிய பெர்னாட்ஷா உலகம் போற்றும் தத்துவ ஞானியாக மாறினாரே எப்படி?

கண்டக்டராக வாழ்கையை துவக்கிய ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மிளிர்கிறாரே  எங்ஙனம்?

குடும்ப தொழிலே வியாபாரம்தான்.  இருந்தும் அதை உதறிவிட்டு அரசியலில் குதித்தாரே கென்னடி எதற்காக?

மளிகை கடையில் எடுபிடியாக வாழ்க்கையை துவக்கிய சரவணபவன் அண்ணாச்சி,  இன்று ஹோட்டல் தொழிலில் கொடி கட்டி பறக்கிறாரே எப்படி?

கிராமத்தில் பிறந்த இளையராஜா உலகமே பாராட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறாரே எங்ஙனம்?

தன்னை உணர்ந்து கொண்டதால்.



ஒரு சென் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குருவும் சீடனும் காட்டு வழியே நடந்து போய் கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்ணில் ஒரு காட்சி கண்ணில் பட்டது.   ஒரு முயலை நரி ஓன்று துரத்தி கொண்டிருந்தது.

இதை கவனித்த குரு,  சீடனிடம் கேட்டார்.  கவனித்தாயா?

ஆமாம் குருவே.

என்ன பார்த்தாய்?

ஒரு முயலை நரிஓன்று துரத்தி செல்கிறது.

சரி... என்ன நடக்கும்?

குரு இந்த கேள்வியை கேட்டதும் சிஷ்யனுக்கு சிரிப்பு வருகிறது.  என்ன குருவே....  முயலை எப்படியும் நரி பிடித்து விடும்.

எதை வைத்து இப்படி சொல்கிறாய்?

முயல் வேகமாக ஒடகூடியதுதான். இருந்தாலும் அதை விட வேகமாக ஒடக்கூடியது  நரி.   அதனால் முயல் நரியிடம் சிக்கி கொள்வது இயல்பு.

அப்படி நடக்காது என்று நான் சொல்கிறேன்.

குரு இப்படி சொன்னதும் சீடனின் சிந்தனை வேறு விதமாக சென்றது.  இவ்வளவு புத்திசாலியான குரு,  சில சமயம் முட்டாள் தனமாக சிந்திக்கிறாரே... முயலை விட நரி வலிமையான மிருகம் என்பது புரியாமல் இருக்கிறாரே என்று நினைக்கிறான்.

அப்போது குருவே கேட்கிறார்.  நீ என்ன யோசிக்கிறாய் என்று எனக்கு தெரியும்.   உன்னை பொறுத்தவரை முயல் நரியை பிடித்துவிடும்.  அதானே?

ஆம் குருவே.

இங்குதான் தவறு செய்கிறாய்.  இரண்டும் ஓடுகிறது.   நரி எதற்கு ஓடுகிறது?

இரையை பிடிப்பற்தாக.

முயல் எதற்கு ஓடுகிறது?

உயிரை காப்பாற்றி கொள்வர்தற்காக.

இப்போது எது முக்கியம்.   உயிரா.... உணவா?

நரிக்கு உணவு முக்கியம்.  முயலுக்கு உயிர் முக்கியம்.

நான் ஒத்து கொள்கிறேன்.  ஆனால் முயலை விட நரி வேகமாக ஓடுமே.   நான் சொல்கிறேன்....நரியிடம் சிக்காமல் முயல் தப்பிவிடும்.  கவனி.

குரு சொன்ன மாதிரி முயல் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்து நரியிடம் இருந்து தப்பி ஒரு புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.  இந்த கதை எதற்கு தெரியுமா?

வாழ துடித்த முயல் மாதிரி... நீயும் போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகதான்.

வலிமையான எதிரி என்று முயல் நினைத்திருந்தால் நரியிடம் சிக்கி இருக்கும்.  ஆனால் அதன் தைரியம்,  தப்பி விடலாம் என்ற தன்னம்பிக்கை,  சிக்கி விட கூடாது என்கிற விடாமுயற்சி, இது இதுதான் உனக்கு வேண்டும்.

உனக்குள் ஒளிந்து கிடக்கும் ஆற்றலை கண்டுபிடி.  நான் சாதிக்க பிறந்தவன்,  சாதனையாளன் என்பதை நிருபி.

நம்மில் பலர் இறந்த காலத்திலேயே வாழ்கிறார்கள்.  நான் அப்படி இருந்தேன்,  இப்படி இருந்தேன் என்று பழம்கதை பேசியே காலத்தை வீணடிப்பார்கள்.  சிலர் எதிர்காலத்தை நினைத்தே காலத்தை போக்குவார்கள்.

எதிர் கால கனவு தேவைதான்.  எதிர்காலத்திற்காக,  நிகழ்காலத்தில் என்ன செய்து இருக்கிறாய் இதுதான் உன் முன் உள்ள கேள்வி.

படிப்பறிவே இல்லாத காமராஜர் ஏர் ஓட்ட போகவில்லை.  தன்னை உணர்ந்தார்.   முதலமைச்சர் நாற்காலி அவருக்கு காத்திருந்து.

முதலில் உன்னை சோதனை செய்.  உன்னிடம் இருக்கும் திறைமையை கண்டுபிடி.  வாழ்நாள் சாதனையாளராக மாறு.  வரலாறு உன்னையும் பதிவு செய்து கொள்ளட்டும்.  

   

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...