ads

Wednesday 15 May 2013

இறைவனின் காலடியில் இறக்கி வை!!



விடியும் என்ற நம்பிக்கையில் தான் தொடர்கிறது வாழ்க்கை பயணம். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு பொழுதும் விடிகிறது. நம்பிக்கையின் அடிப்படையில் அமைவது மனித வாழ்க்கை. 

எனது நம்பிக்கைகளே என் வார்த்தைகளாகின்றன. வார்த்தைகள் எழுத்துக்களாகின்றன. அனுபவங்கள் அந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்கின்றன.

துன்பங்களில் இருந்து தப்பித்து செல்லும் போராட்டமாகத்தான்  இருக்கிறது பெரும்பாலானோர் வாழ்க்கை. வாழ்க்கயின் மீது நம்பிக்கையை கொடுக்கும் ஒரே சாதனம் மதம்தான். அதன் வழிகாட்டல்தான்.

மதம் மனிதர்களிடையே வேறுபாடுகளை சொல்லவில்லை. ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கவில்லை. மனிதனின் ஆதிக்க மனப் பாங்குதான் நடத்தைக்கு சாதகமாய் மதத்தை வளைத்துக் கொண்டது என்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக போராட முற்பட்டவர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே என் கருத்து.

விவாதங்களுக்கு முடிவில்லை. இருக்கிறார் இல்லை என்ற முரண்பாட்டை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால், மனித வாழ்க்கையின் சிக்கல்களுக்கு தீர்வு இதுதான் என்று சரியான வழியைக் காட்ட யாரும் இல்லாத போது, மதம் கூறும் வழிமுறைகளை நாம் பின்பற்றி பார்ப்போம். அதனால் என்ன கெடுதல் என்ற கருத்துதான் மனதில் நிற்கிறது.

எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை மனதில் விதைக்கும், நானிருக்கிறேன் என்ற தைரியத்தை தருகிற இறைவனை நம்பி வழிபாட்டினை மேற்கொள்வதினால் எதை இழந்து விட போகிறோம்.

இந்த எண்ணம்தான் என்னை வழிநடத்துகிறது. அதுதான் இறைநம்பிக்கையை மேலும் அதிகரித்தது. நான் வளர்ந்திருக்கிறேனே தவிர தாழ்ந்து விடவில்லை. நம்பிக்கையோடுதான் என் ஒவ்வொரு நாளும் விடிகிறது.

நான் கடைபிடிப்பதைதான் அடுத்தவருக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.  பயன்பெற்றதால் சிபாரிசு செய்கிறேன்.

உனக்கென்ன அக்கறை என்று எழுகிற கேள்விக்கு சமுதாய பற்றும் சகமனிதனை நேசிக்க வேண்டும் என்ற குணமும் இதற்கான காரணம் என்பதே என்பதில்.

தன்னலமற்ற ரிஷிகளும், மகான்களும், ஞானிகளும் அறிவு ஜீவிகளும் தமக்கு பின்னால் வரும் தலைமுறையினரை முட்டாளாக்க வேண்டும் என்ற  எண்ணத்தில் பொய்யாக எதையும் சொல்லிவிட்டு செல்லவில்லை.

அவர்கள் உணர்ந்த உண்மையை நமக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் சொல்லி வைத்தார்கள். அதைதான் கடைப்பிடித்து வாழ்கிறேன்.

நிலையற்ற இந்த மானிட வாழ்க்கையில் வாழும் காலத்தில் எல்லோரும் நல்ல முறையில் வாழவேண்டும் என்ற ஆவலில் மனம் கூறும் வழியில் நடக்கிறது என் பயணம்.

என் அன்புக்குரியவர்களுக்கு என்ன சொல்கிறேனோ அதையே எழுகிறேன். அமைதியாய், நிம்மதியாய், வாழ்க்கையை வாழ்ந்து செல்வதற்கு வழிகள் நமக்காக சொல்லப்பட்டிருக்கின்றன.



நம்பிக்கையோடு கடைபிடிப்போம்.  துன்பங்களை இறைவனின் காலடியில்  இறக்கி வைத்து விடுவோம். இறைவனின் பேரருள் எப்போதும் உங்களுக்கும் இருக்கட்டும். வாழ்க  வளமுடன்.

2 comments:

  1. /// அவர்கள் உணர்ந்த உண்மையை நமக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் சொல்லி வைத்தார்கள்... ///

    நல்ல பகிர்வு... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. "எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை மனதில் விதைக்கும், நானிருக்கிறேன் என்ற தைரியத்தை தருகிற இறைவனை நம்பி வழிபாட்டினை மேற்கொள்வதினால் எதை இழந்து விட போகிறோம்." - எதையும் இழக்க போவதில்லையே அருமையான பதிவு -நன்றி

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...