கடவுள் இருக்கிறாரா என்பதை விட, எங்கே இருக்கிறார் என்றால் கேள்வி சரியானது. முதலில் இறைவழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம்.
அறிவுபூர்வமான தேடலை விட, ஆத்மார்த்தமான தேடலில் தான் இறைவனை காண முடியும்.
இறைவன் ஒரு யுகத்தில் மனிதனோடு மனிதனாக வாழ்ந்த காலம் உண்டு. இதிகாச காலத்தில் இறைவன் தோன்றி மறைந்திருக்கிறான். ஆனால் புராணகாலத்தில்தான் மனிதனோடு மனிதனாக வாழ்ந்திருக்கிறான்.
ராமாயணத்தை எடுத்துக் கொண்டால் ராமனும், லட்சுமணனும் இறையம்சங்கள்தான். ராமன் விஷ்ணுவின் அவதாரம்.
மனித வாழ்வில் ஏற்படும் அன்பு, பாசம், பிரிவு, வருத்தம், ராஜயோகம் என சகல நிலைகளையும் சந்திக்கிறான் என்றுதான் ராமாயணம் கூறுகிறது.
மகாபாரதத்தில் கூட கிருஷ்ணன் தெய்வாம்சம் பொருந்தியவன் தான். அக்கால கட்டத்தில் இன்னும் பல அவதார புருஷர்கள் சாதாரண மனிதர்களாக, சக மனிதர்களோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
சாகா வரம் பெற்ற கிருஷ்ணனுக்கு கூட காந்தாரியின் சாபத்தால் மரணத்தை எய்துவதாக சொல்லப்படுகிறது. அதாவது அப்போது எடுத்திருந்த அவதார உடலை உதறிவிட்டு போகிறார்.
அப்போது வாழ்ந்தவர்கள் இப்போது ஏன் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்பது தான் பலரின் கேள்வி.
இது கலியுகம். மனிதன் ஆசையில் உழல்கிறான். மனிதனை தவிர மற்ற உயரினங்கள் நிகழ்கால வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போகின்றன.
அதற்கு எதிர்கால தேவைகள்,சிந்தனைகள் இல்லை. மனிதன் அப்படி இல்லை. தேடுகிறான், அதற்காக ஓடுகிறான், மனநிறைவை பெற முடியாமல் போராடுகிறான்.
அதனால் வஞ்சகம், சூழ்ச்சி பெற்றவனாகி விட்டான். இக் காலத்தில் தெய்வங்கள் மறைந்தே வாழும்.
இது சரியான விளக்கமாக படவில்லை.
ராமாயணத்தில் கூட கலியுகத்தில் சொல்லப்படும் மனநிலை பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள். கூனி சூழ்ச்சி செய்கிறாள், ராமன் காட்டிற்கு போகிறான்.
சீதையை அபகரிக்க ராவணன் வருகிறான். தன் உடன் பிறந்த தம்பி சுக்கிரீவனை விரட்டி விட்டு ஏகபோகமாக அரசாளுகிறான் வாலி. சுக்ரீவனின் மனைவியை கூட அபகரித்துக் கொள்கிறான்.
ஆக எல்லா நிலை மனிதர்களும் வாழும் இக்காலம் மாதிரியே அக்காலத்திலேயும் இருந்திருக்கிறது அதானே உண்மை.
உண்மைதான். அது அத்தனையும் அவதார நோக்கம்.அதனால் அது அரங்கேறியது. இப்போது நடப்பதும் அவதார நோக்கம் தான். கலியுகத்தின் முடிவில் நிகழப் போகும் கல்கி அவதாரத்திற்கான முன்னேற்பாடுதான் இதெல்லாம்.
இந்த கலியுகத்தில், காலம் வரும் போது கட்டாயம் வெளிப்படுவார். என்ன கல்கி அவதாரத்தை பார்க்கும் பாக்கியம் நம்மில் யாருக்கும் இல்லை.
நிற்க.
கடவுள் எங்கே இருக்கிறார் என்பது இருக்கட்டும். கடவுளின் வடிவில் நாம் சிலரை சந்திக்க நேரிடும்.
ஒரு இக்கட்டான நேரத்தில் உதவுகிற ஒருவரை கடவுள் மாதிரி வந்தீங்க என்போம். அந்த நேரத்தில் கடவுளின் வடிவம் அவர்.
உயிர் கொடுத்து, வளர்த்து ஆளாக்கி வழிக் கட்டும் தாயும் தந்தையும் கூட கடவுளின் அவதாரங்கள் தான்.
தறிகெட்டு ஓடி வரும் வாகனத்தை பார்த்து, உங்கள் கையை பிடித்து இழுத்து ஒருவர் காப்பாற்றினால் அவர் கடவுளின் வடிவம் தான்.
கடவுள் மறைந்து வாழவில்லை. மனிதனாகத்தான் வாழ்கிறார். புரிந்தவர்களுக்கு புரியும்.