ads

Thursday 27 March 2014

உன் தேவதையின் பெயர் அம்மா


ஒரு குழந்தை கடவுளிடம் கேட்கிறது.

 “கடவுளே என்னை நீங்கள் நாளைக்குப் பூமிக்கு அனுப்பப்போவதாய் எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள்.. இவ்வளவு சின்னதாக இருக்கும் என்னைத் தனியாகப் பூமிக்கு அனுப்புகிறீர்களே?  எனக்கு மிகவும் பயமாக இருக்கிறதே..” 

  “பயப்படாதே அங்கே உனக்காக ஒரு தேவதை காத்துக்  கொண்டிருக்கிறாள். அவள் உன்னை அக்கறையோடு கவனித்துக்  கொள்வாள்.” 

  “இங்கே பாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியோடு இருக்கின்றேனே?” 

   “ அங்கே உன் தேவதை உனக்காக பாடுவாள்.. உனக்காக சிரிப்பாள். அவளது அன்பை நீ உணர்ந்து கொண்டு நீ சந்தோஷப்படுவாய்.” 


 “ஆனால் கடவுளே.. அவர்களின்  மொழி தெரியாமல் ,அவர்கள் பேசுவதை நான் எப்படி புரிந்து கொள்ள முடியும்? அவர்கள் மொழியை எனக்கு பேசவும் தெரியாதே?”

 “நீ இதுவரை கேட்காத இனிமையான அழகான அன்பு வார்த்தைகளையெல்லாம் உன் தேவதை உன்னிடம் பேசுவாள். . உனக்குப் பசியெடுத்தால் அவள் துடித்துப் போவாள். உனக்கு பேசுவது எப்படி என்று பொறுமையாகச் சொல்லித் தருவாள்”.  

“கடவுளே உன்னிடம் பேச வேண்டும் என்று நான் விரும்பினால் உன்னை எப்படித் தொடர்பு கொள்வது?”

“கவலைப் படாதே.  உன் இருகைகளையும் பிடித்து என்னை எப்படி வணங்குவது என்று அவளே சொல்லித் தருவாள்.. நீ என்னுடன் பேசுவதை நான் கேட்பேன்.” 

“ஆனாலும் கடவுளே உன்னைக் காணாமல் நான் மிகவும் வருத்தப்படுவேனே?”

“நீ என்னை எப்படி அடைவது என்பது  பற்றியெல்லாம் உன் தேவதையே உனக்குக் கற்றுத் தருவாள். அது மட்டுமல்ல.. எப்போதும் நான் உன்னைக் கவனித்துக் கொண்டுதானிருப்பேன் கவலைப்படாதே”. 

அப்போது சொர்க்கத்தில் திடீரென அமைதி நிலவியது. பூலோகத்தில் கசமுச என பேசும் குரல்கள், அங்கேக் கேட்டது..  தான் புறப்படும் வேளை இது என்பதைப் புரிந்துக் கொண்ட குழந்தை..

அவசர  அவசரமாகக் கடவுளிடம் கேட்டது.. “ கடவுளே என் தேவதையின் பெயரை  இன்னும் நீங்கள் என்னிடம் சொல்லவில்லையே?”  

  கடவுள் உடனே  குழந்தையின் காதுகளில் உச்சரித்தார்..

 “உன் தேவதையின் பெயர்   அம்மா..” 




காந்தாரியின் பதிவிரதா தன்மை

“மரணம் என்பது நிச்சயமான ஒன்று,   அது வந்து விட்டுப் போகட்டும். எனக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது.. அது நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் என்பதும் தெரியும்.  உயிருக்கு பயந்தவன் நானில்லை.. 

ஆனால் அவமானப்பட்டு உயிரிழப்பதை நான் விரும்பவில்லை..  99 தம்பிகள், பாசமிக்க ஒரு மைத்துனன்,  உயிருக்கு உயிரான நண்பர்கள், மேலான உறவுகள், ரத கஜ தூரக பதாதிகள், நாடு நகரம்  என   கௌரவமாக வாழ்ந்தவன்.. 

என் மரணம் இழிந்த நிலையை அடைந்து விடக்கூடாது. காலம் என்னை அவமானத்தின் சின்னமாய் பேசிவிடக் விடக்கூடாது. அதற்காகத்தான் பயப்படுகிறேன்..  இந்த பீமன் என் தொடையை கதையால் அடித்து நொறுக்கி ரத்தத்தை குடிப்பதாக சபதம் செய்திருக்கிறான். 

பாஞ்சாலியோ.. என் ரத்தத்தினால்தான் தன் கூந்தலை முடிப்பாளாம்.. என்ன ஒரு அவமானம்.. 

இவ்வளவு வீராதி வீரர்கள் இருந்தும்.. தம்பிகள் இருந்தும்.. வீரமிக்க பாட்டனார், ஆசாரியர் அனைவரும் இருந்தும்.. இத்தனைக்கும் மேலாக வில் வித்தையில் ராமனுக்கு நிகரான வீரன், என் நண்பன் கர்ணன் இருந்தும் இந்தப் போரில் தோற்று விட்டேனே..  என்ன காரணம்?  

என் வம்சம் முழுதும் என்னுடன் முடிந்து விடுமோ?  என் தாய் தந்தையர் இருவரும் இருக்கிறார்கள்.. அவர்களுக்குப் பின்?.. 

இறைவன் என்னை முற்றிலுமாய்  கைவிட்டு விட்டான் என்றே நினைக்கிறேன்.. ஒரு அரசனாக எனக்கு சரி என்று பட்டதைத் தான் செய்து வந்தேன்.. ஆனால் எல்லோரும் என்னைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.. 

இந்தக் கண்ணன் உட்பட.. அவர்களின் மேல் எந்தத் தவறும் இல்லையாம்.. ஒருக்கால் உண்மை அதுதானோ? என் மேல்தான் தவறோ?

 பாண்டவர்களிடம்  கொஞ்சம்  இரக்கத்துடன் நடந்து கொண்டிருக்க வேண்டுமோ? தவறு செய்து விட்டேனோ?    என்ன நினைத்து என்ன செய்வது?  எல்லோரையும் இழந்து விட்டேன்.. இனி போய் என் ஒரு  உயிருக்காக யாருடைய காலிலும் மண்டியிட மாட்டேன்.  

இதுதான் விதி என்றால் அது அப்படியே நடந்து விட்டுப் போகட்டும்.. போராடிச் சாகிறேன்.. தொடையை நொறுக்கினால் என்ன? சிரசையே சிதைத்தால்தான்  என்ன? உறவுகளை பலி கொடுத்த பதினேழு நாட்கள் போர் நடந்து விட்டது..  இன்னும் ஓரிருநாட்களில்  என் தலை தரையில் சாய்ந்து விட்டால் பாண்டவர்களின்  கொடி உயரும்.. உயர்ந்து விட்டுப் போகட்டும்..”.

துரியோதணனுக்கு உறக்கம் வரவில்லை..    எப்படி வரும்? வந்தால்தான் அது அதிசயம்..  பல சிந்தனைகள் அவன் மனதில் அலைபாய  பாசறையில் உலவிக் கொண்டிருந்தான். 

பாசறை வாயிலில் நிழலாய் ஒரு உருவம் தெரிந்தது.. யாரது இந்த இரவு நேரத்தில்? அதுவும்  பெண் போலத் தெரிகிறது.. யாராக இருக்கும்..

‘யார் அது?’ துரியோதணன் குரலைச் சற்று உயர்த்தினான்.

பதில் பேசாமல் அந்த பெண்ணுருவம் உள்ளே நுழைந்தது..

‘அம்மா.. நீங்களா? இந்த நேரத்தில்..  நாய் நரிகளும் , கழுதைப் புலிகளும் நடமாடும் இந்த யுத்த பூமியில்..  நீங்கள் ஏனம்மா வந்தீர்கள்?’ துரியோதணின் குரல் நெகிழ்ந்தது . கண்களில் நீர் துளிர்த்தது.

‘மகனே துரியோதணா!’ காந்தாரி துரியோதணனை ஆசையுடன்  அணைத்துக் கொண்டு அவனது தலையை வருடினாள். 

‘நீ  இங்கே மனம் அலைபாய்ந்து தவித்துக் கொண்டிருக்க.. என்னால் எப்படியப்பா நிம்மதியாக இருக்க முடியும்?  உன்னை சந்தித்து பேசி விட வேண்டும் என்று இதயத்தில் ஓர் உந்துதல்.. அதனால் ஓடோடி வந்தேன்..’

‘அம்மா! இனிமேல் எங்கே என் குரலைக் கேட்க  முடியும் என்று வருந்துகிறீர்களா? 99 பிள்ளைகளை பறிகொடுத்து விட்டீர்கள்? நான் ஒருவன் போனால் என்ன இருந்தால் என்ன? ‘

‘துரியோதணா! கௌரவக் குலச் செல்வமே! எங்களுக்கு கொள்ளிப்போட  நீ ஒருவன் இருக்கிறாய் என்று நம்பிக்கையில்தான் இந்த உயிரை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறேனப்பா.. நீ இப்படியெல்லாம் பேசாதே..  எனக்கு தாங்கவில்லை..’ 

‘அம்மா!  நாளை என் இறுதி நாள் என்றே  என் உள்ளுணர்வு சொல்கிறதம்மா..  வீரனுக்கு நித்தம் மரணம் தானம்மா.. மரணத்தின் எதிர் நிற்க நான் பயப்படவில்லை..  வயதான காலத்தில்  பெற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைக் கூடச் செய்யாமல் உங்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டுச் செல்கிறேனே என்பதுதான் என் மன வேதனைக்குக் காரணம்.. உறக்கம் தொலைந்ததற்கு காரணம்.  வேறொன்றும் இல்லையம்மா..’

‘மகனே சுவேதனா!   நீ எங்களுக்கு வேண்டும்..  நான் சொல்வதை தயவு செய்து கேள்..  என் வேண்டுகோளை மறுக்காதே..  எனது கற்பு நெறியும் பதிவிரதா தர்மமும் உண்மையாக இருக்குமானால் எந்த அஸ்திரத்தினாலும் உன்னை வெல்ல முடியாது. மரணமும் உன்னை நெருங்காது.. நான் சொன்னபடி செய்வாயா மகனே? ‘

‘அம்மா..  நான் உயிர்வாழ்வது உங்களுக்கு முக்கியம் என்றால் அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.. ஆனால் அதற்காக யார் காலிலும் விழச்சொல்லாதீர்கள்  உங்கள்  மகன் வீரத்தோடும் மானத்தோடும் வாழ்ந்தான்.. மறைந்தான் என்பதைத் தவிர வேறொரு அவச் சொல்லை எனக்குத் தேடித் தந்துவிடாதீர்கள் அம்மா!’ 

‘மகனே! நீ யார் காலிலும் விழ வேண்டாம்..  இந்தப் போர்க்களத்தின் அருகிலுள்ள தடாகத்தில் குளித்துவிட்டு.. குழந்தையாய் எப்படி என் கையில் தவழ்ந்தாயோ.. அந்த நிலையில் உடலில் ஓராடையும் இன்றி நீ வா.. 

இத்தனைக் காலம் என் கணவரைப்போலவே  நானும் வெளி உலகத்தை பார்க்கக்கூடாது என்று என் கண்களைக் கட்டி விரதமிருக்கின்றோனோ.. அந்த கட்டுகளை களைந்து, என் இருவிழிகளாலும் உன்னை பார்க்க வேண்டும்.. 

அப்படி என் கண்களின் வழியே நான் உன்னைப் பார்த்து , நீ மரணமின்றி இன்னும் நெடுநாள் வாழ வேண்டும் என்று ஆசிர்வாதிக்கிறேன்.. அதன் பின் உன்னை மரணம் நெருங்காது..’

‘அம்மா! என்ன இது?...’

‘மறுக்காதே மகனே! நான் உன் தாயடா.. என் பேச்சைக் கேள்..’

தாயின் பேச்சைத் தட்ட மனமின்றி துரியோதணன் பாசறையை விட்டு வெளியேறி தடாகத்தை நோக்கி நடந்தான்.  

அதே சமயத்தில் இந்த உரையாடல் , பாண்டவர்களின் பாசறையில் இருந்த சர்வ வியாபியான கண்ணனின் மனதில்  கேட்டது.  

காந்தாரியின் பதிவிராதா தன்மையையும் அவளது கற்பின் ஆற்றலையும் கண்ணன் அறிவான்..  அவள் கூறியது மட்டும் நடந்து விட்டால் துரியோதணனை வெல்ல முடியாது என்று கவலைப்பட்டான்.. என் சக்திகளும் காந்தாரியின் கற்பின் சக்தி முன் பலிக்காது..  என்ன செய்யலாம்..யோசித்தான். 

திரௌபதை அவிழ்ந்த கூந்தலுடன் செய்த சபதமும் அவனது மனதில்  தோன்றியது.. 

பாசறையை விட்டு கண்ணன் வெளியேறினான்..  தடாகத்தின். அருகில் உள்ள சோலையில் நின்று கொண்டான்.  

துரியோதணன் தடாகத்தில் மூழ்கி குளித்தான்.. தன் உடைகளை அங்கேயே களைந்து ஓர் ஓரத்தில் போட்டு விட்டு , உடைகளற்ற உடலில் நீர்த் துளிகள் வழிந்தோட  கரையேறி  பாசறையை நோக்கி¢ நடந்தான்..

“துரியோதணா! என்ன இது கோலம்? நீயா இப்படி? எல்லா சாஸ்திரங்களும் அறிந்தவன் தானே நீ.. இந்த வானமும் கிரகங்களும் நட்சத்திரங்களும், இரவுத் தேவதைகளும் பார்க்க நிர்வாணமாய்  வரலாமா? எங்கே உன் உடைகள்?  இதோ என்னிடம் புதிய உடைகள் இருக்கிறது அணிந்து கொள்.. “  என்றபடியே  கண்ணன் துரியோதணனின் முன்னே வந்து கொண்டிருந்தான். 

‘கண்ணா! வழி விட்டு விலகி நில்.. உன்னிடம் பேசுவதற்கு எனக்கு நேரமில்லை.. நான் என் தாயைச் சந்திக்க வேண்டும்..’ 

“என்ன இது அநியாயம்.. துரியோதணா.. நீ என்ன சின்னக் குழந்தையா? இல்லைச் சிறுவனா?   உடையின்றி, பிறந்த மேனியுடன் தாயின் முன் செல்வதற்கு உனக்கே அசிங்கமாய் தெரியவில்லையா?  

என்னதான் உன் தாய் கண்ணைக் கட்டிக் கொண்டிருந்தாலும்.. அவள் முன் ஒரு வயது வந்த ஆண்மகன் , அவன் மகனாகவே இருந்தாலும் இப்படி நிற்பது மிகப்பெரிய பாதகமானச் செயல் என்பது உனக்குத் தெரியாதா?  

எங்கேயாவது இப்படி நடந்தது எனக் கேள்விப்பட்டிருக்கிறாயா?  சாஸ்திரங்களை படித்தவன்தானே நீ? எதற்கு இந்த விபரீத புத்தி.?” யாராவது இதை அறிந்தால் அவர்கள் உன் தாயைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நாளை இந்த உலகம் உன்னைப் பற்றி என்ன பேசும்? 

கண்ணனின் பேச்சால் துரியோதணன் குழம்பிப் போனான். 

‘கண்ணா.. என் தாயின் கட்டளைப் படியே நான் செல்கிறேன்.. எனது நன்மைக்காகவே இதைச் செய்யச் சொல்லி வற்புறுத்தினார்..’

‘எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே.. நாளை உன் செயல் எப்படிப் பேசப்படும் என்று  எண்ணிப் பார்த்தாயா?’

‘கண்ணா! இப்போது நான் என்னதான் செய்யட்டும்?’

 ‘நீ உடைகள் அணியாமல் இந்த வாழை மரத்தின்  மட்டைகளை உன் இடுப்பில் அணிந்து கொண்டு செல்.. அது கூட ஒரு விதத்தில் ஏற்புடையதுதான்..  சாஸ்திரக் குற்றமும் இல்லை.. உன் தாயின் கட்டளையையும்  நீ நிறைவேற்றியது போல்   ஆகும்..’  

‘சரி கண்ணா.. எனக்கும் அதுதான் சரியெனப்படுகிறது’..   வாழை இலை ஒன்றை எடுத்து தன் இடுப்பில் கட்டிக் கொண்டான் துரியோதணன்.

வந்த வேலை முடிந்த திருப்தியில் அங்கிருந்து புறப்பட்டான் கண்ணன்.  

வந்து விட்டேன் அம்மா! பாசறைக்கு வந்து   தாயின் முன் நின்றான் துரியோதணன்.  

காந்தாரி இறைவனை வேண்டினாள்.. ‘நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் என் மகனை நான் பார்த்த பின், என் பார்வை பட்ட அவன் உடலிலிருந்து உயிரை வலுக்கட்டாயமாக எவராலும் அழிக்க இயலாமல் போகவேண்டும்..  

இதோ இத்தனைக் காலம் நான் கொண்டிருந்த விரதத்தையும் மீறி இப்போது என் கண்களின் கட்டுகளை அவிழ்க்கிறேன்’.. காந்தாரி தன் கட்டுக்களை அவிழ்த்தாள்.  

எதிரில் நின்ற மகன் துரியோதணனை  வாஞ்சையுடன் பார்த்தாள்.. ‘இவன் பிறந்ததிலிருந்து நான் இவனைப் பார்க்க வில்லை.. இதோ என் முன்னால் என் மூத்தச் செல்வன்.. எவ்வளவு கம்பீரத்துடன் அவன் முகம் காட்சியளிக்கிறது.. 

கண்களில் மட்டுமே மெல்லிய சோகம் படர்ந்திருக்கிறது..  திரண்ட புஜங்கள் அவனது வீரத்தைப் பறைசாற்றுகிறது.. அவன் என்னை கும்பிட்டு வணங்கிக்கொண்டிருக்கும் உறுதியான கைகள் எவராலும் தோற்கடிக்கவே முடியாத மாவீரன் என்றல்லவாச் சொல்கிறது.. 

எப்படி என் மகனை தோல்வி நெருங்க முடியும்.. என்னால் நம்ப முடியவில்லையே..   அய்யோ! என்ன இது, இவன் இடுப்புக் கீழ் வாழை இலையை  கட்டிக¢கொண்டிருக்கிறானே.. இடுப்புக்கு கீழ் இவன் தாக்கப்பட்டால் இவன் உயிர் போய்விடுமே.. கடவுளே! நான் என்ன செய்வேன்’..  காந்தாரி வருத்தத்தினால் கண்ணீர் வடித்தாள்.  கண்களைக் கட்டிக் கொண்டு பாசறையை விட்டு வெளியேறினாள்.. 

விடிந்தது.. போர் தொடங்கி பதினெட்டாம் நாள் யுத்தம்.   பீமனுக்கும் துரியோதணனுக்கும் கடும் கதையுத்தம்.  துரியோதணனை  துரத்தி துரத்தி அடித்தான் பீமன்.. துரியோதணன் களைத்துப் போனாலும்     , சண்டையைத் தொடர்ந்தான்..  பீமனை அடிக்க, தன் வலுவனைத்தையும் ஒன்று திரட்டிக்கொண்டு ஆக்ரோஷத்தோடு கத்தியவாறு   கதையை ஓங்கினான்.

கண்ணன் பீமனுக்கு  சைகைக் காட்டினான்.

 ஓங்கிய கதை கீழே விழுவதற்குள் பீமனின் கதை   துரியோதணனின் இடுப்பிற்கு கீழ்  வலுவாய்  தாக்கியது. துரியோதணனின் தொடை எலும்பு நொறுங்கும் சத்தம் கேட்டது.  
           *    * 
எங்கு தர்மம் இருக்கிறதோ.. அங்கே தான் ஜெயம் உண்டாகும்.  இறைவனும் தர்மத்தின் பக்கமே இருப்பான்.    துரியோதணனிடம் சிறந்த பண்புகள் இருந்தாலும், அவன்  பாதை தர்மத்திற்கு விரோதமாகவே இருந்தது.  

வீரத்தின் மூலம் அல்லாமல் வஞ்சக சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்களின் நாட்டினை பறித்துக் கொண்டு, பாண்டவர்களின் உடைகளை களைந்து  சாதாரண உடை கொடுத்து அவமானப்படுத்தி, சகோதரர்களின்  மனைவி என்றும் பாராமல்,   பெண் என்ற இரக்கமும் கொள்ளாமல்  திரௌபதியை சபையோர் முன் நிறுத்தி , மானப்பங்கப் படுத்தி, பாண்டவர்களை அழிக்க தர்மத்திற்கு முரணாகச் செயல்பட்டான். 

பாண்டவர்களோ.. கொடுத்த வாக்குபடி காடுகளில் வாழ்ந்து.. நியாயமாக தங்களுக்கு சேர வேண்டிய நாட்டினை கேட்டார்கள். அவர்களுக்காக கண்ணனே தூது சென்றான்.  தன்னிடம் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் , படை பலம் இருக்கிறது என்ற ஆணவத்தினால் ஐந்தடி நிலம் கூட கொடுக்க மறுத்து விட்டான் துரியோதணன்.  பாசமும் இல்லை.. இரக்கமும் இல்லை. 

தர்மம் ஜெயிக்க வேண்டும். கற்புக்கரசியான   திரௌபதியின் சபதம் பலிக்க வேண்டும்  என்பது தானே நியாயம்.  கண்ணன் நியாயத்தின் பக்கமே செயல்பட்டான். 

அதே சமயம் காந்தாரியின் பதிவிராதா தன்மையின் சக்தியையும், அவள்  வாக்கும் பலிதம் ஆகும் என்பது தெரிந்து , அது நடக்காமலிருக்க முயற்சியை மேற்கொண்டான்.

தான் தாயின் கட்டளையை முழுமையாய் நிறைவேற்ற முடியாமல் போனான் துரியோதணன். 

சாஸ்திரம் கூறும் ஒழுக்க நெறியும் காப்பாற்றப்பட்டது.  தர்மமும்  ஜெயித்தது.    

வேதாளமும் வேதியனும்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக் கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது.

வாரும் பிள்ளாய்  வேதியனே!  நான் கொடாக் கண்டனாக இருந்தாலும் நீ விடாக் கண்டனாக இருக்கிறாய்.!  முடியாது என்று தெரிந்த  பின்னும் பின்வாங்காமல்  நீ விழலுக்கு நீர் இறைத்துக் கொண்டிருக்கிறாயோ என்றுத் தோன்றுகிறது.  சரி, பார்க்கலாம் இதில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை.

வேதியா! இந்த மனித வாழ்க்கையே ஒரு புதிர்போல்தான். சில சமயம் சில கேள்விகளுக்கு  விடைதெரியாது.   எது சரி எது தவறு என்பதைச் சொல்லமுடியாமல்    அறிவு மயங்கி நிற்கும் நேரமும் உண்டு.  

சிலரின் செயல்கள், இப்படிப்பட்ட   மனிதர்களும்  இப்பூமியில் வாழ்கிறார்களா என்று  நம்மை திகைப்பில் ஆழ்த்துவதும் உண்டு.

 அப்படிப்பட்ட பெரியார்  ஒருவரின் கதையை இன்று உனக்காக    சொல்லப் போகிறேன்.    

அவர் சிவபக்தர். சிவ பக்தர் என்பதை விட  சிவனின் மேல் அளவற்ற பித்து உடையவர்.  சிவனடியார்களுக்கு செய்யும் தொண்டு அந்த ஈசனுக்கே செய்யும் தொண்டு என்று வாழ்ந்து வந்தார். இயற்பகை என்பது  அவரது பெயர்.  ஊர் காவிரிப் பூம்பட்டினம்.  

பரம்பரைத் தொழில் வாணிபம் என்பதால் சொத்து பத்து அதிகம்.  அவருக்கு ஒரு அழகு மனைவி. கணவன் கிழித்த கோட்டைத் தாண்டாதவள்.  பெயர் மணக்குல மடந்தை. 

சிவனின் அடியவர்கள் அனைவருக்கும் அவரின் வீட்டில்தான் தினசரி உணவு. அதிகாலையில் பற்ற வைக்கப்படும் அடுப்பு  இரவு 12மணிவரை எரிந்து கொண்டேயிருக்கும். 

இயற்பகை வீட்டிற்கு போனால் வயிறார உண்டு வரலாம் என்று நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு வருபவர் ஏராளம்.

சமையல்ஆட்களை வைத்து சமைத்து, பசியோடு வரும்  அடியர்களுக்கெல்லாம் இன்முகத்துடன் பரிமாறுவாள் இயற்பகையின் மனைவி. 

கணவர் இருந்தாலும் வியாபார விசயமாய் வெளியில் சென்றிருந்தாலும் சிவனடியார்களுக்கு உணவிடும் பணி  தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்தது.

தன்னைத் தேடி வரும் சிவனடியார்களுக்கு  உணவு மட்டும் அல்ல, அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் கொடுத்தனுப்புவார். இதனால் அவரது பெயர் ‘இல்லையென்று சொல்லாத இயற்பகை’ என்றே மக்களால்  வழங்கப்படலானது.  

அன்று இயற்பகை வீட்டில் சுமங்கலி பூஜை. தன் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று சுமங்கலிப் பூஜைக்கு ஏற்பாடு செய்கிறாள் மணக்குல மடந்தை.  இப்பூமியில் நெடுநாள் வாழ, நீண்ட ஆயுள் வேண்டும் என்ற ஆசையெல்லாம் இயற்பகைக்கு இல்லை.

 சுமங்கலி பூஜையில் கலந்து கொள்வதற்காகவேணும் நிறைய பேர் இல்லத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு உணவளித்து, தேவையான பொருட்களையும் கொடுத்தனுப்பலாம் என்பதால் மனைவியின் வேண்டுகோளுக்கு சம்மதம் தெரிவித்தார்.

ஊரே திரண்டது.  சுமங்கலிகள் அனைவரும் ஒன்று கூடி மகாலக்ஷ்மியை வழிபட்டனர்.  வழக்கமாய் நடைபெறும் சிவவழிபாடும் நடைபெற்றது.  அனைவரும் வயிறார அறுசுவையுடன்  உணவுண்டு மகிழ்ந்தனர். 

வந்திருந்த சுமங்கலிகள் அனைவருக்கும் உயர்ரக பட்டுச் சேலைகள் ,இன்னும் அவர்களே எதிர்பார்க்கா வண்ணம், தட்டுகளில் அணிகலன்களும் தங்க குங்குமச் சிமிழ்வைத்துத் தரப்பட்டது. 

சிவனடியார்களின் கூட்டமும் அன்று அதிகம் . அனைவரும்  திருப்தியுடன் உண்டு வாழ்த்திச் சென்றனர். 

மாலை நேரம். இயற்பகை வீட்டைச் சுற்றி வந்தார். நெருங்கிய உறவினர் ஒரு சிலரைத் தவிர பிறர் திரும்பிவிட்டனர். பணியாட்கள்  துப்புறவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அடுப்பில் நெருப்பு புகைந்து கொண்டிருந்தது. 

‘மடந்தை’ பணியாட்கள் அனைவரும் உண்டுவிட்டார்களா? வேறுயாரேனும் உணவு உண்ணாமல் இருக்கிறார்களா? 

‘எல்லோரும் உணவருந்தி விட்டார்கள் ஸ்வாமி, உணவுண்ட திருப்தியுடன் சிவனடியார்களும் திரும்பி விட்டனர்.  தாங்கள் மட்டும் இன்னும் உணவருந்தவில்லை’.

 ‘நீ¢  உணவு உண்டாயா மடந்தை?’

தங்களை விட்டு நான் என்று தனியா உணவருந்தியிருக்கிறேன் ஸ்வாமி

சரி வா, இருவரும் சேர்ந்து உண்ணலாம்.

இருவரும் உட்பக்கமாகத் திரும்பும் வேளையில்  வாயிலில் ’சிவோஹோம்’ என்று குரல் கேட்டது.

இயற்பகை கண்கள் மலர வாயில் பக்கம் திரும்பினார்.

சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

இயற்பகையும், மடந்தையும் விரைந்து சென்று சிவனடியாரை வணங்கி ,வாருங்கள் ஸ்வாமி!  உணவருந்தலாம். அழைத்தனர்.

உள்ளே அழைத்துச் சென்று சிவனடியாருக்கு கைகால் கழுவ நீர் கொடுத்தார்கள்.

அதன்பின் தம்பதி சகிதமாய் அடியாருக்கு பாத பூஜை செய்து , அவரது காலில் விழுந்து வணங்கி, அவரை உணவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று, அருகிருந்து பரிமாறினர்.

 சிவனடியார் திருப்தியுடன் உண்டபிறகு  கைகழுவ சொம்பினால் நீரெடுத்துக் கொடுத்தாள் மடந்தை.

நிமிர்ந்து பார்த்தார் அடியார். ய்ஏவ்... ஏப்பம் விட்டார்.

அடியார் கைத் துடைக்க புதுத் துணியை பணிவுடன் நீட்டினாள் .

ம்ம் .. இல்வாழ்க்கைக் கூட சுகமாக இருக்கும்தான் போலிருக்கு.. பணிவிடை செய்ய இப்படி ஒரு பெண்ணிருந்தால் சுகமோ சுகம்.  தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே  முன் கதவை நோக்கி நடந்தார் அடியார்.

‘ஸ்வாமி! என்ன சொன்னீர்கள்? ஏதோ கேட்டது போல் தோன்றியது சரியாக விளங்கவில்லை’.  பணிவுடன் கேட்டார் இயற்பகை. 

 ‘ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள்  உன்னைப் பற்றி. ஈசனின் மேல் அளவு கடந்த பக்தியாமே.?’

ஆம் ஸ்வாமி! இந்த அடியேனுக்கு எல்லாமே ஈசன்தான். இந்த உடல் ,உயிர் , என் உடைமைகள் அனைத்தும் அவருக்கே சொந்தம். அடியார்க்கு செய்யும் தொண்டு , அந்த மகேசனுக்கு செய்யும் தொண்டெனவே வாழ்ந்து வருகிறேன் ஸ்வாமி.

‘ஆம்.. அதையும் தான் கேள்விப்பட்டேன். அதோடு இன்னொன்றையும் கேள்விப்பட்டேன். இல்லையென்று சொல்லாமல் கொடுப்பவனாமே நீ?’ 

‘ஆம் ஸ்வாமி! அந்த பரமனின் அடியவர்கள் என்னிடம் இருப்பதை எதைக் கேட்டாலும் இல்லையென்னாது கொடுப்பது என்பாக்கியம் என்றே வாழ்ந்து வருகிறேன்.’

‘எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவாயா?’

‘என்னிடம் இருப்பதை எதைக் கேட்டாலும் உடனே கொடுத்து விடுவேன் ஸ்வாமி. என்னிடம் இல்லையென்றால் வெளியில் வாங்கி வந்தாவது கொடுப்பேன் ஸ்வாமி.’

‘அப்படியா? சந்தோஷம். உன்னிடம் இருப்பது ஒன்று எனக்குத் தேவைப்படுகிறது தருவாயா  இயற்பகை?’

‘தந்தேன் ஸ்வாமி! இனி அப்பொருள் என்னுடையது  இல்லை,  உங்களுக்குச் சொந்தமானது. என்னவென்று சொல்லுங்கள் இப்பொழுதே எடுத்து வந்து தருகிறேன்.

‘வாக்குமாற மாட்டாயே இயற்பகை?’

‘ஸ்வாமி! என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்?  கொண்ட கொள்கையிலிருந்து வாக்கு மாற மாட்டான் இந்த இயற்பகை. இது நான் வணங்கும் எம்பெருமான் ஈசன் மேல் சத்தியம்.!’

‘அப்படியென்றால் உன் மனைவியை எனக்குத் தா இயற்பகை! உனக்கு பணிபுரிந்த அவள் இனி எனக்குப் பணி  புரியட்டும்’.

‘தந்தேன் ஸ்வாமி! இப்பொழுதே அழைத்துச் செல்லுங்கள்.’

‘மடந்தை வா இங்கே.  உன்னை இந்த சிவனடியார்க்கு தருவதாக வாக்களித்துவிட்டேன்.  என் சொல்லை மீறாத தர்ம பத்தினி நீ.  என் வாக்கை காப்பாற்று. இந்த சிவனடியாருடன் செல்.’

கணவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள்  மடந்தை. ‘ஸ்வாமி! உங்கள்  கரம் பற்றிய நாளிலிருந்து உங்கள் வாக்கை இதுவரை நான் மீறியதில்லை.  இப்போது மட்டும் மீறுவேனா?  உங்கள் கட்டளைப்படியே  சிவனடியாருடன் செல்கிறேன்.  விடைகொடுங்கள்.’

‘மகிழ்ச்சி மடந்தை.  ஸ்வாமி! மடந்தை இனி உங்கள் சொத்து. அழைத்துக் கொண்டு புறப்படுங்கள். நானே ஊர் எல்லைவரை வந்து உங்களை  வழியனுப்பி வைக்கிறேன்.’

இயற்பகை சிவனடியாரையும் , மடந்தையையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

 விவரம் தெரிந்து உறவுகள்  கொந்தளித்தனர்.

கட்டிய மனைவியை எவனாவது அடுத்தவனுக்கு விட்டுக் கொடுப்பானா? என்ன மனிதன் இவன்?

ஈசனின் மேல் பக்தி இருக்கவேண்டியதுதான்,  பைத்தியக்காரனாக  அல்லவா இவன் இருக்கிறான். 

என்ன தினவிருந்தால் அந்தச் சாமியார்  அன்னமிட்ட கையையே அசிங்கப்படுத்த நினைப்பான்? வாருங்கள், மனைவியை வைத்து  காப்பாற்ற  வகைதெரியாத அந்த மடையனுக்கும் , பெண்ணை வெறும்  பொருளாக எண்ணும் அந்த சாமியாருக்கும் சரியான பாடம் புகட்டுவோம்.

ஒன்று திரண்டு எல்லோரும் விரைந்தனர். அதற்குள் மூவரும் ஊர் எல்லையை நெருங்கி விட்டிருந்தனர்.

‘நில் இயற்பகை!  வைத்து வாழத்தானே என்  பெண்ணை  உனக்குக் கொடுத்தேன். இப்படி வந்தவன் போனவனுக்கு தாரை வார்க்கவா கொடுத்தேன். பெண்டாட்டியை நீ வேண்டுமானால் விட்டுக் கொடுக்கலாம். என்பெண்ணை ஒரு பரதேசி கூட்டிச் செல்ல ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன்.’  

‘அவள்  என் மனைவி . தாரை வார்த்துக் கொடுத்த  போதே உங்களுக்கு அவள் மீது உள்ள உரிமைபோய்விட்டது. அவளின் வாழ்க்கை எப்படி என்பதைத் தீர்மானிப்பது என்னிஷ்டம். எல்லோரும் வழிவிட்டு விலகுங்கள்.  மீறி எவனாவது எங்களைத் தடுத்தால் அடுத்த நொடியில் அவன் தலை  தரையில் உருளும். இயற்பகை வாளை  உருவி உயர்த்தினார்.’

‘முட்டாள். தாரை வார்த்துக் கொடுத்து விட்டால் உரிமை போகலாம், உறவு எப்படியடா போகும்? பெற்றோர் பிள்ளை உறவு  சுடுகாடு மட்டும் தொடரும் பந்தம். அது என்றும் நீங்காது.  என்  பெண் தாலியறுத்தாலும் சரி,  இப்படி ஒரு ஈனமான காரியத்தை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்’.  மடந்தையின் தகப்பனும் வாள்  உருவினான்.

பல தலைகள் தரையில் உருண்டன. இயற்பகையின் வாழ்வீச்சுக்கு பயந்த மற்ற உறவினர்கள் பின் வாங்கினர்.  இயற்பகை மனைவியை சிவனடியாருடன் அனுப்பி வைத்து கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். 

வேதியா! கதை இத்துடன் முடிகிறது.  கேள்விக்கு வருகிறேன்.

தன்னையே நம்பி வந்த ஒரு பெண்ணை, ஆயுள் முழுதும் உன்னை வைத்துக் காப்பாற்றுவேன் என்று அக்கினியை  வலம்வந்து கரம் பற்றிய  மனைவியை , ஒரு ஆண்மகன்,  அடுத்தவனோடு அனுப்பலாமா?  

என்னதான் இறைபக்தி என்றாலும், கொள்கையென்றாலும்  இப்படி கண்மூடித்தனமாய் நடந்து கொள்வது அறிவீனம் இல்லையா?  

குடும்பஸ்தன் ஒருவன்  இப்படி தன் பெண்டாட்டி,  பிள்ளைகளை தானம் செய்வதெல்லாம்  முறையா?  இயற்பகை செய்தது சரியா? தவறா?    என் கேள்விக்கு பதில் சொல்!   தெரிந்தும் தெரியாததும் போல்  இருந்தாயானால் உனக்குத் தான் ஆபத்து. உன் தலை வெடித்துச் சிதறும்..

“வேதாளமே!  நீ ஆரம்பத்தில் கூறியது போல் இந்த மனித வாழ்க்கையே  புதிரானதுதான். வாழ்க்கையில் நடந்து விடும் சில விசயங்களை நம்மால் விளங்கிக் கொள்ளவே முடியாது.  

வேதாளமே! இந்த வாழ்க்கை என்பது யானையைப் போல். அறிவு  சிறு எறும்பைப் போல். சில கேள்விகளுக்கு அறிவால் விடை தேட முடியும்.  சில கேள்விகளுக்கு விடையை மனதால்தான் தேட முடியும். 

இது போன்ற தருணங்களில் எது சரி? எது தவறு? என்பதை தீர்மானிக்கும் வேலையை மனதிடம் விட்டுவிடுவதே சரியானது.

ஞானிகள் சொல்வார்கள்! இந்த உலக வாழ்க்கையே மாயை, உறவுகளும் மாயை என்று.  கிருஷ்ணரிடம் ஒரு முறை இந்தக் கேள்வியை நாரதர் கேட்டார். கிருஷ்ணா!, மாயை, மாயை என்கிறார்களே அப்படியென்றால் என்ன? 

 கிருஷ்ணர் சிரித்தபடி, நாரதரே, தாகமாய் இருக்கிறது.  எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா  பார்க்கிறீர்களா? என்று கேட்கிறார்.

தண்ணீரைத் தேடிச் செல்கிறார் நாரதர். அங்கே ஒரு அழகியைப் பார்த்து காதல் கொள்கிறார். மணந்து கொள்கிறார்.  பிள்ளைகள் பிறக்கிறார்கள். காலங்கள்  பல கடக்கிறது.  

ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் வருகிறது. வாழ்ந்த வீடு அடித்துச் செல்லப்படுகிறது.  நாரதர் தன் மனைவி பிள்ளைகளையெல்லாம் கட்டிப் பிடித்துக் கொள்கிறார். 

பிள்ளைகள்ஒவ்வொருவராக தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். இறுதியில் மனைவியும் தண்ணீரில் அடித்துச்செல்லப்படுகிறாள். துக்கம் தாங்காமல் நாரதர் ஓ வென்று அலறி கதறுகிறார்.

கிருஷ்ணர் நாரதரை தட்டி எழுப்புகிறார். நாரதரே,  தண்ணீர் கொண்டு வருகிறேன்  என்று  சென்றீர்கள்!  ஒருநாழிகை ஆகிவிட்டதே ,ஆளைக்காணாமே என்று வந்தேன்,  ஏன்  இங்கே படுத்துக்கிடக்கிறீர்கள்? என்று வினவுகிறார். 

நாரதர் எழுந்து என்னது ஒரு நாழிகைதான் ஆனதா?  அங்கே ஒரு வாழ்க்கையே நடந்து முடிந்து விட்டதே.   கிருஷ்ணா இதுதான் மாயையா? நான் ? என் சுகம், துக்கம் என் மனைவி பிள்ளைகள் பிரிவு, எல்லாமே மாயையா? விளங்கிக் கொண்டேன். என்கிறார் நாரதர்.

வேதாளமே!  இந்த வாழ்க்கை மாயை என்றால் நிஜம் எது? நிரந்தரம்எது?  பரம்பொருளின் பாதம் ஒன்றே!  அதைப் பற்றிக் கொள்வதற்கான வழியைக் கண்டறியவே இந்த வாழ்க்கையைப் பயன்படுத்தின்கொள்ள  வேண்டும். 

ஞானிகள்   இதை உணர்ந்து கொண்டவர்கள். எனவே அவர்கள் பந்த பாசத்தை அறுத்துக் கொண்டு   வெளியில்   வந்து விடுகிறார்கள்.  இல்லற வாழ்வில் உள்ளோன் படிப்படியாய் தான் இந்த நிலைக்கு வரமுடியும். ஒருசிலருக்கு ஒரு பிறவியிலே இந்த நிலை கிடைக்கும். சிலருக்கு பல பிறவிகள் ஆகலாம். 

இயற்பகை போன்றோர்கள் முற்றும் உணர்ந்த ஞானிகளுக்கு சற்றுக் குறைந்தவர்கள். ஆனாலும் இல்லற வாசிகளை விட மேம்பட்டவர்கள். அவர்களின் வழி பக்தி நெறி.  

இறைவன் மேல் அதீத பக்தி வைப்பதினால் இறைவனைத் தவிர வேறொன்றையும் பெரிதாக எண்ண மாட்டார்கள். தன்னையே இறைவனுக்குத் தரத்துணிவார்கள்! நந்தனாரைப் போல்.  தன் உடல் உறுப்பையும் தரத்துணிவார்கள்! கண்ணப்பனைப் போல். தன் குழந்தை குட்டிகளையும் தரத்துணிவார்கள்! சிறுத்தொண்டரைப் போல்.  இயற்பகை இறைவன் மேல் கொண்டிருப்பதும் அத்தகைய பக்தித்தான்.

சாதாரண மனநிலை உள்ளவர்களுக்கு இது பைத்தியக்காரத்தனமான செயலாகத் தான் தெரியும்.   இது பக்தியின் உச்ச கட்டம் என்பது ஆழ்ந்து  யோசிக்கையில் நம்  மனதுக்கு புரியும். 

 இறைத் தொண்டே பெரிதென வாழ்ந்த இயற்பகையும், கணவன் சொல்லை மீறாமல் நடந்து இறைசேவை செய்து வந்த மணக்குல மடந்தையும் ஈசனின் திருவடியில் இணைவதுதான்  நீ கூறிய கதையின் முடிவு. 

 முடிவு சுபமானதாவே இருக்கிறது.  எனவே  இயற்பகை செய்தது சரியே! என்று என் மனது பதில் சொல்கிறது.” வேதியன் கூறி முடிக்கிறான்.

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.

Saturday 15 March 2014

வேதாளம்!!


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக் கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது.
     
அஹோய் வ்£ரும் பிள்ளாய் வேதியனே! மனம் தளரா உன் முயற்சியைப் பாராட்டுகிறேன். என்னைக் கொண்டுப் போவது அவ்வளவு சுலபமானக் காரியம் இல்லை. பார்ப்போம். 

சரி, எனக்குப் பொழுது போகவும் உனக்கும் சலிக்பில்லாமல் இருக்கவும் ஒரு கதைச் சொல்கிறேன் கேள்.

பொதுவாக எப்போது நன்மைகள் விளையும் போது அதில் ஏதேனும் ஒரு தீமையும், தீமைகள் விளையும்போது அதனால் ஏதேனும் ஒரு நன்மையும் ஏற்படும் என்பது ஆன்றோர் வாக்கு.

அமுதம் விளைந்த பாற்கடலில்தான் ஆலகாலமும் விளைந்தது. குருக்ஷேத்ரப்போர்க்களத்தில்தான் பகவத்கீதையும் மலர்ந்தது. 

அசுர வம்சத்தில் தோன்றி அரசனொருவனின் கூடா ஆசையினால் ஒரு மாபெரும் இதிகாசம் உருவானது. அதைப்பற்றியக் கதைதான் நான் சொல்லப்போவது.



முதல் மன்வந்திரத்தில் பிரம்மாவின் மனதில் தோன்றிய பிரஜாபதிகளில் ஒருவர் புலஸ்தியர். சப்தரிஷிகளில் ஒருவராகவும் பிரகாசிக்கிறார். இவரது மகன் வைஸ்ரவ முனிவர். இவர்கள் சாண்டில்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.

தைத்ய குலத்து அரசர் சுமாலி. அவளது மகள் கைகேசி. சுமாலிக்கு, தன் மகளை ஒரு ஆற்றல் மிக்கவனுக்கேத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும், அதன் மூலம் இணையில்லாத ஒரு அரசனை தன் அசுர குலத்திற்கு உருவாக்க வேண்டும் என்று எண்ணம். 

உலகில் உள்ள அரசர்கள் கைகேசியை மணக்க விரும்பியபோதெல்லாம் அவர்கள் தங்களைவிட வலிமை குறைந்தவர்கள் என சுமாலி மறுத்துவிடுகிறான். 

எனவே தவமுனிவரான வைஸ்ராவை தேடிப்பிடித்து திருமணம்  செய்து கொள்கிறாள் கைகேசி. வைஸ்ரவ முனிவருக்கு வேறொரு பெண்ணின் பிறந்தவரே  குபேரன்.


ஒரு முறை வைஸ்ரவ முனிவர் தன் பூஜை அனுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்தச் சமயத்தில் மிகுந்த வேட்கையுடன் அவரை நெருங்குகிறாள் கைகேசி. 

முனிவர் எவ்வளவோ எச்சரித்தும் கைகேசியின் மோக வேகம் அடங்கவில்லை. வேறு வழியின்றி மனைவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறறர் வைஸ்ரவ முனிவர். 

இந்த இணைவில் பிறக்கும் குழந்தை ராட்சத குணத்துடன் பிறக்கிறது. அந்தக் குழந்தையே அசுர குலத்திற்கும் பிராமணக் குலத்திற்கும் கலந்து பிறந்த இராணவன். மோகவெறியில் தர்மநெறி தவறி அடுத்தவரின் மேல் ஆசைப்பட்டவன்.



(இராமர் இவனை மகாபிராமணன் என்றே குறிப்பிடுகிறார். போருக்குப்பின் பிராமணனைக் கொன்ற பாவம் தீர யாகமும் செய்கிறார்.)

இராவணன் சுமாலி எதிர்பார்த்தபடியே ஆற்றல் மிகுந்தவனாக இருந்தான். இவனது சகோதரர்கள் விபீஷணன் , கும்பகர்ணன். சகோதரி மீனாட்சி என்ற சூர்ப்பணகை.

இராவணன் பிறந்தபோதே அவனுக்கு நவரத்தினங்களால் ஆன பதக்கத்தை அணிவிக்கிறார் வைஸ்ரவர். இதன் ஒளிக் கதிரினால தோன்றியதே இராவணனது பத்துத் தலைகள் என்று புராணக் கதையொன்றில் கூறப்படுகிறது. 

இராவணன் கல்வி கேள்விகளில் மிகச் சிறந்தவனாக இருந்தான். இணையில்லாத ஆற்றல் பெற்றவனாய் இருந்தான்.

நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்து பண்டிதனாய் திகழ்ந்தான். ஆறு சாஸ்திரங்களையும் ஐயமுறக் கற்றான். சத்திரிய போர்முறையில் ஆற்றல் மிக்கவனானான். சாமவேத கானம் இசைப்பதில் ஆற்றல் மிக்கவரானான். அவனது தந்தை வைஸ்ராவே அவனுக்கு குருவாய் இருந்து போதித்தார்.

தைத்ய சடங்கு சம்பிரதாயங்களைப் பொறுத்த மட்டில் அவனது தாயின் தந்தை சுமலி ராவணனை வழிநடத்தினார். 

அது மட்டுமன்றி இராவணன் வீணையை மீட்டுவதில் வித்தகனாய் திகழந்தான். சாமவேத கானம் இசைப்பதில் நிகரற்றவராய் திகழ்ந்தான். மிகச் சிறந்த சிவ பக்தனாகவும் இருந்தான். 

இத்தவத்தின் போது இராணவன் தன் தலையை சீவி எறிகிறான். உடனே இன்னொரு தலை முளைக்கிறது. இப்படியே தன் நீண்ட தவ காலத்தில் 9 முறை தன் தலையை சீவி எறிகிறான் இராவணன்.

பத்தாவது முறையாக தலையை சீவும் போது அவனது தீவிர தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மா அவன் முன் தோன்றுகிறார்.  

“இராவணா!  இவ்வளவு கடும்தவம் புரியக் காரணம் என்ன? உனக்கென்ன வரம் வேண்டும் சொல்”  என்று கேட்கிறார் பிரம்மா.

எக்காலத்தும் இறவாத வரம் வேண்டும் ஸ்வாமி!  கேட்கிறான். 

பிரம்மா யோசிக்கிறார். ‘அந்த வரம் தர இயலாது. இதற்கு பதில் சாகும்வரை முதுமையடையாமலிருக்கும்  அமிர்தசக்தியை தருகிறேன்’ என்கிறார்/

இராவணன் பிரம்மனிடத்தில், எவராலும் காயம்படாத வரமும் தெய்வங்கள், தேவலோக ஆத்மாக்கள், அரக்கர்கள், பாம்புகள், கொடும்விலங்குகள் போன்ற எந்த சக்தியாலும் கட்டுப் படுத்த முடியாத, அவர்களினால் பாதிக்கப்படாத வரமும், இவர்கள் அனைவரையும் வெல்லக்கூடிய ஆற்றலையும் கேட்டுப் பெற்றுக் கொள்கிறான்.

பிரம்மா இராவணனுக்கு பத்துத் தலைகளையும், அதீத ஆற்றலையும் தருகிறார்.  மந்திரத்தால் ஆயுதங்களைப் பிரயோகிக்கும் சக்தியையும் அருளுகிறார். 

இதன் பின் தன் தாய்வழிப் பாட்டனார் சுமலியின் படைபலங்களைப் பெற்றுக் கொண்டு இலங்களையில் தன் ஆதிக்கத்தை மேற்கொள்ள  வருகிறான்.

அதுவரை இலங்கையை ஆண்டு வந்த குபேரன் தன் தந்தை வைஸ்ரவாவின் ஆலோசனைப் படி ஸ்ரீலங்காவை இராவணனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அளகாபுரிக்குச் சென்று விடுகிறான். 

தேவசிற்பி விஸ்வகர்மாவைக் கொண்டு இலங்கையை அழகாய் வடிவமைத்திருந்தான் குபேரன். 

இலங்கையை மேலும் செல்வச் செழிப்பான நகராக மாற்றியமைக்கிறான்.  இராவணனின் ஆட்சியில் மக்கள் துன்பங்களின்றி மிகவும் மகிழ்ச்சியாய் வா£ந்தனர். சிறந்த ஆட்சியாளனாக விளங்கிய இராவணன், எவராலும் வெற்றி பெறமுடியாத வல்லமையும் பெற்றவனாய் விளங்கினான்.

தன் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த சிவப் பக்தனாகவும் சிவதாண்டவம் என்கிற நடன வழிபாட்டில் இணையில்லாதவனாகவும் சாம கானம் இசைப்பதில் வல்லவனாகவும் திகழ்ந்த இராவணன் கைலாயம் சென்று சிவனையெண்ணி கடுமையான தவம் இயற்றுகிறான். 

அப்போது செய்த யாகத்தில் தன் தலைகளை ஒவ்வொன்றாக கிள்ளி ஆகுதியாய் இடுகிறான். சிவன் இராவணனின் முன் தோன்றி அவனுக்கு வேண்டிய வரம் தருகிறார். அவன் பத்து புஜங்களுக்கும் வலிமை தருகிறார். 

மேலும் வலிமைப் பெற்ற இராவணன் மூவுலகங்களையும் வெல்கிறான். தேவர்கள், ரிஷிகள், நவக்கிரகங்கள், நாகங்கள்  அனைவரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறான். சூரியனும் இராவணனைக் கேட்டே உதிக்கவும் மறையவும் செய்தான். 

ஈடு இணையற்ற சக்திமிக்கவானாய் திகழ்ந்த இராவணன், ஒரு முறை கைலாய மலையையே தன் புஜவலிமையால் தூக்க முயற்சிக்கிறான்.  பார்வதி பயப்படுகிறார்.

சிவன் தன் பாதபெருவிரலால் அழுத்த இராவணனின் கைகள் மலையின் அடியில் மாட்டிக் கொள்கிறது. நாரதரின் வீணையை வாங்கி சாமகானம் இயற்றி சிவபெருமானின் மனதை குளிரவைத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான் இராவணன். சிவன் சந்திர ஹாஸா என்ற வாளை இராவணனுக்கு பரிசளிக்கிறார். 

தன் கடுமையான தவத்தால் இராவணன் சிவனிடமிருந்து ஆத்மலிங்கத்தைப் ‘பெற்றுக் கொண்டு இலங்கைச் சென்று கொண்டிருக்கிறான்.

ஆத்மலிங்கத்தை இராவணன் வழிபாடு செய்வதன் மூலம் சாகாநிலையை பெற்றவனாகி விடுவான், அதனால் அனைத்து உலகங்களும் நீண்ட காலம் அவனுக்கு அடிமையாகவே இருக்க நேரிடுமே’ என்று  நினைத்த நாரதர் அதைத் தடுக்க எண்ணுகிறார். 

விஷ்ணு சூரியனை மறைக்கிறார்.  இராவணன் தன் சாயங்கால அனுஷ்டானங்களைச் செய்ய எண்ணுகிறான்.  ஆத்மலிங்கத்தை கீழே வைத்தால் பிறகு அதை எடுக்க முடியாது என்பதினால் அப்போது அங்கே அந்தணச் சிறுவனாய் வந்த வினாயகரிடம் தந்துவிட்டுச் செல்கிறான். விநாயகர்க லிங்கத்தை கீழே வைத்து விடுகிறார். அந்த இடமே கோகர்ணம் என்ற இடமாகும். 

இராவணனின் பக்தியினால்   சிவன் அவன் மேல் அன்பு கொண்டவராக இருக்கிறார். எனவே இராவணன் கைலாயத்தை தூக்க முயன்றபோதும், நந்தி பகவானிடம் வாதிட்டு இம்சை செய்த போதும் பெரிய தண்டனை எதையும் இராவணனுக்கு அவர் தரவில்லை.

இது மட்டுமல்லாமல் இராவணனுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதை பாகவத புராணம் கூறுகிறது.  இராவணனும் கும்ப கர்ணனும் கைலாயத்தில் துவாரபாலகராய் இருந்தவர்கள். ஜெய விஜயர்கள் என்று அழைக்கப்ட்டவர்கள். 

ஒருமுறை சனகாதி முனிவர்கள் விஷ்ணுவை சந்திக்க வரும்போது உள்ளே நுழைய விடாமல் அவர்களை தடுத்து வாதம் புரிகின்றனர். இதனால் எழுந்த சத்தத்தில் விஷ்ணு வெளியே வருகிறார். சனகாதி முனிவர்கள் ஜெய விஜயர்களின் மேல் குற்றம் சாட்டுகின்றனர். 

அவர்களின் மனதைப் புண்படுத்தாமலும், தங்கள் கடமையைச் செய்த  ஜெய விஜயர்களுக்கு  பாதக மில்லாமல் தண்டனை கொடுக்கவும் எண்ணுகிறார். ஏழு ªஜ்ன்மங்கள் மண்ணுலகத்தில் அவதரிக்க வேண்டும். அல்லது மூன்று பிறவிகள் அசுர குலத்தில் பிறந்த என்னை எதிர்த்து என்னால் சம்ஹரிக்கப் படவேண்டும் என்று கூறுகிறார்.

இரண்டாவதைத் தேர்ந்தெடுக்கின்றனர் துவாரபாலகர்கள். 

சத்ய யுகத்தில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபுவாக தோன்றி விஷ்ணுவை எதிர்த்த துவார பாலகர்களை வராக அவதாரம் எடுத்தும், நரசிம்ம அவதாரம் எடுத்தும் விஷ்ணு சம்ஹாரம் செய்கிறார்.

திரேதாயுகத்தில் இராவண கும்பகர்ணனாக அவதரித்தவர்களை இராம அவதாரம் எடுத்து அழித்து தன்னுடன் சேர்த்துக கொள்கிறார்.  

துவாபர யுகத்தில் சிசுபாலன், தந்தவக்ராவாக அவதரித்தவர்களை கிருஷ்ண அவதாரம் எடுத்த காலத்தில் சம்ஹரிக்கிறார். 

எனவே இராவணன்  சிவ பக்தன் மட்டுமல்லாமல், திருமாலின் சேவகன் என்பது தெரிய வருகிறது. 

இராவணனின் மனைவி மண்டோதரி மாயாசுரன் மற்றும்  ஹோமா என்ற அப்சரஸின் மகளாக கருதப்படுபவள். அயோனிஜா அதாவது  சாதாரண மனிதர்களைப்போல் தாயின் வயிற்றிலிருந்து பிறப்பெடுக்காதவள். 

சாகும்வரை சுமங்கலியாக வாழும் வரம் பெற்றவள். எனவேதான் இராவணன் போரில் தோற்று விழுந்த  போதும் இறந்தவர்களின் லோகம் செல்லாமல் பூலோகத்திலேயே இருந்தான். மண்டோதரியின் மறைவுக்குப் பிறகே அவன் தன் மனைவியுடன் மேலுலகம் சென்றான். 

வேதியா! இதுவரை இராவணனின் பிறப்பினையும், சிறப்பினையும் அறிந்து கொண்டாய். 

ஈடு இணையற்ற சிவபக்தனாகவும், மூவுலகங்களையும் ஆள்பவனாகவும், முற்பிறவியில் திருமாலின் மெய்க்காவலனாகவும் இருந்த இராவணன்  சிறந்த பாரம்பரியத்தில் பிறந்தும், வலிமையுள்ள ஏழு புதல்வர்களை பெற்றிருந்தும், ஏன் இறுதியில் துயருற்று இறந்தான்? 

ஏன் இன்றுவரை தீயவனாகவே சித்தரிக்கப்ப்டடு அனைவராலும் வெறுக்கப்படுகிறான்.  இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தும் நீ சொல்லா£மல் மௌனம் சாதித்தால் உன் தலை வெடித்து சிதறும்’ என்று கூறுகிறது வேதாளம்.

வேதாளமே!  நீ ஆரம்பத்திலேயே கூறிவிட்டாய் கூடா ஆசையென்று .. அது இராவணனின் அழிவுக்கு காரணம். அவப் பெயருக்குக் காரணம். 

ஆசைகள் இல்லா மனிதன் இலலை. அவை தர்மநெறிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். தன் தவ வலிமையால் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் இராவணன் அடுத்தவனின் மனைவி மேல் கொண்ட ஆசையில் மட்டும் வெற்றி பெற முடியவில்லை.

அடுத்தவன் மனைவி மேல் ஆசைக் கொள்வது பெரிய பாவம் என்பது புராணக்காலத்திலேயே இருந்த நெறியாகும்.  அப்படி ஆசைப்பட்டவர்கள் அடைந்த தண்டனையையும் நாம் காணமுடிகிறது. 

தேவலோகத்திற்கே அதிபதி இந்திரன். கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மேல் ஆசைகொண்டு சாபம் பெற்று உடல் முழுதும்கண்களாக மாறி அவமானப்பட்டு ஓடி ஒளிந்து, இறுதியில் சிவனையெண்ணி தவமிருந்து ஒவ்வொரு கண்ணாக மறையப் பெற்றான் என்பதைப் பார்த்தோம். இதனால்தான் தேலோக அதிபதியான இந்திரனின் புகழ் பெரிய அளவில் போற்றப்படுவதில்லை. 

தன் குருநாதர் பிரகஸ்பதியின் பத்தினியான தாரை என்பவளின் மேல் மோகம் கொள்கிறான் சந்திரன். அதனால் தேய்ந்து அழியும் சாபம் அடைகிறான். 

சிவனை சரணடைந்து பின் சாப விமோசனம் பெறுகிறான். இதனான்தான் ‘இந்திரன்  கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே’ என்றப் பழமொழியே நிலவுகிறது.

குரங்கினமாக இருந்தாலும் வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த வாலி, முன் ஜென்மத்தில் இந்திரனாக இருந்தவன் என்று கூறப்படுகிறது. சிறந்த சிவபக்தன் , சிறந்த அரசனாக, பராக்கிரமசாலியாக இருந்தான். இருப்பினும் தன் சகோதரன் சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து கொண்டதால் இராமனால் வதைக்கப்பட்டான்.  சரித்திரத்திலும் அவன் புகழ் மங்கியே சித்தரிக்கப்படுகிறது. 

இவ்வளவு ஏன்? திருமாலே ஒரு முறை சிவனுக்கு உதவும் பொருட்டு ஜலந்திரன் என்ற சமுத்ரராஜனின் மனைவியான பிருந்தையை ஜலந்திரன் வேஷத்தில் அரவணைக்கிறார். 

ஏனென்றால் பிருந்தையின் பதிவிரதாதன்மை  காரணமாக ஜலந்தரனை சிவபெருமானால் அழிக்க இயலவில்லை.  எனவே விஷ்ணு ஜலந்திரன் உருவிலேயே வந்து பிருந்தையின் பதிவிரதத் தன்மையை கலங்கப்படுத்த ஜலந்திரன் கொல்லப்படுகிறான்.  

ஆனால் வந்தது விஷ்ணு என்பதை அறிந்ததும், விஷ்ணு பக்தையாக இருந்தும், தன் பதிவிரதத் தன்மை களையக் காரணமாக விஷ்ணுவின் மேல் சினமுற்று சாபமிடுகிறாள். 

‘போலிவேடத்தில் இன்னொருவனின் மனைவியைக் களங்கப்படுத்தியதால் நீயும், உன் மனைவியை இழந்து அழுது கலங்குவாய் என்று சாபமிடுகிறாள். அதை ஏற்றுக் கொள்கிறார் விஷ்ணு. அதனால்தான் இராம அவதாரத்தில் தன் மனைவியை இழந்து கலங்குகிறார். 

இராவணன் அழகான மனைவிகளைப் பெற்றிருந்தும் குபேரனனின் மகனுக்கா நிச்சயிக்கப்பட்ட ரம்பையை வலிய அபகரிக்கிறார்.’ நான் உன் அண்ணன் மகனின் மனைவியாகப் போகிறவள், உனக்கு மகள் என்ற ஸ்தானத்துக்குரியவளாகிறவள் என்னை விட்டுவிடு’ என்கிறாள் ரம்பை. 

ஆனாலும அவளைக் கவர்ந்து வருகிறான் இராவணன். எனவே கோபமுற்ற குபேரனின் மகன், ‘உன்னை விரும்பாத எந்த பெண்ணையும் நீ வலுக்கட்டாயமாகத் தொட்டாலும் அக்கணமே உன் தலை வெடித்து போகட்டும்’ என்று சபிக்கிறான்.

இவ்வளவு நிகழ்ந்திருந்தும், நான்கு வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தும், ஆறு சாஸ்திரங்களில் வல்லவனாக இருந்தும், சிவனின் தீவிரப் பக்தனாயிருந்தும், நவக்கிரங்களையும் தன் படிக்கட்டுகளாய் அமைத்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கவனாக இருந்தும், தர்மநெறியை மீறி பஞ்ச பத்தினிகளில் ஒருவரான சீதையைக் கடத்தி வருகிறான் இராவணன். அதானாலேயே அழிவைத் தேடிக்கொள்கிறான். இழிந்தவனாக சித்தரிக்கப்படுகிறான்.  

வேதாளமே! இங்கு நாம்  இரண்டு விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. ஒன்று தகாத பெண்ணாசை அழிவையேத் தரும். அடுத்து கைகேசி மோக வெறி கொண்டு, இறைவனை வழிபடும நேரத்தில் வைஸ்ரவாவுடன் தாம்பத்ய உறவு கொண்டதால் உதித்தவன் கைகேசியின் முதல் குழந்தையான இராவணன். அவன் மோக வெறியாலேயே அறிவிழக்கிறான். 

இதிலிருந்து தாம்பத்ய உறவு கொள்வதற்கும் நேரம் காலம் இருக்கிறது என்பது தெரிகிறது. எனவேதான் திருமணம்ஆனதும் முதலில் சாந்தி முகூர்த்தம் என்ற நேரத்தை கணிக்கின்றனர் என்பதும் தெரிய வருகிறது.

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.

Thursday 13 March 2014

தங்கம் வாங்க போறீங்களா..?!



நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்"

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். 

வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! 

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"

அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். 

இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். 

ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். 

போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...

உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 

16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? 

இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? 

பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? 

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? 

அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? 

பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? 

ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? 

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...

அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!

அதுவும் உங்களால் தான் முடியும்...


நன்றி :- முகநூல் நண்பர்கள்


தகவல் திரட்டு: வெங்கட்ராமன்

Thursday 6 March 2014

கடவுள் இருக்கிறரா?


கடவுள் இருக்கிறரா? 

இந்தக் கேள்வியை அடிக்கடி கேட்பதற்கான காரணம்.. கடவுள் இல்லை என்ற அவநம்பிக்கையினால் அல்ல..   கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. உணரவும் முடிகிறது. 

ஆனால் இந்தக் கேள்வி  எழுவதற்கு  , இருக்கிறார் என்ற உண்மையை யாராவது தேங்காய் உடைத்ததைப் போல் பளிச்சென்று தெளிவாக விளக்கமாட்டார்களா  என்ற ஆசைதான் காரணம். இல்லையென்று நினைப்பவர்களும்  உணர்ந்து கொள்ளட்டுமே என்ற ஆசைதான் காரணம். அந்தத் தேடுதலுடன்  சமீபத்தில் படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன். 

பிரபஞ்சம் எப்போது?  எப்படித் தோன்றியது?  

ஒன்று தேவும் உலகும் 
அன்று நான்முகன் தன்னோடு 
தேவருலகோடு உயிர் படைத்தான். 

          -நம்மாழ்வார் திருவாய் மொழி

கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்பதை அறிவியலால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் அந்தக் கடவுளைப் படைத்தது யார் என்ற கேள்வி அந்தப் பதிலுடனேயே வருவதைத் தவிர்க்க முடியாது. தன்னையும் படைத்து , 

தன் விதிகளையும் படைத்துக் கொண்டது பிரபஞ்சம்  என்ற சித்தாந்தத்திற்கு விளக்கம் ஏதும் இருக்கிறதா? என்பதுதான் அறிவியலின் தேடல்.  கிட்டதிட்ட அறிவியலின் தேடல் என்பது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை சான்றுகள் மூலம் நிரூபிக்க முடியுமா என்றத் தேடல்தான். 

 இத்தேடலில் பிரபஞ்சம் எப்படி உருவானது? எப்போது உருவானது என்பதை அறிவியல்    நிரூபித்து விட்டது. 

விஞ்ஞானத்தின்   தொடர்ந்து கொண்டிருக்கும் நீண்ட ஆய்வுகளின் வழி, (டிப்ராக்ஸியின் சமன்பாடு, க்வாண்டம் விதிகள், பாலியின் எக்ஸ்ளுஷன் பிரின்சிபல், ஹைசன்பர்க்கின் நிச்சயமற்ற தத்துவம் என்று பலதும் இருக்கின்றன. 

நியூட்டன் முதல் ஐன்ஸ்டீன், சந்திரபோஸ், வைன் பார்க்,  ஸ்டீபன் ஹாப்ஃக்கின்ஸ் போன்றோரின் ஆய்வுகளும்  மற்றும் தற்காலத்திய அணுவிஞ்ஞானிகள் அனைவர்களின்  முயற்சிகளும் ) 

 இந்த பிரபஞ்சம் முழுவதும், பிரபஞ்சத்தின் இருக்கும் அனைத்தும்,  திடப்பொருள், சக்தி என்ற இருவகையில் (மாலிக்யூக்கள் எனும் நுண் அணுக்களால்)  ஆனது. திடப்பொருள் என்பதில் கண்ணில் நாம் காணும் அனைத்து விதமான பொருட்களுமே.  நான்  நீங்கள், நாற்காலி, மேஜை , நாய்க்குட்டி, லோரி,கார், கிரகங்கள்  எல்லாமே..

இவைகளின் உருவாக்க ஆதாரங்கள் கார்பன், பாஸ்பரஸ், இரும்பு துத்தநாகம் போன்ற தனிமங்கள். இந்த தனிமங்களைப் பிரித்தால் ப்ரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான்கள், இவற்றையும் பிரித்தால் ஹேட்ரான்கள் லெப்டான்கள்.  

 சக்தி எனும் போது, ஒளிக்கதிர்கள், எக்ஸ்ரே, உஷ்ணம் , ரேடியே அலைகள் போன்றவை . இவை நான்கு விதமான ஆதார ஈர்ப்பு விசைக்குள் வருகின்றன.  அணுக்கருவுக்குள் உள்ள வலுவான விசை, அணுக்கருவுக்கு வெளியே உள்ள லேசான ஈர்ப்பு விசை, மின்காந்த விளைவு, புவி ஈர்ப்பவிசை மொத்தம்  நான்கு சமாச்சாரம். 

இவற்றையும் ஒருமைப் படுத்த இயலும் என்று இயற்பியல் கூறுகிறது.  திடப்பொருள் சக்தி இரண்டுமே ஒன்றுதான் என்பதையும் அறிவியலால் நிரூபிக்க முடிகிறது. 

அறிவில் கண்டுபிடிப்பின் படி,  பிரபஞ்சத்தின் உண்மை என்று சொல்வது கீழ்வரும் 2 விசயங்கள்தான். 
  
1. பௌதிக இயற்பியல் விதிகள்.  இந்த விதிகளின் படி பிரபஞ்சத்தின் அத்தனை திடப்பொருள்களும் சக்திவடிவங்களும் இயங்குகின்றன. இந்த விதிகள் கணித சமன்பாடுகளாக விவரிக்கப்படுகின்றன. 

2. இந்த விதிகள் செயல்பட துவங்கிய போது இருந்த ஆரம்பநிலை. இதை இனிஷியல் கண்டிஷன் என்கிறார்கள், இதை விளக்கி ¤விட்டால் அதற்கு அடுத்த நிலைகளை விதிகளைப் பயன்படுத்திச் சொல்லி விட முடியும். இன்றைய தினம் வரை எல்லாவற்றையும் விளக்கி விட முடியும்.

அந்த ஆரம்பம் நிலை..

 பதினைந்து பில்லியன் ஒளி வருடங்களுக்கு முன்(ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 3,00,000 மைல்கள்  ) ஒரு நொடியின் ஆயிரத்தில் ஒரு பகுதியான மில்லி செகண்டில்    சூன்யத்தில் ஒரு  வெடிப்புத் தோன்றியது. 

அந்த வெடிப்பின் போதே  காலமும் நேரமும் தோன்றியது. இயற்பியல் பௌதிக விதிகளும் அப்போதே ஆரம்பமானது.  இந்த ஆரம்பத்தை ஒருமித்த கணமாக (சிங்குலாரிட்டி) அறிவியல் கூறுகிறது.  

வெடித்த  அந்த மில்லி செகண்டில் பிரபஞ்சம் சர சர வென பெரிதாகிக்கொண்டே வளர்ந்து  இப்போதிருக்கும் நிலைமைக்கு வந்து விட்டது அது வளர்ந்து கொண்டேயிருக்கிறது.   நம் பிரபஞ்சம் இப்படித்தான் வெடிப்பில் உருவாகியது. இது தான் பிரபஞ்சம் உருவானதற்கான பிக்பேங்க் தியரி. காஸ்மாலஜி என்னும் பிரபஞ்ச அறிவியல்.

சரி  எப்போது எப்படி பிரபஞ்சம் தோன்றியது என்பதை அறிவியல் கூறிவிட்டது. எப்படி அதை உறுதிப் படுத்தியது? 

 1960 ல் ராட்சத ரேடியோ டெலஸ்கோப்புகள் வந்து விட்டன. அதன் உதவியால் விண்வெளியின் ஆழத்துக்குள் நுட்பமாக ஆராயும் போது, அதன் ஆரம்ப நாட்களிலிருந்து இப்போதுதான் நம்மை வந்து சேரும் பிரபஞ்சத்தின் சித்திரத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது, திட்டவட்டமாக அப்போதிருந்த பிரபஞ்சமும் இப்போதிருக்கும் பிரபஞ்சமும்வேறு வேறு.  

பிரபஞ்சம் பல மடங்காக விரிவடைந்திருக்கிறது, வலுவிழந்திருக்கிறது என்பது தெளிவாகியது. 1965ல் பிரபஞ்சம் முழுவதிலும் எல்லா திசைகளிலும் ஒரு லேசான உஷ்ணம் பரவியிருப்பதை கண்டுபிடித்தார்கள். அது இப்பிரபஞ்சம் ஆதியிலிருந்து இப்படியேத்தான் இருக்கிறது என்ற தத்துவத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடித்தது.  

இந்த உஷ்ணம் பிரபஞ்சத்தின் ஆரம்பமான மகாவெடிப்பில் மிச்சமிருக்கும் உஷ்ணம். அதாவது வெடிகுண்டு வெடித்த பின் அந்த இடத்தில் மிச்சமிருக்கும் சூடான புகைபோல. 

ஆக பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரவாரமான ஆரம்பம் இருந்திருக்கிறது. அது வெடித்து பரவி ஒரு தீர்மானமில்லா முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிவியல் தெளிவாக இந்த கண்டுபிடிப்புகளின் வழி அறிந்து கொண்டது. 

கணக்குச் சமன்பாடுகள்  விண்வெளியில் மிஞ்சியிருக்கிற உஷ்ணம் இவற்றையெல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது பிரபஞ்சத்தின் அதர்ச்சிகரமான பிறந்த தேதியின் அத்தாட்சிகள் தெரிகின்றன. கருவிகள் மூலம் பார்க்க முடிகிற 15 மில்லியன் ஒளி ஆண்டுகள் என பிரபஞ்சத்தின் வயதும் தெரிகிறது.

பிரபஞ்சத்திற்கு பிறப்புமில்லை அழிவுமில்லை என்பதுதான் மனித இனத்தின் புராதன நம்பிக்கை. இந்த இரண்டும் அறிவியலால் பொய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. 

அந்த சிங்குலாரிட்டி கணத்தில் பிரபஞ்சமும் அதனுடன் சேர்த்து காலமும் தூரமும் உருவாயின எனும் போது சிருஷ்டி கர்த்தாவை அனுமானிப்பது கஷ்டமாய் இருந்தது. 

இயல்பியல்  ( குவாண்டம் )விதிகள் “அந்த வெடிப்புக்கு முன் காலமில்லை, நேரமில்லை  அந்தவெடிப்பு நிகழுமுன் என்ன என்பதை விளக்கத் தேவையில்லை. அந்த வெடிப்பு இயல்பாய் நிகழ்ந்த ஒன்று,  அப்படி நிகழும் சாத்தியம் இருக்கிறது,  இயல்பாய் பிரபஞ்சம் தோன்றுவதற்கு குவாண்டம் விதிகளின், ஹைசன்பர்க்கின் தத்துவம் வழி இடம் இருக்கிறது” என்கிறது. 

( விளக்கம் தேவைப்படுபவர்கள் ஃஸ்டீபன் ஹாக்கின்ஸின் தி பிளாக் ஹோல்ஸ் என்ற தொகுப்பில் உள்ள தி ஒரிஜன் ஆப் தி யுனிவர்ஸ் என்றக் கட்டுரையைப் படிக்கவும்) 

இந்த பிரபஞ்சத்தில் உள்ள மொத்த திடப்பொருள், மொத்த சக்தி இரண்டும் ஒன்றுக்கொன்று  ஒன்று சமமாக, எதிராக இருப்பதால் பிரபஞ்சத்தின் ஆரம்பகணம் எனபது குவாண்டம் கிரேவிட்டி தத்துவப்படி  சூன்யத்திலிருந்து உண்டாகியிருக்கலாம் ஃபேய்மன் என்பவர் விளக்கியிருக்கிறார்.  

 குவாண்டம் விதிகள்  

நுட்பான அணுத்துகள்களுக்கானவை அவை எப்படி பிரம்மாண்ட பிரபஞ்சத்திற்குப் பொருந்தும்? என்றொரு கேள்வி எழுகிறது.

 பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்தில் அது மிகச் சிறியதாக மிக அடர்த்தியாக இருந்திருக்கிறது எனவே குவாண்டம் விதிகள் அந்த பிரபஞ்சத்திற்கு செல்லுபடியாகும் என்று  பதில் சொல்லப்பட்டது. 

ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ், ஜேம்ஸ் ஹார்ட்டில் போன்றோர் இதை நிரூபித்திருக்கிறார்கள். அந்த ஆரம்ப கணத்தை ப்ளாங்க் கணம் என்கிறார்கள். குவாண்டம் விதிகளைக் கண்டுபிடித்த (விஞ்ஞானி மாக்ஸ் ப்ளாங்கின் பெயரால்) 

எந்த விதியையும் மீறாமல் எந்த விதிக்கும் காரணத்துக்கும் தேவையில்லாமல் பிரபஞ்சம் தோன்றியிருக்கலாம் என்பதே அறிவியலின் முடிவு.

இதற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா? பரிதோசதனை மூலம் நிரூபணம் இருக்கிறதா என்றால்..  குவாண்டம் உலகில் இன்றும் சக்தி துகள்களாகவும், துகள் சக்திகளாகவும் அவ்வப்போது தன்னிச்சையாக தோன்றுகிறது, மாறுகிறது. இன்றைய பரிசோதனைகளில் வெளிப்படும் வெளிச்சங்கள் ஃபோட்டான்கள் அனைத்தும் இப்படி எதிர்பாராமல் தன்னிச்சையாகத் தோன்றுபவையே. க்வாண்டம் விளைவுகள் அனைத்து இப்படிப்பட்டவையே என்று காரணம் காட்டுகிறார்கள்.

இவ்வாறாக அறிவியலாளர்கள் இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு அறிவியல் பூர்வமாக நிரூபணம் காட்டுகிறார்கள்.  


பிரபஞ்சம் இப்படி ஒரு வெடிப்பில் ஒரு கணத்தில் உருவானது என்பது நீரூபிக்கப்பட்டுவிட்டப் பின்னர் அந்தக் கணத்தை ஏற்படுத்தியவர் கடவுள் என்றால் அவர் பிரபஞ்ச ஆரம்பம் ஒரு வான வேடிக்கை போல் இருக்கட்டும் என்று  வெடியை பற்ற வைத்து விட்டாரா?  

என்றக் கேள்வி எழுகிறது. கடவுள்  நம்பிக்கை கேள்விக்குறியாகி விடுகிறது..

பிரபஞ்சம் ஏன் தோன்றியது?

 இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு காரணம் என்ன?  மனிதனுக்காகவா? 

 இந்த பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலையையும் விதிகளையும் உன்னிப்பாய் பார்க்கும் போது    அதில் ஒரு தேர்ந்தெடுப்பும் ஒழுங்கும் இருப்பதை காண முடிகிறது. 

எத்தனையோ விதத்தில் இந்த பிரபஞ்சம் ஆரம்பித்திருக்கலாம்.. எத்தனையோ விதத்தில் இதன் விதிகளும் அமைந்திருக்கலாம்.. ஏன் இந்த ஆரம்பமும் ஏன் இந்த விதிகளும்?

இவை எப்படித் தீர்மானிக்கப்பட்டன? ஏன் இவை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன?

 உதாரணத்திற்கு  அணுவுக்குள் இருக்கும் ப்ரோட்டான்கள், நியுட்ரான்களுக்கு இடையே உள்ள எடை வித்தியாசம் இரண்டு எலக்ட்ரான்களுக்குச் சமம்.

இப்படி இல்லாமல் வேறு விதமாக இருந்திருந்தால்  நியூக்கிளியைடுகள் இலலை. அதாவது உயிர்களே உருவாகியிருக்க முடியாது. அதே போல் ப்ரோட்டான் ஈர்ப்பு எடை என்று ஒரு விசயம் இருக்கிறது. இது சற்று வேறாக இருந்திருந்தால் காலக்ஸிகள் இல்லை.. சூரிய சந்திரன்கள் இல்லை.  சூரியனிலிருந்து பிரிந்த பூமி இல்லை. நீங்களும் நானும் இல்லை.

அதே போல் பிரபஞ்சத்தின் ஆரம்பகாலத்தில் வெடிப்பில் தோன்றிய பிரபஞ்சத்தின் விரிவு வேகம் குறைவாக இருந்திருந்தால் அது சுருங்கி மடிந்திருக்கும். வேகம் சற்று அதிகமாகியிருந்திருந்தால் நட்சத்திரங்கள் இல்லாமல் போய் சாம்பலாகி உதிர்ந்திருக்கும். 

எல்லாவற்றிற்கும் ஏனிந்த தனித் தன்மை?  கடைசியில் மனிதன் தோன்றி இந்தக¢கேள்வியைக் கேட்பதற்காகத்தான் என்கிறார்கள்.

இந்த பிரபஞ்சம் உருவாக எத்தனையோ  சாத்தியக் கூறுகள் உள்ளன. விதிகள் உள்ளன. ஆனால் இந்த ஆரம்பநிலையும் விதிகளும் வேறுவிதமாக இருந்திருந்தால் புத்திசாலி மனிதன் தோன்றியிருக்க மாட்டான்.. இந்தக் கேள்வியே உருவாகியிருக்காது  என்பதே பதில். ( இதை அன்த்ராபி தத்துவம் என்கிறார்கள்)

 ஆனாலும் இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் கடுகு போல் இருக்கும் பூமி ஓர் அற்பமான கிரகம். சூரியக்குடும்பமே இந்த ஸ்பைரல் காலக்ஸியில் ஒரு ஓரத்தில் இருக்கிறது. இவ்வளவு அற்பமான   மனிதனுக்காக  கோடானு கோடி காலக்ஸிகள் உடைய பிரபஞ்சம் உண்டாகியிருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாக இருக்கிறது.  

ஆறடி உள்ள மனிதனுக்காக கோடிக்கணக்கான கேலக்ஸிகள், நட்சத்திரங்கள்.. நம் கண்களுக்கே புலப்படாத  தூரத்திற்கு வான் வெளியில் நீண்டு பரவியிருக்கின்றன என்பது அதிகப்படியானதாகத் தெரிகிறது. எனவே இந்த அன்த்ராபி தத்துவம் அடிபட்டு போய்விடுகிறது. 

 பிரபஞ்சம் எப்படி ஆரம்பித்தது என்ற கேள்விக்கு விடை அளித்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூட ஏன் பிரபஞ்சம் தன்னை ஆரம்பிக்கத் தீர்மானித்தது? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்று தன் தி ஒரிஜன் ஆப் தி யுனிவர்ஸ்  என்ற கட்டுரையின் முடிவில் கூறுகிறார். 

 பிரபஞ்சத்திற்கு ஒரு  விளக்கம் இருக்கிறது. அதை பிரபஞ்சத்தால் விளக்க முடியாத போது.  பிரபஞ்சத்தை விட மேலான ஒரு தத்துவம் தேவைப்படுகிறது. அதைக் கடவுள் என்று சொல்லலாம் என்றால் அந்தக் கடவுளைப் பற்றி விளக்க முடியாது. 

ஒருவேளை கடவுளே தன்னைத் தானே விளக்கிக்  கொண்டால்தான் உண்டு என்பதே ஒரே வழி. 

கடவுள் நம் அறிவதற்கு அப்பாற்பட்டவராக இருக்கலாம் அல்லவா?  எல்லா காரணத்தையும் கடவுள் தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கிறாரா? 

 பரந்த தெய்வமும் பல் உலகும்
 படைத்து அன்று உடனே விழுங்கி 
 கரந்து உமிழ்ந்தது கடந்து
 இருந்தது கண்டும் தெளிய கில்லீர்

 என்று நம்மாழ்வாரைப் போல், அவ்வளவு உறுதியாய் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.  

நவீன விஞ்ஞானிகள் பிராஸஸ் தியாலஜி என்ற முறையில் சிந்திக்கிறார்கள்.
இந்த பிரபஞ்சம் திடப்பொருளும் சம்பவங்களும் மட்டுமல்ல. ஒரு திசையில் செல்லும் நிகழ்வு என்கிறார்கள். 

இருப்பதை விட ஆவது முக்கியம் என்கிறார்கள். எதிர்காலத்தில் நிகழ்வதை, நிகழ்காலத்தில் தீர்மானிக்கப்படாத உலகை அவர்கள் சொல்கிறார்கள்.  சாத்தியக்கூறுகள் பல உள்ளன. இயற்கை அவைகளை தேர்ந்தெடுக்கிறது. ஒரு மலையோ , ஒரு நதியோ , ஒரு மனிதனோ வெறும் அணுத்துகள்களின் கூட்டம் என்று சொன்னால் மட்டும் போதாது  இவை அனைத்தும் சூழ்நிலையைச் சார்ந்த திறந்த அமைப்புகள் என்கிறார்கள்.

மனிதன் என்பவன் அணுக்கூட்டங்களின் தொகுப்பு மட்டுமல்ல.. அவன் ஒரு தகப்பன், ஒரு தலைவன், ஒரு தச்சன், ஒரு கொலைகாரன் என்று அவனுக்கு பலவித அடையாளங்கள் சூழ்நிலைக்கேற்ப உள்ளன. 

முழு உலகும் ஒன்றுடன் ஒன்று சார்ந்த கூட்டமைப்பு என்கிறார்கள். கேயாஸ் தியரி, நான் லீனியர் சிஸ்டம்ஸ் போன்றவை அண்மைக் கால விஞ்ஞானிகளை ஈர்க்கின்றன. 

 ஆல்ஃப்ரெட் வெல் நார்த்வைட் ஹெட் என்ற கணிதவியல் தத்துவாதி,

 “கடவுள் என்பவரின் பொறுப்பு உலகை ஒழுங்குப்படுத்துவது, நேரடியாக இல்லாமல் பல சாத்தியக் கூறுகளை அமைப்பதன் மூலம் செய்கிறார். அவைகளில் ஒன்று பிரபஞ்ச இயக்கத்தை இயற்பியல் விதிகளின்படி செயல்படுத்துவது என்கிறார். 

அவருடைய சிருஷ்டி நல்லதை நோக்கிச் செல்லவேண்டும் என்கிற ஒரே குறிக்கோள் மட்டுமே,  கடவுள் என்பவர் பிரபஞ்சத்தைப் படைத்தது மட்டுமல்லாமல் , அதன் இயக்கத்திலும் முன்னேற்றத்திலும் பங்கு கொள்வது, என்ற சித்தாந்தத்தை முன் வைக்கிறார் வைட். நல்லது நடக்கிறது. பிரபஞ்சம் மெல்ல மெல்ல தன்னை ஒழுங்குப்படுத்திக் கொள்கிறது என்கிறார். 

கடவுள் எல்லாம் தெரிந்தவர் என்றில்லாமல், பிரபஞ்சத்தின் மாறுதல்களை உண்டாக்கி அதை நடத்திச் செல்பவர் என்கிறார். 

 மனித உயிர் இவ்வளவு சிறப்பாக பரிணமித்து வந்தருப்பதைப் பார்க்கும் போது இது உண்மையாக இருக்கலாம் என்றுத் தோன்றுகிறது. 

 கடவுள் பற்றிய முழு உண்மையை மனித மனதால் அறிந்து கொள்ளமுடியாது என்றேத் தோன்றுகிறது. காரணம் மனிதனுக்கு எல்லைகள் உள்ளன.

மனிதன் மெல்ல மெல்ல விஞ்ஞான கண்டுபிடிப்பால் மேலேறிக்  கொண்டிருந்தாலும் கண்ணால் பார்க்கக்கூடியவை ஒரு அலை அகலம் மட்டுமே. காதால் கேட்கக்கூடியவை சில ஒலி அலைகளை மட்டுமே. மனதால் எண்ணக்கூடியவை அறிவின் எல்லைகளுக்கு உட்பட்டவை மட்டுமே. 

கடவுள் பார்க்காத காட்சியாக, கேட்காத கானமாக, புரியாத வார்த்தையாக இருக்கலாம் அல்லவா? 

 பிரபஞ்சத்தின் ரகசியத்தை நாம் அறிந்தாலும் அது நம்அறிவிற்குப் புரியாது. ஜேம்ஸ் ஜீன்ஸ் என்னும் பிரிட்டிஷ் வானவியலாளர்,  பிரபஞ்சதில் ஒரு காரணமும், பொறுப்பும், ஒரு நோக்கமும் இருப்பதைப் பார்க்கிறோம் அந்த சக்திக்கு நம் மனித மனம் போல் ஒரு குணம் இருப்பதாகத் தெரிகிறது. 

மனித மனம்  அழகுணர்ச்சி, பாசம், நீதி போன்ற வற்றை எப்படி சிந்திக்கிறதோ அப்படியே கடவுளும் சிந்திருக்கலாம் என்று கூறுகிறார். 

கடவுளுக்கு ஒரு மனம் இருக்கிறது என்பதை பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.  கடவுளே ஒரு மனம் தானோ என்று வியக்கிறார்கள். 
  
நம்மாழ்வார் கூறுவைதைப் போல்
  
அவரவர் தமதமது அறிவளி வகைவகை
அவரவர் இறையவர் என் அடி அடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே..

 அவரவர் தங்கள் தங்கள் அறிவு அறியும் வகையில் கடவுளைக் காண்கிறார்கள். இதில் எதுவும் தப்பில்லை அவரவர் விதிகளின் படி அடைய முடியும். 

இதில் அணுவிஞ்ஞானிகளையும் சேர்க்கமுடியும், கடவுள் இல்லை என்பவர்களையும் சேர்க்க முடியும்.

அறிவியல்  கணிதக் கோட்பாடுகளால் முழு உண்மையை அறிய முடியாது என்பதே உண்மை. 

 மனதால் அறிய முடியாத உண்மைகள் இருக்கலாம். அறிவால் விளக்கமுடியாததாய் , விளக்கம் முழுமைபெறாமல் இருக்கலாம். ஆனால் உணர்ந்து கொள்வது மட்டுமே சாத்தியப்படலாம்.

இதை மிஸ்டிக் நாலெட்ஜ் என்கிறார்கள். விளக்கமில்லாமல் உணர்ந்து கொள்வது. 

 மிகச்சிறந்த சிந்தனையாளர்களான ஐன்ஸ்டீன், பாலி, ஹைஸன் பர்க், ஷ்ரோடிங்கர், எடிங்டன், ஜீன்ஸ் எல்லோரும் உணர்வு பூர்வமாக உண்மை அறிதலைப் பற்றி பேசியிருக்கிறார்கள். 

 அவர்கள் சொல்வதன் சாரம் இதுதான். 

விஞ்ஞானத்தால் ஓரளவுக்கு  விளக்கங்களைச் சொல்ல  முடியும்.

இந்த பிரபஞ்சம் எப்படி எவ்வாறு தோன்றியது என்பதற்கு பதில் கூற முடியும். ஆனால் ஏன் என்ற கேள்விக்கு பதில் கூறமுடியாது. அறிவியலும், தர்க்க சாஸ்திரமும் , கணித சாஸ்திரமும் இங்கே தோற்றுப்போகின்றன. 

அதை வேறுவிதமாகத்தான் உணர முடியும். சிலர்  மனதில் உள்ளே ஏற்படும் வினோத அமைதி என்கிறார்கள். ஐன்ஸ்டீன் அதை காஸ்மிக் ரிலீஜியஸ் ஃபீலிங் என்கிறார். 

இந்த ஆன்மிக அனுபவம் பிரபஞ்சம் முழுவதையும் கடவுளுடன் சேர்ந்து பார்க்கும் ஓர் அனுபவம் என்கிறார்கள். உண்மையுடன் ஏற்படும் ஓர் தொடர்பு. வார்த்கைள், கணித குறியீடுகள், அறிவியல் சூத்திரங்கள் போன்ற இடைத்தரகர்கள் இல்லாமல் ஏற்படும் ஓர் தரிசனம் என்கிறார்கள். 
            
  கடவுள் எப்படி இருப்பார்? 

 அவன் ஆணல்லன் பெண்ணுமல்லன் அல்லா(து) அலியல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லானுமாம்
கோணை பெரிதுடைத்து எம்பெம்மானைக் கூறுதலே
             
                                                                                                             -  நம்மாழ்வார்

அவன் ஆண் அல்ல, பெண்ணும் அல்ல, நபும்சகனும் அல்ல. காணவும் இயலாதவன், உள்ளவன் அல்ல.. இல்லை யெனவும் முடியாது.  நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படியே ஆகிறவன்.. அவனை விளக்குவதும் மிகவும் கடினமான நிலையாகும்.  

ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலம் 90வது   பாடலில் பத்து மந்திரங்கள் உள்ளன. இதை  புருஷ சூக்தம் என்பர். சில மாறுதல்களுடன் யஜூர் சாம  அதர்வண வேதங்களிலும் உள்ளது.  

இதில் புருஷன் என்பவரைப்பற்றி பேசப்படுகிறது. நம் இந்து மதத்தில் கடவுள் தத்துவங்களின் ஆதாரம் இதுதான். 

 ஆயிரக்கணக்கான தலைகள் உள்ளவர். ஆயிரக்கணக்கான கண்கள் உள்ளவர். ஆயிரக்கணக்கான பாதங்கள் உள்ளவர். அவர் பூமியெங்கும் வியாபித்தவர். பத்துவிரல்களால் எண்ணமுடியாத எண்ணிக்கை வடிவில் உள்ளார்.  எது முன்பே இருந்ததோ? எது இனி வரப்போகிறதோ, எது இப்போது காணப்படுகிறதோ எல்லாம் பரமபுருஷனே. 

சாகா நிலைக்கு ஈசனாக இருப்பவரும் பரமபுருஷனே.  எது அன்னமயமான இப்பிரபஞ்சத்தால் மறைவிலிருந்து வெளிப்படுகிறதோ அதுவும் புருஷனே. இங்கு காணப்படுபவை எல்லாம் அவருடைய மகாத்மீயமே. இவையனைத்தைக் காட்டிலும் அப்பரமபுருஷனே அதிகமானவர்.  உண்டானவை கால் பாகம். முக்கால்பாகம் அழிவற்றதாய்  அவருடைய பரமபதத்தில்  இருக்கிறது. இவ்வாறாய் நம்முன்னோர்கள் அவரை  விவரிக்க முயன்றிருக்கின்றனர்.  நம்மாழ்வார்..

திடவிசும்பு எரிவளி நீர் நிலம் - இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் 
அவைஅவைதொறும்
உடல்மிசை உயிரெனக்
கரந்தெங்கம் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை 
உண்ட சுரனே.     என்று விளக்குகிறார்.

 விண்வெளி, தீ, காற்று,  நீர், நிலம் இவைகளை ஆதாரமாய் கொண்ட பொருள்களில் மறைந்து, உள்ளேயும், வெளியேயும் வியாபித்து, வேதத்தில் உள்ளவனாவான். இவைகளை உண்டவனும் அவனே. 

  கடவுளைப் பற்றி உபநிஷத்துகளும் சிந்திக்கின்றன.  உபநிஷத்துக்களில் பத்து உபநிஷத்துக்கள் முக்கியமானவை. இவைகள் சிலவற்றில் இன்றைய  விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தைப் பற்றி கேட்கும் கேள்விகளும் இடம் பெற்றிருக்கின்றன. 

யஜூர் வேதத்தில் உள்ள ஈசோப உபசநிஷத், “ஈசா வாஸ்யம் இதம் சர்வம்” என்று துவங்குகிறது.  அனைத்தும் ஈசன் வசிப்பதற்கு.   வஸ்யம் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று அணிவது.   எல்லாமே ஈசனை அணிந்தது.  

 கேனோபநிஷது சாம வேதத்தைச் சேர்ந்தது.  அது இப்படி ஆரம்பிக்கிறது.

யாரால் விதிக்கப்பட்டு மனம் அதன் இலக்கை அடைகிறது?

யாரால் செலுத்துப்பட்டு வார்த்தை இயங்குகிறது?  கேட்பதனையும் பார்ப்பதையும் யார் அமைத்தது? என்று கேட்டுவிட்டு.

கேட்பதின் கேட்பது, மனதின் மனது, வார்த்தை கடந்த வார்த்தை, உயிரின் உயிர், பார்வையின் பார்வை இதை தெரிந்தவர்கள் சாவதில்லை என்று  தொடரும்போது கேட்பது, பார்ப்பது, சிந்திப்பது இவைகளுக்கெல்லாம் அப்பால் உள்ளதை எண்ணத் தூண்டுகிறது. 

அங்கு பார்வை செல்வதில்லை. வார்த்தை செல்வதில்லை, மனமும் செல்வதில்லை. அதை எப்படி அறிந்து போதிப்பது. அது நமக்கு தெரியவில்லை. காரணம் அது தெரிந்ததல்ல. தெரியாததுமல்ல. அதற்கும் மேற்பட்டது. அப்பாற்பட்டது, வார்த்தைகளால் அறியப்படாதது, விவரிக்கப்படாதது, வார்த்தைகளை அறிவது அதுதான் பிரமன். 

கண்ணால் பார்ப்பதல்ல, பார்வையால் பார்ப்பது. காதால் கேளாததல்ல, கேட்பதைக் கேட்பது. 

சுவாசத்தைச் செலுத்துவது  அதுதான் பிரம்மம்.  என்கிறது கேனோஉபநிஷத். கடவுள் என்பதை ‘தத்’  அது என்ற ஒரே வார்த்தையில் அதன் குணங்களை யோசித்துப் பார்த்திருக்கின்றனர். 

  உளன் எனில் உளன் அவர்
 உருவம் இவ்வுருவுகள்
  உளன் அலன் எனில் அவன்
 அருவம் இவ்வுருவுகள்
 உளன் என இலன் என அவை
 குணம் உடைமையில்
  உளன் இரு தகைமையொடு
 ஒழிவிலன் பரந்தே 

 இறைவன் இல்லை யென்று சொன்னாலும், இருக்கிறான் என்று சொன்னாலும் அவன் இருக்கிறான்.உளன் அலன் என்ற இரண்டு குணங்களையும் உடையவன் என்பதால் அவன்  உருவமுள்ளது, உருவமற்றது  எல்லாமே அவனது ஸ்தூல சூட்சும  சரீரமுமாகும். அவன் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் உள்ளான்  என்கிறார் நம்மாழ்வார். 

 யானும் தானாய் ஒழிந்தானை
 யாதும் எவர்கட்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பிணைந்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
ஆமுதம் ஆகித் தித்தித்து என்
ஊனின் உயிரில் உணர்வினில் 
நின்ற ஒன்றை நான் உணர்ந்தேனே.

 வேதம் உபநிஷதம் யாத்த பெரியோர்களும், நம்மாழ்வார் போன்றோர்களும் மிஸ்டிக் என்ற அனுபவத்தின் மூலம் தான் கடவுளை கண்டுணர்ந்தார்கள். இந்த மிஸ்டிக் அனுபவம் வாழ்நாளில் கிடைக்கப்பெறுபவர்கள் பாக்கியசாலிகள்.

அவர்களுக்கு இந்த அனுபவத்திற்குப் பிறகு எந்த சந்தேகமும் எழுவதில்லை. மற்றவர்கள் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகத்தில் வாழ்நாளை கழிக்கின்றனர். 

 எனவே அவரவர் அவரவர் தங்களின் அறிவிற்கெட்டியபடி கடவுளைக் காண்கிறார்கள். கடவுளை அடைகிறார்கள். 

  எனவே கடவுள் இருக்கிறாரா? என்றக் கேள்விக்கு அறிவியலின் பதில்  இருக்கலாம்! ஆன்மிகத்தின் பதில் இருக்கிறார்!!

    என் பதில் -  கடவுளைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்! 


( திரு சுஜாதா ரங்கராஜன் அவர்களின் நூலிலிருந்து சுருக்கமாய் தொகுத்தது- Mathivanan) 

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...