ads

Saturday 28 April 2012

நட்சத்திர பழமொழிகள்

படிச்சு வாங்கின பட்டம் இல்லைனாலும் அடிச்சு சொல்லலாம் நம் முன்னோர்கள் அறிவாளிகள்.

சிரிக்க  மட்டும்  இல்லை, சிந்திக்கவும் வைத்தவர்கள். ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்தான்.

அதிசயமான ஊர்ல ஆம்பிள பிள்ளை பிறந்துச்சாம், தொப்புள் கொடி அறுத்தவுடனே கப்பல் ஏறி போச்சுதாம் - நக்கல்.

அக்காள் இருக்கிற வரைதான் மச்சான் உறவு- யதார்த்தம்

அரிசி கொடுத்து அக்காள் விட்டில் என்ன சாப்பாடு- கேள்வி

என்னை கெடுத்தது நரை. என் மகளை கெடுத்தது அழகு- சோகம்

இப்படி வாழ்க்கையின் எல்லா நிலையிலும் பழமொழியை சொன்னவர்கள் நம் முன்னோர்கள். ஜோதிடத்திற்கு மட்டும் சொல்லமால் இருப்பார்களா. இப்ப அந்த பழமொழியைத்தான் பார்க்க போகிறோம்.

பார்ப்போமா?

பரணி தரணி ஆளும்.   

தரணின்னா உலகம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த உலகத்தையே ஆழ்வார்களாம்.

உலகத்தை ஆள்கிறார்களோ இல்லையோ, சுற்றி இருக்கிற சமூகத்தில், சார்த்து இருக்கிற நண்பர்கள் உறவுகள் மத்தியில் அவருக்கு என்ன கவலைன்னு சொல்கிற மாதிரி ஒரு வாழ்க்கை அமையுமாம். அதைதான் இப்படி சொல்றாங்க.

ரோஹிணியில் பிள்ளை வந்தா ரோதனை மாமனுக்கு 

என்னவாம்?

ரோஹிணி கிருஷ்ணன் பிறந்த நட்சத்திரம். கிருஷ்ணன் பிறந்து மாமனை கொன்னானோ இல்லையோ...அதான் சொல் வழக்கா வந்துடுத்து.

தாய் மாமனுக்கு ஆகாதாம்.  கொலைவெறி பிடிச்ச பிள்ளை, மாமன் தலைமுறை விளங்கவிடாம பண்ணுமாம்.

உண்மையாவா?

ஊருக்குள்ள அப்படிதான் பேசிக்கிறாங்க. ஆனால் உண்மையில்லை. அது சும்மா?

கொண்டவன் ஆத்தாளை கொண்டே போய்டும் ஆயில்யம்.

இது என்ன கரடி?

கொண்டவன்னா... கல்யாணம் செய்து கொண்ட ஆண்மகன்.  அதாவது கட்டிகிட்ட புருஷன்.

ஆத்தான்னா... அவரோட அம்மான்னு அர்த்தம். இதனால் நமக்கு சொல்ல வருவது என்னவென்றால்... மாமியாருக்கு ஆகாது.

ஆகாது மீன்ஸ்.. மாமியாருக்கு கண்டம்.

இதாவது உண்மையா?

நிறைய மாமியார்... பூவோடும் பொட்டோடும், தீர்க்க சுமங்கலியாய் இருக்காங்க.  இன்னும் விளக்கம் வேணுமா?

மகத்து பிள்ளை ஜகத்தை ஆளும்.

இது என்னவோ?

ஜகம்னா உலகம். மகத்தில் பிறந்த பிள்ளைகள் செல்வத்தோடும், செல்வாக்கோடும், தன்னை சார்ந்தவர்கள் மத்தியில் உள்ளூர் MLA மாதிரி உலா வருமாம்.

நிஜாமாவா?

உண்மையா சொல்லபோனால்... தான் எண்ணற்ற எண்ணம் கொண்டவர்கள். தன்னால் முடியும் என்று நினைப்பவர்கள்.  கர்விகள்.

கர்விகள்னா?

கர்வம். மற்றவர்கள் பார்வையில் தலைக்கனம். நான் சொல்லலை அப்படி. பேசிக்கிறாங்க.

அனுசத்திலே மனுஷன் பிறக்கவே கூடாது.

ஏன்?

அனுஷம் சனியோட நட்சத்திரம்.

சனி யாரு?

பாடு பட்டு உழைச்சா பலனில் பாதியை கொடுக்கும் பண்ணையார்.  நூறை எதிர்பார்த்தால் ஆறஅமர 50 அம்பது கொடுக்கும் முதலாளி. அங்கேதான் சந்திரன் நீசமாகிறார்.

நீசம்மா என்ன?

சுத்தமா பவர் போச்சுன்னு அர்த்தம். மனசுல கவலைப்பட ஒரு காரணம் இருந்து கொண்டே  இருக்கும். ஒன்னு போனா ஒன்னு வரும். ஒரு கவலை தீர்ந்தா மறு கவலை வரும்.

மொத்தத்தில் எதிர்காலம் புதிர்காலமாய் காட்சி அளிக்கும்.

உண்மையா?

இது நிஜம்தான்.

கேட்டையில் பிறந்த  பொண்ணு கோட்டையை கட்டினாலும் கட்டுவா? அழிச்சாலும் அழிப்பா.

விளக்கம் தருக.

கோட்டைங்கிறது என்ன?

கௌரவம், அந்தஸ்த்து, புகழ், செல்வாக்கோடு வாழ்வது என்று பொருள். கேட்டை நட்ச்சதிரத்தில் ஒரு பொண்ணு பிறந்தால்,  அவளுக்கு அமைந்த கிரக அமர்வை பொறுத்து,  மெல்ல மெல்ல உயர்ந்து நல்ல வாழ்க்கையை வாழலாம்.

அல்லது....

அவள் பிறந்த பிறகு வாழ்வாங்கு வாழும் அவள் குடும்பம் நலிந்து ஏழ்மை நிலையை அடையலாம். எதுவாக இருப்பினும் கிரக நிலையே காரணம். ஓகே...

ஆண் மூலம் அரசாலும், பெண் மூலம் நிர்மூலம்

மூலம் என்பது ஆஞ்சநேய பெருமான் பிறந்த நட்சத்திரம். சர்வ வல்லமை பொருந்திய வாயு புத்திரன் மாதிரி தடாலடி செயல்பாடு நிறைந்தவர்கள்.  ஆண்களாக இருந்தால் கூட சரி தொலையுது என்று விட்டு விடலாம்.

அதுவே பெண்களாக இருந்தால். யோசிச்சு பாருங்க சொர்ணக்காவை. வீடு தாங்குமா. பொறுந்து போக முடியுமா?  

கல்யாணம் ஆகி போகுதுன்னு வச்சுக்கோங்க. போன அன்னைக்கு வச்சுருந்து புதன் கிழமை பார்த்து அனுப்பி விட்டுடுவாங்க.

பூராட பொண்ணு உறவாடாது. 

அதாவது பூராடத்தில் பிறந்த பொண்ணு  சுதந்திர பிரியர்கலாம்.  கூட்டு குடும்ப வாழ்க்கைக்கு ஆகவே ஆகாதாம். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு போற பொண்ணுங்க என்கிறார்கள். ஆனால் நடைமுறைக்கு ஒத்தே வரலை.

உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் முனையில் கொஞ்சம் நிலமும் இருந்தால் வாழக்கையில் ஒரு கவலையும் இல்லை. 

எவ்வளவு ஏழ்மையான  குடும்பமாக இருந்தாலும், இந்த நட்ச்சதிரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்த குடும்பம் வளருமாம். அந்த தலைமுறையில் இருந்து வறுமை இல்லாத வாழ்க்கை அமையுமாம்.

அவிட்டத்தில் பிள்ளை பிறந்தால் தவிட்டு பானை எல்லாம் தங்கமாகும்.

தவிட்டு பானை என்பது என்ன. மாட்டு தீவனம். அதை என்ன பொட்டியில் வைத்தா பூட்டி வைக்க  போறாங்க. அது எங்காவது ஒரு ஓரத்திலே இருக்கும்.

அந்த பானை எல்லாம் தங்கமாக இருக்கும் என்றால், வீட்டுக்குள்ள வைக்க இடம் இல்லை என்றுதானே அர்த்தம்.  ஒரு அதிஷ்ட நட்சத்திரம் அவ்வளவுதான்.

எல்லா பழமொழியும் நடை முறைக்கு ஒத்து வரும் என்று சொல்வதற்கில்லை. 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...