ads

Wednesday 4 April 2012

BLOCK MONEY / கருப்பு பணம்.

மக்கள் கூடும் இடமெல்லாம் இதை பற்றி பேசினார்கள்.  ஐயம்பேட்டை கலியபெருமாள் அமெரிக்க அதிபருக்கே சவால் விடும்,  தெருமுனை பிரச்சாரங்களில் கூட  இதை பற்றி அதிகம் பேசப்பட்டது. 

மத்திய அரசே.... மத்திய அரசே... அந்த கருப்பு ஆடுகளின் பட்டியலை உடனே வெளியிடு என்ற கட்டளையும்,  பறிமுதல் செய் என்ற உத்தரவும் போட்டார்கள். 

பிரபுதேவா  நயன்தாரா  காதல் முறிவிற்கு என்ன காரணம்?  என்று ஆராட்சி செய்த பத்திரிக்கைகள், திடுக்கிட்டு விழித்து  எட்டு கால பத்தியில் செய்தியை இடம் பெற செய்தது.

அது......

கருப்பு பணம்.  சுவிஸ்வங்கி.

இது ஒன்னும் புதுசா புறப்பட்ட பூதம் இல்லை. பல வருஷமா பேசப்படும் விஷயம்தான் இது.   இதற்கு ஆக்கபூர்வமாக இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க பட்டதில்லை. இருக்கட்டும். 

சுவிஸ்வங்கி.

வங்கி சேவையில் தனக்கென தனி இடம் படிக்க நினைத்த சுவிஸ்வங்கி,  வாடிக்கையாளரை கவர புது உத்தியை கொண்டு வந்தது.  

ஐயா வாங்க.... அம்மா வாங்க .... எங்க வங்கியில் கணக்கு வையுங்க என்று கூவி அழைக்காத குறை.

தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய விவரம் படு ரகசியம்.  உங்க அப்பன் ஆத்தா இல்லை,  அந்த ஆண்டவனே வந்து கேட்டாலும் சொல்லமாட்டோம். 

அதோடு ரகசிய   குறியிடுகள்,  சங்கோஜ மொழி என்ற அடிப்படையில் கணக்கை அணுக முடியும்.   இதுதான் கருப்பு பணம் வைத்திருப்போரை கவர்ந்து இழுக்கும் அம்சங்கள். 

இப்போது கூட கடுமையான சட்ட திட்டங்களை பயன்படுத்தி,  பணம் வைத்திருப்போரின் பட்டியலை கேட்க முடியுமே தவிர,  சுவிஸ் வங்கியிடம் பணத்தை கொடு என்று கேட்க முடியாது.

உள்ளூர் முதலைகளை பிடித்து,  கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் மட்டுமே,  பணத்தை இந்தியா கொண்டு வர முடியும்.

சரி..... இந்த பணம் எப்படி எப்படி சுவிஸ் வங்கிக்கு ரெக்கை கட்டி பறந்தது?

இதற்கு பல வழிகள், பல முறைகள்.

ஹாவாலா....பாமரத்தனமாக  சொன்னால் உண்டியல்.   இதில் வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா? வெளி நாட்டில் இருந்து இந்தியாவிற்கு பணத்தை கொண்டு வர முடியும்.

ஆனால் இந்தியாவில் இருந்து பணத்தை வெளி நாட்டிற்கு கொண்டு போக முடியாது.  மீறி கொண்டு போக வேண்டுமானால் ஆயிரம் சட்ட சிக்கல் இருக்கிறது.  தகுந்த காரணங்கள் சொல்ல வேண்டும்.  மிக கடுமையான நடைமுறை பின்பற்ற படுகிறது.

இருந்தாலும் வல்லவன் வெட்டிய வாய்க்கால் வடக்கேயும் பாயும், தெற்கேயும் பாயும் என்பது போல்,  ஹாவாலா மூலம் பண பரிவர்த்தனைகள் நடக்கிறது.

உதாரணமாக... வெளி நாட்டில் வேலை செய்யும் ஒருவர் அல்லது வெளி நாட்டில் தொழில் செய்யும் ஒருவர் சம்பாதித்த பணத்தை ஊருக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கும் முறைதான் உண்டியல்.

இது நம்பிக்கயின் அடிப்படையில் நடத்தப்படும் ரகசிய வங்கி.  உலகத்தின் எந்த மூளையில் இருந்தும் பணம் அனுப்பலாம்.  இதற்கு நோட்டு சீட்டு எல்லாம் கிடையாது.

நம்பிக்கைதான் மூலதனம்.  நம்பினால்  உங்கள் வீட்டுக்கு பணம் வந்து சேர்ந்துவிடும்.   இந்த முறை மூலம் பல லட்சம் கோடி ரூபாய்கள் இந்தியாவிற்குள் மாதம் தோறும் வருகிறது.

சட்ட பூர்வமாக ஊருக்கு அனுப்ப வேண்டுமானால்,  வெஸ்டன் யூனியன் மூலம் அனுப்பலாம்.  என்றாலும் அங்கே கட்டுபாடுகள் அதிகம்.  ஒருவர் அதிக பட்ச்சமாக ஒரு முகவரிக்கு வருடத்திற்கு 12 முறைதான் பணம் அனுப்ப முடியும்.

அதிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அனுப்ப முடியாது. இப்படி ஏகப்பட்ட தொல்லைகள் இருக்கிறது.  அதனால் டோர் டெலிவெரி செய்யும் உண்டியல் முறைக்கு பலர் தாவி விட்டார்கள்.

சரி... இந்தியாவில் இருந்து எப்படி பணம் போகிறது?

இந்த உண்டியல் முறைதான்.  இன்னும் கூடுதலாய் சில  வழிகள் இருக்கிறது.

அது இந்தியாவில் கால் பதித்து இருக்கும் வெளி நாட்டு வங்கிகள் ஒரு காரணம்.

உதாரணமாக அமெரிக்காவில் இருந்து ஒரு நிறுவனம் இந்தியாவில் தொழில் துவங்குகிறது.   தொழில் துவங்கிய பிறகு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு  சம்பளம் கொடுக்க, நிர்வாக செலவுகளுக்கு தேவையான பணத்தை பெற,  சம்பளம் பெரும் தங்கள் நாட்டு ஊழியர்கள் சேமித்து வைக்க, எங்கள் நாட்டுக்கு அனுப்ப,  எங்கள்  நாட்டு வங்கி கிளை ஒன்றை இந்தியாவில் அமைத்து கொள்கிறோம் என்கிறார்கள்.

அட ... இது கூட நியாயம்தான் என்று மத்திய அரசு அனுமதி அளிக்கிறது.  இந்த வங்கிகள் ஆன் லைன் மூலம் செயல்படுவதால்,  இந்தியாவில் உள்ளவர் இங்கே பணத்தை போட்டு விட்டு அமெரிக்காவில் போய் பணத்தை எடுப்பது சுலபம்.

உலகம் முழுவதும் பயன் படும் கிரிடிட் கார்டுகள் கூட இதற்கு துணை போகிறது.

இது என்ன சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை எப்படி கொண்டு செல்லபடுகிறது?  அடுத்த கேள்வி எழுகிறதா?

ஒரு அரசியல்வாதியோ,  அல்லது  தொழில் அதிபரோ ரஷ்ய நிறுவனத்துடன் வர்த்தக பரிமாற்றம் வைத்து கொள்கிறார் என்று வைத்து கொள்வோம்.  அந்த வர்த்தகத்தை சுமுகமாக முடித்து கொடுத்ததற்கு அந்த நிறுவனம் சம்மந்த பட்டவருக்கு ஒரு அன்பளிப்பை கொடுக்கிறது.

அதுதான் லஞ்சம்.  அப்படி குறுக்கு  வழியில் வந்த பணத்தை உள்ளூர் வங்கியில்  முதலீடு செய்தால்,  பணம் வந்த வழியை பற்றிய பயடட்டோவை கேட்டு வருமான வரித்துறை வந்துவிடும்.

அதனால் அந்த பணத்தை சுவிஸ் வங்கியில் முதலிடு செய்கிறார்கள்.  தேவை பட்டால் அந்த ரஷ்ய நிறுவனமே ஏற்பாடு செய்து கொடுக்கும்.  உண்டியல் முறையில் உள்ள நம்பகத்தன்மை தான் இங்கும்.

சரி... உள்நாட்டில் கொள்ளை அடித்த பணத்தை சுவிஸ் வங்கிக்கு எப்படி கொண்டு போகிறார்கள்?

google இல் போய் தேடி பாருங்கள்.  சுவிஸ் வங்கியில் கணக்கு துவங்குவது எப்படி என்று.  போன் நம்பரில் இருந்து ஈமெயில் முகவரி வரை இருக்கிறது.

சரி... விஷயத்திருக்கு   வருவோம்.

சுவிஸ் வங்கியில் ஒரு லட்சம் ட்ரில்லியன் டாலருக்கு மேல் இந்தியர்களின் பணம் இருக்கிறதாம்.  இதை பற்றி கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்கெல்லாம் போட்டு,  இந்த பணத்தை பறிமுதல் செய்தால் இந்திய குடி மகன் ஒவ்வொருவருக்கும் தலா.... 2 .5 லட்சம் ரூபாய் தரலாம் என்கிறார்கள்.

அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு இந்தியாவின் மொத்த பஜ்ஜெட்டையும் இந்த பணத்தை வைத்து போட்டு விடலாம் என்கிறார்கள்.

இந்த பணம் அப்படியே இந்தியாவிற்குள் கொண்டு வந்தால்,  வல்லரசாக இருக்கும் அமெரிக்கா,  வளரும் நாடுகள் வரிசையில் இருக்கும் இந்தியாவிற்கு பின்னால் போய் விடுமாம்.

டாலர்களில் முதலீடு செய்த பல கோடிஸ்வரர்கள்,  ஒரே நாளில் பிச்சைகாரர்களாக மாறி விடுவார்களாம்.

இதெல்லாம் புள்ளி விவரங்கள்.

இப்படி ஆயிரம் கதைகள் சொல்லும் பொருளாதார மேதைகள்,  கருப்பு பணத்தை தடுக்க என்ன வழி என்பதை பற்றி யோசிக்கவே இல்லை.

நம் நாட்டின் பொருளாதார மேதைகளை பற்றி நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அலுவாலியா.

நகர்புறத்தில் நாள் ஒன்றுக்கு ரூபாய்  32 ம்,  கிராமபுறத்தில் நாள் ஒன்றுக்கு 26 ம் ,  வருமானம் ஈட்டினால் அவர் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர் என்று சொல்லும் அதி புத்திசாலிகளை வைத்து கொண்டு ஒன்னும் செய்ய முடியாது.

முதலில் வருமான உச்சவரம்பை அதிக படுத்த வேண்டும்.  கடுமையான வரி விதிப்பை மாற்றி அமைக்க வேண்டும்.  வரி செலுத்தும் முறை எளிமையாக்க பட வேண்டும்.

நேர்மையாக சம்பாதிக்கும் ஒருவர் கூட ,  அதிக பட்ச வரி கட்ட வேண்டும் என்ற நிலை வரும் போது,  ஏமாற்ற நினைக்கிறார்.  அரசாங்கம் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

நாடு முழுவதும்  வாங்கும் பொருளுக்கு பில் போடும் பழக்கம் வந்தே ஆக வேண்டும்.

அரசாங்க ஊழியர்கள்  மாதிரி,  தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கும் சம்பளம் வங்கிகளின் வழியாக செல்லவேண்டும்.  எல்லா நிலையிலும் இது கடை பிடிக்க படவேண்டும்.

குறிப்பாக மக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதை விட முக்கியமாக நேர்மையானவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.  வந்தால் கருப்பு பணத்தை தடுக்க முடியா விட்டாலும்,  குறைக்க முடியும்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...